நினைவாற்றலை தூண்டும் அவரை!
 அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள் தோறும் பயிரிடப்படும் அவரை, இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் பயிரிடப்படுவதைக் காணலாம். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு மாத காலமாகும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே நல்ல சுவையைக் கொண்டது. *அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
*நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
*பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்பு களுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சாப்பிடலாம். கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும்.
*அவரைப்பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
*சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
*மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் பொறுமலை நீக்கும். தசை நார்களை வலுப்படுத்தும்.
*மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும்.
*உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
*முற்றிய அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். நினைவாற்றலைத் தூண்டும்.
- கவிதா சரவணன், திருச்சி.
அட்டைப்படம்: ஜுலி
|