தமிழக அரசுப்பணிகளில் சேர TNPSC Group IV தேர்வு!



வாய்ப்பு

6,491 பேருக்கு வாய்ப்பு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC (Tamil Nadu Public Service Commission) என்று  சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பிவருகிறது. ஒவ்வோர் ஆண்டும்  காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் அவற்றை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கான அட்டவணையையும் வெளியிட்டுவருகிறது.


இத்தேர்வாணையம் தற்போது 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப் பணி, நில அளவை, நிலப்  பதிவேடுகள் சார்நிலைப்பணி, தலைமைச் செயலகப்பணி மற்றும் சட்டப் பேரவை செயலக பணிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4 தேர்வு)-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்


மொத்த பணியிடங்கள் 6491. கிராம நிர்வாக அலுவலர் - 397, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2,688, இளநிலை உதவியாளர் (பிணையம்) -  104, வரித்தண்டலர் (நிலை-1) - 34, நில அளவர் - 509, வரைவாளர் - 74, தட்டச்சர் - 1,901, சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை-3) - 784.

கல்வித் தகுதி: அனைத்துப் பணிகளுக்கும் குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதியான பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில்  தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கு அரசு  தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது  ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை III) பணிக்கு அரசு தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 18 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.net , www.tnpscexams.in  என்ற இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் ஒருமுறை பதிவு செய்யும் நிரந்தரப் பதிவுக்கு ரூ.150-ஐ டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் கிரெடிட்,  டெபிட், நெட் பேங்கிங் மூலம் செலுத்தி தங்களுடைய அடிப்படை விவரங்களை நிரந்தரப் பதிவு மூலமாக (ஓ.டி.ஆர்.) கட்டாயமாகப் பதிவு  செய்யவேண்டும்.

நிரந்தரப் பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது ஆகும்பிறகு  மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணையவழி விண்ணப்பத்தில்  தேர்வு செய்தவாறு விண்ணப்பம் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலம் செலுத்த  வேண்டும்.

வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அம்முகமைகளுக்கு உரியச் சேவை கட்டணத்தையும் செலுத்த  வேண்டும்.நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். எஸ்.சி., எஸ்.டி. மாற்றுத்திறனாளிகள்  மற்றும் விதவைகளுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து அதன்  பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 14.7.2019. தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.7.2019. தேர்வு நடைபெறும் நாள்: 1.9.2019.

தேர்வு முறை:


விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும். பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவு 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் 100 வினாக்கள் என மொத்தம் எழுத்துத் தேர்வு 200 வினாக்கள் கொண்டதாக இருக்கும். 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள்  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துப் பணியிடங்களுக்கும் 90 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகும். காலை 10 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை  (ஹால்டிக்கெட்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது.

தேர்வு தொடர்பான மேலும் தகவல்கள் பெற 1800 425 1002 என்ற டி.என்.பி.எஸ்.சி.-யின் கட்டணமில்லா சேவை எண்ணுக்கு வேலைநாட்களில் காலை  10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம்.இந்தத் தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பும்போது, எந்தவித ஆவணமும்  அனுப்ப தேவையில்லை. தேர்வாணையம் கேட்கும்போது, கண்டிப்பாக உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது சான்றிதழ்கள் பதிவேற்றம்  செய்யப்படவில்லை என்றாலும், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் தெளிவு இல்லாமலும், வாசிக்க ஏதுவாக இல்லாமல் இருந்தாலும் எந்தவித  முன்னறிவிப்புமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

-முத்து