இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்?!



விநோதம்

வேலை... அலைச்சல்... டென்ஷன் என்று ஊரைச் சுற்றும் நமக்காகவே மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய விதவிதமான சிகிச்சைகளை உளவியலாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் அவை விநோதமாகவும் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது பெருநகரங்களில் பிரபலமாகியுள்ளன Sense Deprivation Tank Therapy மற்றும் Lucia Light Therapy என்ற இரண்டு புதிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்துகொண்டு புண்ணியம் தேடிக் கொள்வோம்...

Sense Deprivation Tank Therapy
இருட்டறை ஒன்றில் 8 அடி நீளமுள்ள ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் சுமார் 50 கிலோ எடையுள்ள எப்சம் சால்ட் சேர்க்கப்பட்ட நீர் நிரப்பப்படுகிறது. பலமுறை சுத்திகரிக்கப்பட்ட உப்பு என்பதால், சிகிச்சை எடுத்துக் கொள்பவர் தொட்டியில் மல்லாந்து படுக்கும்போதே நீரின் மேல் மிதக்க ஆரம்பித்துவிடுவோம்.

தண்ணீருக்கு மேலே மல்லாக்காக மிதப்பதால் கண், மூக்கு, வாய்க்குள் நீர் புகுந்துவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. காதுக்குள் நீர் புகாமல் இருப்பதற்காக, காதில் பாதுகாப்பாக இயர் பிளக்குகளை செருகிக் கொள்ள வேண்டும். மனிதத் தோலின் வெப்பநிலை தாங்கு சக்திக்கேற்ப வெதுவெதுப்பான நீராகவே இருக்கும்.

சத்தமோ, வெளிச்சமோ இல்லாத அந்த அறையில், 2 மணிநேரம் வரை அப்படியே தொட்டியில் மிதக்க வேண்டும். எதையும் பார்க்காமல், கேட்காமல் அமைதியான தியான நிலையில் மிதக்கும்போது ஐம்புலன்களோடு, மனமும் அமைதி அடையுமாம். அங்கிருக்கும்போது மட்டுமில்லாமல், வீட்டிற்கு திரும்பிய பின்னும் அந்த அமைதி தொடரும் என்கிறார்கள்.

உணர்விழப்பு தொட்டி (Sensory Deprivation) சிகிச்சையை 12 அமர்வுகள் எடுத்துக் கொண்டவர்களில் 37 சதவீதம் பேருக்கு பொது கவலைக் கோளாறு நோய் (Generalized Anxiety Disorder (GAD) குறைந்ததாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 6 மாதங்களில் அவர்களின் மன அழுத்தம் அறவே நீங்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.

‘எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தக் குறைவைக் காட்டிலும், எப்படி எங்களை அமைதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை கற்றுக்கொண்டோம். இருட்டில் மிதந்து கொண்டிருந்தாலும் அங்கு எதுவுமே இல்லை என்ற உணர்வே எங்களை அமைதிப்படுத்தியது. அதோடு கூடவே தியானமும் செய்யும்போது பலன்கள் இரட்டிப்பாகிறது’ என்று சிகிச்சை எடுத்துக் கொண்ட 10 பேரில் 4 பேர் முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவத்தை
ஆச்சர்யத்தோடு பகிர்ந்து கொண்டதாகவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

Lucia Light Therapy

மயக்க உணர்வைத் தரக்கூடிய, பரிணாம ஒளி தொழில்நுட்பம் மூலம் உங்களை தியானத்தின் ஆழமான உணர்வை அடையச் செய்வதே Lucia Light Therapy. இதைப் பற்றி மருத்துவ உலகம் சொல்வதைக் கேட்போம்...‘லூசியா லைட் என்பது அணைந்து எரியக்கூடிய ஒளியோடு, நிலையான ஒளியை இணைத்து, நரம்பினைத் தூண்டச் செய்வது(Neuro stimulator) ஆகும். கணினி கட்டுப்பாட்டு இயந்திரத்தின் உதவியோடு, பல்வேறுபட்ட வேகங்களில் மின் விளக்கின் ஒளி அலைகளை ஒருங்கிணைத்து வித்தியாசமான தியான அனுபவத்திற்கு வழிகாட்டுகிறது இச்சிகிச்சை.

ஒளியானது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களின் சுரப்பிற்கு முக்கிய காரணியாக இருக்கும் பீனியல் சுரப்பியைத் தூண்டுகிறது. தூக்கத்தை வரவழைக்கும், மெலட்டனின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் படைப்பாற்றலைத் தூண்டச் செய்கிறது. முக்கியமாக, மனிதனின் விழிப்புணர்வு மற்றும் உயர் மனநலத்திற்கு அவசியமான மூன்றாவது கண்ணாக செயல்படுவது இந்த பீனியல் சுரப்பியே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிகிச்சையின் போது, அவர் அனுபவிக்கும் கவன ஈர்ப்புகள் மற்றும் ஆழமான தளர்வு உணர்வுகளை சிகிச்சையாளரின் மூளைச் செயல்பாடு பதிவுகள் காட்டுகின்றன.

விரைவான மற்றும் நீடித்த ஆழ்மன தளர்வு உணர்வை கொடுக்கிறது. கற்றல் திறனை வளர்க்கிறது. சந்தோஷ உணர்வுகளை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றல் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். முக்கியமாக மனநிலைக் கோளாறுகள், பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் மற்றும் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை உகந்ததாக இருக்குமாம்.’என்னவோ போடா மாதவா?!

- இந்துமதி