புதிய கல்விக் கொள்கை வரைவு
சர்ச்சை
இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் முயற்சி!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை முறை மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துகளை மையப்படுத்தியிருப்பதோடு, இந்த முறை உண்மையில் அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாகவும் இல்லை. இது கல்வியை சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலன் என்று இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுவருகிறது. இதுகுறித்து கல்வியாளர் மு.சிவகுருநாதன் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்...
 ‘புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை மாநில மொழிகளில் வெளியிடாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு 30 நாட்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிப்பதிலிருந்தே இவர்களின் பாசிச முகம் வெளிப்படுகிறது. எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டு, 6 மாத கால அவகாசமளித்து, இந்தியா முழுவதும் விவாதங்கள் நடத்தப்பட்டு கல்வியில் மாற்றங்கள் கொண்டுவருவதே சரி.
பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கு மத்திய அரசு மட்டும் எப்படி கொள்கைகளை வகுக்கமுடியும்? உண்மையில் மாநில அரசுகளிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைத் தொகுக்கும் வேலையைத்தான் மத்திய அரசு செய்யவேண்டும். அதுமட்டுமின்றி கல்வியில் மாநிலங்களுக்குண்டான உரிமைகளை முற்றாக பறிக்கும் முயற்சி இவ்வரைவில் இருப்பதும் கவலைக்குரிய அம்சம்.
2016-ல் கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள் வெளியிட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினரின் தரம், சாய்வு ஆகியவை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியன. ஏற்கனவே இக்குழுவினரின் அரசியல், அறிவுப்புல சார்புகள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.’’ என்கிறார் சிவகுருநாதன்.
மேலும் இவர் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டதன் பின்னணி, உருவாக்கியவர்களின் சார்புநிலை உள்ளிட்டவற்றையும் திட்டங்களையும் பட்டியலிட்டபோது, ‘‘இஸ்ரோவின் தலைவராக இருந்த கஸ்தூரிரங்கன் கல்வியில் செய்த ஆய்வுகள் மற்றும் பங்களிப்புகள் என்ன? கல்விக்குழுவிற்கு தலைமையேற்கும் அளவிலான அவரது தகுதிகள் என்ன? விண்வெளி, அணுசக்தி, வெளியுறவு ஆகிய துறைகளில் பணியாற்றியவர்கள் நாட்டின் சட்டங்களைத் தீர்மானிக்கலாம் என்றால், மக்களாட்சி எதற்கு? என்கிற கேள்வியும் தவிர்க்க முடியாதது. ஆளும்கட்சியின் மதவாதக் கொள்கைக்கு ஆதரவான வரைவை கல்வியாளர்கள் என்ற போர்வையில் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘India centred education system’ என்று வரைவு அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்திய மையக் கல்வி, இந்தியக் கல்வி என்று சொல்வதெல்லாம் என்ன? இந்தியாவில் ஒற்றை மையக் கல்வி எப்போதாவது இருந்திருக்கிறதா? ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு தேர்தல் போன்ற பாசிசச் சொல்லாடல்களில் ஒரு கல்விமுறையும் சேர்வது மிகவும் அபாயகரமான போக்கு.
இந்தியப் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு ஆகியவற்றை இது கேலிக்குள்ளாக்குகின்றது. இந்தியாவில் சமண, பவுத்த, ஆசீவகத் தத்துவங்களின் அவைதீகக் கல்வி முறை இருந்துள்ளது. அதற்கு முன்னதாகவும் சிறப்பான கல்வி முறை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிந்து வெளி போன்ற நகர நாகரிகங்கள் சாத்தியப்பட்டிருக்காது.
இங்கு அவற்றைப் பற்றிப் பேசுவதான தொனியே இல்லை. வேதக்கல்வி/குருகுலக் கல்வியே இந்திய ஒற்றைக் கல்வி முறையாக முன்மொழியப் படுகிறது. பாரம்பரியக்கல்வி, தாராளமய கலைக்கல்வி, இந்திய அறிவியல் அறிவைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல் என்பதன் பின்னணியும் ஒற்றை அடையாளத்தை நோக்கி நகர்வதுதான்’’ என்றார்.
‘‘மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு இன்று மாநிலங்களுக்கு இருக்கும் கல்வியதி காரங்களைப் பறிப்பது நமது நாட்டின் பன்மைத்தன்மையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
திட்டக்குழுவைக் கலைத்து ‘நிதி ஆயோக்’ அமைக்கப்பட்டதுபோல, பொதுப்பட்டியலுள்ள கல்வித்துறை தேசிய அளவில் பிரதமர் தலைமையிலான உச்ச அதிகார அமைப்பாக ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் (RSA) உருவாக்குவதும் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்துவதும் கல்வியில் கேடுகளை உண்டாக்கும்.
UGCக்குப் பதிலாக உயர்கல்விக்கான ஆணையம் (HEGC) அமைப்பது, கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வியை முற்றாக தனியார்மயமாக்குவது போன்ற கொள்கைகளுக்கான முன்னெடுப்பே பன்னாட்டுத் தரத்திற்கு இணையான கல்வி, பன்னாட்டுப் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதித்தல் போன்ற கருத்துகள் என்பதை முடிவு செய்யலாம்.
மேலும் தகுதி அடிப்படையில் ஊக்க ஊதியம், பதவி உயர்வு மற்றும் சமத்துவச் செயல் போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடுகள் நாமறிந்த ஒன்றுதான். தனியாருக்குச் சேவையாற்றவே இவ்வித அமைப்புகள் உருவாக்கப் படுகின்றன.’’ என்று நிதர்சனமான உண்மை நிலையை ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
‘‘குழந்தைகளால் பலமொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமாம்! அவர்கள் என்ன பொதி சுமக்கும் கழுதைகளா? மும்மொழித் திட்டமும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளும் மிக மோசமானவை. பாலி, பிராகிருதம், பாரசீக மொழிகளுக்கு தேசிய நிறுவனங்களை அமைத்தல் என்பதில் தமிழுக்கு ஏன் இடமில்லை? சமஸ்கிருதம் படிக்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதி செய்யப்படும்போது அதைவிட மேம்பட்ட தமிழுக்குரிய இடம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இவர்களுடைய நோக்கம் சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றைத் திணிப்பதன்றி வேறில்லை.3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தும் முறைகளும் தேசிய அளவிலான தேர்வுகளும் கல்விப்புலத்திலிருந்து சாதாரண ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மாநில அரசின் பாடத்திட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளும் அடைவுத் தேர்வுகளும் கல்வியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். 9-12ம் வகுப்புகளை மேனிலைக் கல்வியாக மாற்றுவது, எட்டுப் பருவத்தேர்வுகள், மாணவர்களின் விருப்பத்தேர்வு என்பதும் ஏமாற்று நடவடிக்கை. அந்த வயதில் எதிர்காலத்தை திட்டமிட இயலாது.
இது குழந்தைகளிடம் பல்வேறு வகையான உளவியல் சார்ந்த நெருக்கடிகளை உருவாக்கும். இத்தகைய வழிமுறைகள் ‘நவீன குலக்கல்வித் திட்டமாக’வே இருக்கும்.பள்ளிக்கல்வியில் எத்தனை தேர்வுகள் இருப்பினும் அவை உயர்கல்விக்கான வாய்ப்பைத் தராது என்பது எவ்வளவு பெரிய கொடுமை! ‘நீட்’ போன்று அனைத்து வகையான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகளும் தகுதித்தேர்வுகளும் கட்டாயமாக்கப்படுவதால் கல்வி இனி சமூக, பொருளாதார நிலைகளில் உயர்த்தப்பட்டோருக்கு மட்டும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகும்.
இத்தேர்வுகள் மாநிலப் பாடத்திட்டதைப் பின்பற்றியோ, மாநில மொழியிலோ இருக்காது. மேலும் இவற்றில் தேர்ச்சிபெற லட்சக்கணக்கில் பணம்கொட்டி ‘கோச்சிங் சென்டர்களில்’ ‘நீட்’ தேர்வுகளைப் போலப் படிக்க வேண்டும். இவ்வரைவில் நல்ல கூறுகள் இல்லையா என்று கேட்கலாம். 6-14 என்ற கல்வி உரிமைச்சட்ட வரம்பை 3-18 ஆக உயர்த்துதல் போன்ற நல்ல அம்சங்கள் சில இருக்கலாம். ஆனால், நச்சுணவின் மேலே தூவப்படும் இவற்றால் எவ்விதப் பயனுமில்லை. மத்திய அரசின் ஒற்றையதிகாரத்தையும், வரம்புகளை மீறிய பாசிசச் சொல்லாடல்களையும் முறியடிக்க நாம் ஒன்றுதிரள வேண்டும்’’ என்கிறார் சிவகுருநாதன்.
- தோ.திருத்துவராஜ்
|