அதிரடி போலீஸாக ஆண்ட்ரியா!



அதிரடியான வேடங்களில் நடித்து அழுத்தமாக முத்திரை பதிக்கக்கூடிய திறமையான நடிகை ஆண்ட்ரியா. அந்த வரிசையில் அதிரடி காவல் அதிகாரியாக அவர் அவதாரம் எடுத்துள்ள படம் ‘மாளிகை’.சாந்தி பவானி என்டர்டெயின்மென்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை தில் சத்யா இயக்கி யுள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர் தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

இயக்குநர் தில் சத்யா பேசும் போது, ‘‘இந்தப்படத்தை இயக்கியது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழில் எனக்கு இது முதல் படம்.

இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஹாலிவுட் நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப் படம் கதாநாயகிக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறார். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாகப் பழகி நடித்துக் கொடுத்தார். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’’ என்றார்.

ஆண்ட்ரியா பேசும்போது, ‘‘இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், ஆண்ட்ரியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தித் தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கிறது. நான் நிறைய பெரிய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன். அதன் அனுபவம் வேறு.

இந்தப் படத்தின் அனுபவமும் எனக்கு முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடிகர்கள் நடிக்கத் தயங்குவார்கள். நாயகன் ஜே.கே தயங்காமல் நடித்தார். இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’’ என்றார்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, ‘‘இந்தப்படத்தின் இயக்குநர் தில் சத்யாவிற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது.

அதனால்தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இந்தப்படத்தின் ஹீரோ ஜே.கே தமிழில் நல்ல இடத்தைப் பிடிப்பார். ஆண்ட்ரியாவிடம் அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. நடனம், பாட்டு, நடிப்பு என பன்முகத் திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் ‘தரமணி’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ‘‘படத்தின் டைட்டில், டீசர், படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் ஜெயிக்கும். சகலகலாவல்லியாக ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி யிருப்பார் என்று நம்புகிறேன்’’ என்றார்.

- ரா