குடும்பத்தை துரத்தும் கார்ப்பரேட் கிரைம்!



கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணைத் தொடு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இப்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், ஃபேமிலி த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகிறது.

பனரோமிக் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிக்கிறார்கள்.இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களோடு ‘கே.ஜி.எஃப்’புகழ் சம்பத், கிஷோர் ஆகியோரும் இருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார் ஒருவரும் கேமியோ வேடம் ஏற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு பிரேம். இசை சபேஷ் சாலமோன். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றியவராம். இதன் படப்பிடிப்பு ஜெர்மனி, சிங்கப்பூர் உடபட பல நாடுகளில் நடைபெறவுள்ளது.படத்தைப் பற்றி இயக்குநரும், ஹீரோவுமான தேஜிடம் கேட்டோம்.

“சினிமாவில் நான்கு வருட இடைவெளியாகிவிட்டது. இந்த நான்கு வருடத்தில் என் படம் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், நான் சினிமாவில் தான் இருந்தேன். கதை எழுதுவது, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்தல் என்று இந்தப் படத்தை உருவாக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டேன்.

தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் வித்தியாசமான கதைக்களத்தோடு வெற்றி பெறுகிறார்கள், அந்த வரிசையில் நானும் ‘ரீவைண்ட்’ மூலம் வெற்றி பெறுவேன்.படத்தின் ஹீரோ ஒரு விஷயம் குறித்து ஆராயும்போது அதனைக் கண்டுபிடிக்கும் மெடிக்கல் தொழில்நுட்பம், ஜெர்மனியில் இருப்பதை அறிகிறார்.

அதன்படி ஜெர்மனி உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்குச் செல்பவர், அந்நாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து அதன் மூலம், இங்கு நடக்கும் கார்ப்பரேட் கிரைம் தொடர்பான விஷயங்களை ஆராய்கிறார். படத்தில் ஹீரோவுக்கு பத்திரிகை நிருபர் வேடம். அவர் கண்டுபிடிக்கும் சில கார்ப்பரேட் கிரைம் மூலமாக அவரது குடும்பத்திற்கு பிர்ச்சினைகள் வர, அதில் இருந்து அவர்களை அவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸும், த்ரில்லரும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார் தேஜ்.

- ரா