வாழ்க்கையை இனிமையாக்கும் சிறுதானிய ஸ்நாக்ஸ் உணவுகள்!



இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆரோக்கியமான உணவுகள். அதன் அவசியம் இவ்வளவு காலம் தெரியாமல் இருந்த நமக்கு இன்று அதன் முக்கியத்துவம் புரிந்து வருகிறது. நவீன வாழ்க்கை முறைகளால் செயற்கை ரசாயனங்கள், சர்க்கரை மற்றும் வெவ்வேறு கலவைகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்த நாம் படிப்படியாக ஆரோக்கிய உணவு முறைகளுக்கு மாறி வருகிறோம். 
அதன் வரிசையில் உணவின் முக்கியத்துவத்தினை புரிந்துகொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடியஆரோக்கியமான குக்கீஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கிருஷ்ணகிரியை சேர்ந்த தீபா.

‘‘கிருஷ்ணகிரியில் உள்ள சிவம்பட்டிதான் எனக்கு சொந்த ஊரு. எம்.காம் முடிச்சிருக்கிறேன். எனக்கு ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலை பார்க்க ஈடுபாடு இல்லை. காரணம், நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் அதில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். 
இதற்கு என் கணவரும் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார். நாங்க இருவரும் சேர்ந்து பாரம்பரிய அரிசிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவர் சிறுதானியங்களில் கேக், பிஸ்கெட் போன்ற பல ஆரோக்கியமான சிறுதானிய ஸ்நாக்ஸ்களை உருவாக்கி வருகிறார்.

‘‘தானியங்கள் சிறு அளவில் இருப்பதால்தான் அதனை நாம் சிறுதானியங்கள் என்று கூறுகிறோம். பார்க்க கடுகைவிட பெரிய அளவில் இருக்கும் இந்த தானியங்களில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் என பல ஆரோக்கியங்கள் அடங்கியிருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் இதனை தங்களின் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொண்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். 

நவீன காலத்தில் செயற்கை மாவுகள் நம்முடைய சமையல் அறையில் பெரும்பங்கு பெற்றுவிட்டன. குறிப்பாக மைதா சார்ந்த பலகாரங்கள்தான் நாம் அதிகம் உட்கொண்டு வருகிறோம். இவை உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும் நூடுல்ஸ், பரோட்டா, பாஸ்தா என பல வகை உணவு வடிவங்களில் அதனை உட்கொள்கிறோம். இவை நம்முடைய ஜீரண மண்டலத்தை பாதிப்பதால், உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

இதனை கவனத்தில் கொண்டுதான் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள், குதிரைவாலி, பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசியில் கேக், பிஸ்கெட், லட்டு போன்றவற்றை தயாரித்து நேரடி விற்பனையும் செய்து வருகிறேன். சிறுதானியங்களில் பல வகை உணவுகளை செய்தாலும், அதனை முறையாக சுத்தம் செய்வது அவசியம். 

சிறுதானியங்களை தண்ணீரில் ஊறவைத்து மண், தூசி போக நன்றாக கழுவ வேண்டும். சின்னச் சின்ன கற்களும் அதிலிருக்கும் என்பதால் நன்றாக அலச வேண்டும். பிறகு அதனை சுத்தமான துணியில் பரப்பி நிழலில் உலர வைக்க வேண்டும். வீட்டினுள்ளே உலர வைக்கலாம். அதன் பிறகு பொடித்து தேவையான முந்திரி, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பிசைந்து அதன் பிறகு குக்கீஸ் அல்லது கேக்கினை தயாரிக்கலாம்.

பெரும்பாலும் இனிப்புகளில் அதிகளவு சர்க்கரை, செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கின்றனர். நான் அவற்றை சேர்ப்பதில்லை. முழுக்க முழுக்க இயற்கை முறையில்தான் தயாரிக்கிறேன். பிஸ்கெட்டிற்கு சிறுதானிய மாவு, தேன், நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்ப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். கேக் தயாரிக்க மைதாவிற்கு பதில் சிறுதானிய மாவினை சேர்க்கிறேன்.

மேலும், கேக் மிருதுவாக பஞ்சு போல் இருக்க வாழைப்பழம், பனங்கிழங்கு மாவு சீசனை பொருத்து சேர்ப்பேன். ஏற்கனவே நாங்கள் பேக்கரி வைத்து நடத்தி வந்ததால் கேக் தயாரிக்கும் அனுபவம் இருப்பதால் கேக்கினை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தயாரிக்க முடிகிறது’’ என்றவர் பல தடைகளை கடந்துதான் இதில் வெற்றி கண்டுள்ளார்.

‘‘சிறுதானியத்தில் நான் இதுவரை கேக் போன்றவற்றை செய்து பழகியதில்லை. அதனால் எனக்கு ஆரம்பத்தில் பலமுறை சரியாக வரவில்லை. ஒவ்வொன்றாக முயற்சி செய்த பிறகுதான் என்னால் அதை பக்குவமாக கொடுக்க முடிந்தது. அடுத்து இன்று மக்கள் பெரும்பாலும் நவீனமான ருசிகரமான உணவுகளை விரும்புகிறார்கள். அதனால் என்னுடைய உணவுப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய சிரமப்பட்டேன்.

என்னுடைய தயாரிப்புக்கு வாடிக்கையாளர்கள் குறைவாகத்தான் இருந்தனர். அதனால் சமூக ஊடகங்களை என்னுடைய வியாபார சந்தையாக பயன்படுத்தினேன். இயற்கை கண்காட்சி, மக்கள் அதிகம் கூடும் இடமான கோவில், திருவிழாக்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு நேரடியாக சென்று உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினேன். முதலில் யோசித்தவர்கள் இன்று விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

சிறுதானியங்கள் மூலம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை கொடுக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டாலும் அவற்றின் மகத்துவம் இன்று மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் இதன் மூலம் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதே எனது ஆசை. 

அதனால் சிறுதானியங்களை சுவையான உணவாக மாற்றி மக்கள் விரும்பும் விதமாக அதனை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கடமையாக உணர்கிறேன். அப்படிப்பட்ட உணவுகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். காரணம், சிறுதானிய உணவுகள் நம் பாரம்பரிய அடையாளத்தை மீண்டும் தரும்.

இப்போது எனது தயாரிப்புகள் பல இடங்களில் அறியப்படுகின்றன. நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்கள் உலகம் முழுதும் பரவ வேண்டும் என்பது எனது கனவு. மேலும், நம் மண்ணின் அருமையான உணவுகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நான் பெருமை கொள்கிறேன். அடிப்படையில் ஆரோக்கியமான உணவு இருந்தால், வாழ்க்கை இனிமையாகும்’’ என்றார் தீபா.

செய்தி: மோகனப்பிரியா சுபாஷ்

படங்கள்: எஸ்.வெங்கடேஷ்