விள்ளற் கரியவளே அனைத்திலும் மேவி யிருப்பவளே!
ஆடிமாதம் பிறந்தது அம்மன் அருள் சேர்ந்தது ஆனைமுகன் தாயே அன்பு வணக்கம் அகிலமெல்லாம் உன்பேர் சொல்லி மணக்கும்!
வான ஊஞ்சலிலாடும் மழலை நிலவு - என் விழியோரம் பனித்துளி ஆனந்த நிலவு!
பக்தி உணர்வில் அகிலம் படைத்து மகாசக்தி பக்தியில் உருகி வாழ்கிறாள்!
எங்கும் நிறைந்தாள் சக்தி என்னுள் உறைந்தாள் சித்தம் எனக்கானாள் சக்தி சிந்தையில் ஒளிர்ந்தாள்!
அன்பு அறிவு ஞானம் சக்தி அள்ளி வழங்கும் அன்னை!
கருத்தில் என்றும் மலர்வாள் காவலாய் துணை வருவாள்!
மனதின் நினைவுகளும் மவுன மொழியும் சக்தி!
உணர்வால் கட்டிய உள்ளக்கோயில் நாயகி சக்தி!
பூமியாய் பொறுமை காப்பாள் புகழ்மந்திர புன்னகை பூப்பாள்!
பொன்மனம் சக்தியின் தர்ம உருவம் பொற்பாதம் சத்திய வடிவம்!
நீராய் பெருக்கெடுத்து உயிர் தாகம் தீர்ப்பாள் நிறைந்த ஞானம் சேர அறிவு தாகம் வளர்ப்பாள்!
சக்தியே அண்ட சராசரம் சக்தியே சகல உயிரும் சக்தியே இயக்க தத்துவம் சக்தியே அழிவும் ஆக்கமும்!
சக்தியெனில் ஆற்றல், போற்றல் சக்தியெனில் செழுமை, வளமை சக்தியெனில் திறமை, பசுமை சக்தியெனில் இம்மை, மறுமை!
சக்தியெனும் நிழல் சோலை சூட்டிடுவேன் கவிமாலை ஆடிவரும் அம்மன் தரிசனம் நாடிபெறுவோம் அவள் கரிசனம்!
விஷ்ணுதாசன் படங்கள்-மது ஜெகதீஷ்
|