ஜல்லிக்கட்டு சூழ்ச்சியின் பின்னணியில் ஒரு நடிகை!



மறக்க முடியுமா அந்த மகத்தான போராட்டத்தை? கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை, தமிழர் கடற்கரை ஆனது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை காப்பாற்ற கூடினர். மத்திய, மாநில அரசுகளை அசைத்தது போராட்டம். தங்கள் மரபை மக்கள் கூடி மீட்ட இந்த வரலாறுதான் ‘மெரினா புரட்சி’ என்கிற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.

நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ளார். யூட்யூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் நேரடியாகப் பங்கெடுத்த நவீன், சுருதி உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு வேல்ராஜ். இசை அல்ருஃபியான். இந்தப்படம் தணிக்கை அதிகாரி களால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, ஒரு வழியாக ‘யூ’ சான்றிதழ் பெற்று, ரிலீஸுக்கு ரெடி ஆகி இருக்கிறது.

இந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குநர் எம்.எஸ்.ராஜ் பல விறுவிறுப்பான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.“படத்தில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறீர்கள்?”

‘‘2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி யாக போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வர வழைத்தது வெறும் பதினெட்டு இளைஞர்கள்தான் என்பது பலருக்கும் தெரியாது. இவர்கள் திரைத் துறையைச் சார்ந்தவர்களோ, எந்த இயக்கத்தையோ, அமைப்பையோ சார்ந்தவர்களோ அல்ல. அந்த பதினெட்டு பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என்பதை இந்தப் படத்தில் விறுவிறுப்பாக, யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக சொல்லி இருக்கிறோம்.”

“சென்சாரோடு என்ன பிரச்சினை?”

“எனக்கு என்ன சார் பிரச்சினை? இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்தப் போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியமா எப்படி முறியடித்தார்கள், கடைசிநாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பது தான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல. பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது, அந்தப் பணத்தைக் கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன்மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்தத் தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப்படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளேன்.

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை அடையாளம் காட்டியுள்ளேன். அவரைப்பற்றிய உண்மை தெரிய வரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம், ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் எனக் கூற முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள்தான். அவர்கள் யாரென்பதை படத்தில் பகிரங்கப்படுத்தியிருக்கிறேன்.

இதுமாதிரி காரணங்களாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். மறுசீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதேபோன்று சில காரணங்களைச் சொல்லி கையை விரித்துவிட்டார்.வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவைத் தட்டினோம். இந்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், ஜனவரி 17ஆம் தேதி இரண்டாவது மறு சீராய்வுக் குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தைப் பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள்.

ஆனால், இந்தப்படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும். பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாகக் கூறினோம். இந்தப் படத்தைப் பார்த்த அதிகாரிகள் மத்திய அரசு என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் மியூட் பண்ணச் சொன்னார்கள். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் மியூட் செய்துள்ளோம். ஆனால் அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி இதோ இப்போது மே மாதம்தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எந்த காரணத்தைக் கொண்டும் மத்திய அரசையும் பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப்படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்யமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது.”

“சென்சாரிலேயே அவ்வளவு போராட்டம். இன்னும் ரிலீஸுக்கு என்னென்ன தடைகள் வருமோ?”

“வருமோ என்ன, வந்துவிட்டது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் வருகிறோம். அமெரிக்காவில் உள்ள தமிழரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப்படத்தை வெளியிடு வதற்காகவே ஜெ ஸ்டூடியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக்காட்சியாக திரையிட்டார். அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப் படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவித்தபோது, கருத்துச் சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு எனக் கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

அதேபோல சிங்கப்பூரில் இந்தப்படத்தை கடந்த மாட்டுப் பொங்கலன்று வெளியிட்டு விடவேண்டும் என தீவிரமாகச் செயல்பட்டோம். ஆனால் இங்குள்ள அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர். அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.

எங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை உலகம் முழுக்க பரவலாக ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்த நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்றுப் பதிவாக இந்தப்படம் இருக்கும்.’’

- எஸ்ஸார்