ஹெல்த் காலண்டர்



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரம் ஆகஸ்ட் 1 - 7


உலகம் முழுவதும் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி (World Breast Feeding Week) வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலால் தாய் சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள், தாய்ப்பாலூட்டுவதற்கு வசதியான பணியிடங்களை அமைத்துக்கொள்வதில் பெண்களுக்குரிய உரிமை போன்றவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தாய் குழந்தைக்கு அளிக்கும் விலை மதிப்பற்ற ஒரு பரிசுதான் தாய்ப்பால். பிறந்த குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும், பாசமும் அவசியம். இவை யாவும் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்குக் கிடைக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக இருக்கும் தாய்ப்பாலின் மகத்துவத்துக்கு ஈடானது எதுவுமில்லை.

தாய்ப்பாலூட்டுவது ஒரு நுட்பம். அதை எப்படி, எப்போது ஊட்ட வேண்டும் என்பது போன்ற பல அம்சங்களை ஒவ்வொரு தாயும் கற்றுக் கொள்வது அவசியம். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுள்ள தாய்ப்பாலே பிறந்த குழந்தைக்கு முழுமையான உணவு. பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களைத் தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

தாய்ப்பாலைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் அளிக்கலாம். குழந்தை குடிக்கக் குடிக்க மார்பகம் மேலும் மேலும் தாய்ப்பாலைச் சுரக்கும். குழந்தை தாய்ப்பாலைக் குடிப்பதை நிறுத்தினாலோ அல்லது குடிக்க ஆரம்பிக்கவே இல்லை என்றாலோ மார்பகம் பால் சுரப்பதை நிறுத்திவிடும்.

தாய்ப்பாலூட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

விலையற்றதும், மாசற்றதுமான தாய்ப்பாலில் போதுமான அளவிற்குக் குழந்தைக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புகள், எரிசக்தி, லாக்டோஸ், உயிர்சத்துக்கள், இரும்பு, தாதுக்கள், நீர் மற்றும் நொதியங்கள் அடங்கியுள்ளன. தாய்ப்பால் எளிதாகவும் விரைவாகவும் செரிமானம் அடையக்கூடியது.

இது குழந்தையின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரித்து பல தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள உணர்வு பந்தத்தை வலுவாக்குகிறது.
தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு

ஏற்படும் நன்மைகள்

மனச்சோர்வு, இதய நோய்கள், கருப்பைப் புற்று, மார்பகப் புற்று போன்ற நோய் ஆபத்துக்களைக் குறைக்க உதவுவதோடு, பிரசவத்துக்குப் பின் எடை இழப்புக்கும் உதவுகிறது. தாய் தன் இயல்பான உடல் அமைப்பைப் பெற உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் பெண்களிடம் உடல் பருமன் பிரச்னைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படக்கூடிய ரத்தப்போக்கையும், ரத்தச் சோகையையும் குறைக்கிறது.

தாய்ப்பாலூட்டுவதால் ஏற்படும் சமூக நன்மைகள்

தாய்ப்பால் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. இது சிறந்த நோய்த்தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதால் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் சுகாதாரச் செலவு குறைகிறது. தாய்ப்பாலூட்டலைப் பற்றி நாம் அறிய வேண்டியவை குழந்தைக்கான முழு ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சிறந்த உணவு தாய்ப்பால்.

பிரசவத்துக்குப் பின் சுரக்கும் முதல் கட்டியான பால் கடம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த  கட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் ஊட்டச்சத்துக்களும் நோயெதிர் பொருட்களும் அடங்கியிருக்கிறது. பிறந்த குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்நிலையில் இந்த முதல் கெட்டியான பால் குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்துக்களை அளித்து குழந்தையை நோய் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும், தாகம் தீர்க்கும் பால் மற்றும் கொழுப்பு நிறைந்த பால் என்று இரண்டு வகையான பால் சுரக்கிறது. இந்த இரண்டுமே குழந்தைக்குத் தேவை. எனவே ஒரு முறை பாலூட்டும் போது குழந்தை ஒரு மார்பில் உள்ள பாலை அருந்திவிட்டால், அடுத்த முறை இரண்டாவது மார்பில் பாலூட்ட வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதே உணவூட்டுவதற்கான ஓர் இயற்கையான வழிமுறை. சரியான முறையில் பாலூட்டுவதிலும்கூட ஓர் உத்தி உள்ளது. காம்பில் தகுந்தவாறு குழந்தை வாய்வைத்துப் பால் குடிக்கும் வண்ணம் குழந்தையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அல்லது ஒரு நாளைக்கு 8 முறை அல்லது தேவைக்கு ஏற்ப 2 முதல் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலூட்ட வேண்டும்.

6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும். இந்த 6 மாதத்திற்குக் கடையில் விற்கப்படும் பால் பொடிகள் அல்லது செயற்கை உணவுகள், பானங்கள் அல்லது நீர்கூட குழந்தைக்குத் தேவையில்லை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பாலுடன் சேர்த்து பிற கூடுதல் உணவுகளை அளிக்க வேண்டும்.

புட்டிப்பால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பதோடு, மேலும் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. ஆறு மாதத்திற்குப் பின்னரே குழந்தைக்குத் திட உணவு அளிக்கத் தொடங்க வேண்டும். படிப்படியாகத் தாய்ப்பாலோடு கூடுதலாக உணவையும் நீராகாரங்களையும் கொடுப்பதன் மூலம் பால் குடித்தல் பழக்கம் மறக்கச் செய்யப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த உணவு பழக்கத்தைத்  தொடங்க வேண்டும்.  

கடம்பு குழந்தைக்கு ஆகாது. பாலூட்டும்போது 5 முதல் 10 நிமிடத்திலேயே குழந்தை தனக்குத் தேவையான பாலைப் பெற்றுக் கொள்கிறது. பாலூட்டும் தாய் எப்போதும் மதுவையும் புகையிலையையும் தவிர்க்க வேண்டும்.

அது தாய்க்கும் சேய்க்கும் தீங்கானது. சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக எளிதில் சென்று குழந்தைக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு  இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே தாய் மருந்து உட்கொள்ள வேண்டும். தாய்ப்பாலூட்டும் முன்னரும் பின்னரும் தகுந்த சுகாதாரம் பேண வேண்டியது அவசியம்.

சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12

ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல்படி ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம்  ( International Youth Day )கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் எதிர்கால சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களுடைய சக்தியை சரியாக நெறிப்படுத்தி, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்துவது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி சிறப்பான முறையில் நேர்மையாகவும் சுகாதாரமான முறையிலும் வாழ்வதற்கு வழிகாட்டுவது, அவர்களின் நற்செயல்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1998 ஆகஸ்ட் 8 -ம் தேதி முதல் 12-ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர்கள்  விவகாரங்களுக்கான அமைச்சர் குழு சர்வதேசரீதியில் இளைஞர்களின் பிரச்னைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த  வேண்டும் என சிபாரிசு செய்தது.

அதன்படி 1999 டிசம்பர் 17-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒப்புதல்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதன்பிறகு 2000-ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வதேச அளவில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு, 1985 முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12-ம் தேதியன்று  தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். நம் நாட்டு இளைஞர்கள், உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர்.

அவர்கள் உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருகின்றனர். பணி புரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளமும் நம் நாட்டில்   இருக்கிறது. நம் நாட்டு இளைஞர்கள் சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் இருக்கின்றனர்.

மேலும் அவர்கள் தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்களாக உள்ளனர்.  ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக் கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் பின் வருமாறு விளக்கிக் கூறுகிறார்.

 ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்டமான மரமாகிறது.

அது போல கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால லட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார் அவர்.  

சாத்தியமில்லாதது என்று எதுவுமேயில்லை. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. எனவே தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு அதற்குரிய செயல்வடிவம் கொடுக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

தேசிய தடுப்பு மருந்து மாதம் ஆகஸ்ட் 1-31

நோய்த் தடுப்பு மருந்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேசிய தடுப்பு மருந்து மாதம் (National Immunization Month) கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால்  தடுக்கப்படக்கூடிய நோய்களிடம் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்க  மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலியுறுத்துவதே இந்த சிறப்பு தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

1988-ல் இருந்து இளம்பிள்ளை வாத நோய் 99% குறைந்துள்ளது. 1988-ல் 125  நாடுகள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தன. இளம்பிள்ளை வாதம் இல்லாத நாடு என்று இந்தியாவை 2014-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 12-23 மாத வயது உடைய குழந்தைகளில் 62% பேர் முற்றிலுமாக தடுப்பு மருந்து பெற்றுள்ளனர். இந்தியாவில் தட்டம்மைத் தடுப்பூசி திட்டத்தின் மூலம் 2000 முதல் 2016 -ம் ஆண்டு காலகட்டத்தில், அந்த நோயால் ஏற்படும் இறப்பில் 84% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு தொற்று நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்து அந்த நபரின் நோய்த்தடுப்பு மண்டலத்தை ஊக்குவித்து அவரை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. தடுப்பு மருந்து அளிப்பதென்பது பொது சுகாதாரத்துக்கு ஒரு மலிவான முதலீடாக உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மரணங்களில், மூன்றில் ஒரு பகுதியை சரியான தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஐந்தில், ஒரு குழந்தைக்கு ஏதாவது ஒரு முக்கியமான தடுப்பு மருந்து கிடைக்காமல் போகிறது. தொண்டை அழற்சி, தட்டம்மை, கக்குவான், நிமோனியா, போலியோ, ரோட்டோ வைரஸ், வயிற்றுப்போக்கு, ரூபெல்லா மற்றும் டெட்டனஸ் இதுபோன்ற 25 நோய்களை தடுப்பு மருந்துகளால் தடுக்க முடியும்.

அனைவருக்குமான தடுப்பு மருந்துத் திட்டம்

தொண்டை அழற்சி, கக்குவான் இருமல், இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, இளம்குழந்தைகளுக்கு ஏற்படுகிற கடுமையான காசநோய், கல்லீரல் அழற்சி பி, மூளை அழற்சி, நுரையீரல் அழற்சி, ஜப்பானிய மூளை அழற்சி, ரோட்டோவைரஸ் தடுப்பூசி, ஐபிவி, நியூமோகாக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போன்றவற்றை இந்திய அரசு இலவசமாக, அனைவருக்குமான  தடுப்புமருந்து திட்டத்தின் மூலம் அளித்து வருகிறது.

இந்திர தனுசுத் திட்டம்

2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்தை அளிக்கும் நோக்கத்துடன், 2014 டிசம்பர் 25 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதே இந்திர  தனுசுத் திட்டம். அனைவருக்குமான தடுப்பு மருந்து திட்டத்தை வலுப்படுத்தி ஊக்கப்படுத்தவும், அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் விரைவாகத் தடுப்பு மருந்து அளிக்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கிறது.

வானவில்லில் இருக்கும் 7 நிறங்களைப் போல தொண்டை அழற்சி, கக்குவான், டெட்டனஸ், குழந்தைப்பருவ காசநோய், போலியோ, கல்லீரல் அழற்சி பி மற்றும் தட்டம்மை போன்ற 7 நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தடுப்பு மருந்து அளிப்பதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் திட்டம்

இந்திர தனுஷ் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, நம் பிரதமர் அக்டோபர் 8, 2017-ல் தீவிர இந்திர தனுஷ்  திட்டத்தைத் துவங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்திய அரசு இதுவரை தடுப்பு மருந்து பாதுகாப்பு வளையத்துக்குள் வராத 2  வயது வரையுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும், அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பை அளிக்கவும்,  டிசம்பர் 2018 க்குள் இதில் 90% இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திர தனுஷின் முதல் இரு கட்டங்களில் 1 சதவிகிதமாக இருந்த தடுப்பு மருந்து பாதுகாப்பு ஆண்டுக்கு 6.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உலகத்தின் மிகப் பெரிய தடுப்பு மருந்து திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. இதன் கீழ் அனைத்து தடுப்பு மருந்துகளும் தேசிய தடுப்புமருந்து அட்டவணைப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

என்.எச்.பி. இந்திர தனுஷ் தடுப்புமருந்து அளித்தல்- அலைபேசி செயலிஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தொடங்கியுள்ள இந்த அலைபேசி செயலியின் மூலம் பெற்றோரும் காப்பாளரும் தங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்து அட்டவணையை அறிந்து கொள்ளவும் கண்காணிக்கவும்  முடியும். இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து நாம் பயன்பெறலாம்.

- தொகுப்பு: க.கதிரவன்