பித்தத்தை குறைக்கும் தேங்காய்
வாசகர் பகுதி
 பொதுவாக தேங்காயை பலகார வகைகளுக்கும், சமையலுக்கும் ருசிக்காக பயன்படுத்துவர். ஆனால் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலவித நன்மைகளை பெறலாம்.
* நன்றாக முற்றின தேங்காயை உடைத்து துருவி, பால் எடுத்து, தினசரி காலையில் ஒரு கப் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல பலம் பெறும்.
* தேங்காய்ப்பாலுடன், எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
* வாத நோயினால் கஷ்டப்படுபவர்கள் தினசரி உணவில் தேங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் தணியும்.
* தேள் கொட்டி விஷம் ஏறி கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒன்பது மிளகை எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று சாப்பிட்டு விட்டு, ஒரு முற்றிய தேங்காயின் அரை மூடியை பல துண்டுகளாக்கி, நன்றாக மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கடித்த இடத்தில் ஏற்படும் கடுப்பு நின்று விடும்.
இப்படி பல வகை பயன்களும் தரக்கூடிய தேங்காயை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டு நன்மைகளை பெறலாம்.
- எஸ்.ஜெயந்திபாய், மதுரை.
எளிய வீட்டு வைத்தியம்
* வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்தால், பசி எடுக்கும். சோர்வு, மயக்கம் வராது.
* மூன்று (அ) நான்கு உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நார்ச்சத்து கூடும்.
* நார்ச்சத்து அதிகரிக்க தினமும் ஆரஞ்சு, பேரீச்சை பழங்கள் சாப்பிடலாம்.
* 10 அல்லது 15 துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால், சளி, இருமல் போய்விடும்.
* சிறிதளவு பூண்டு பல் எடுத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகினால் காய்ச்சல் பறந்து விடும்.
* முருங்கை இலை, கற்பூரவல்லி, பச்சை முள்ளங்கியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்தால் ரத்த அழுத்தம் குறையும்.
- வாசுகி, சென்னை.
|