கோயில்களில் ஓதுவார் பணியில் சேர உதவித்தொகையுடன் சான்றிதழ் படிப்பு!



அறிவிப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகத்தின்கீழ் ஓதுவார் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது. இங்கு நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பில் 2017  2018ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேர்க்கைக்கான தகுதிகள்: ஓதுவார் பயிற்சியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 13 வயதுக்குக் குறையாமலும் 20 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். மேலும், நல்ல குரல்வளமும், உடல் வளமும் பெற்றிருப்பதுடன் சமயத் தீட்சை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பக் கடிதம் ஒன்றினை எழுதி அதில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பத்தினையும் சேர்த்துப் பெற்று, அந்த விண்ணப்பத்துடன், தங்களைப் பற்றிய தன் விவரக்குறிப்பு (Bio- Data), புகைப்படம், வயது மற்றும் கல்வித் தகுதிகளுக்கான சான்றிதழ் நகல்களையும் இணைத்து “இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை  625001” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 20.7.2017.

உதவித்தொகை: பயிற்சிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப் பெற்றுப் பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்குத் தேவையான உணவு, சீருடை, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 பயிற்சிக்கால உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் படிப்பு தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின் கோயில்களில் ஓதுவார் பணிக்குத் தகுதியுடையதாகும்.

மேலும் விவரங்களை அறிய, மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் http://www.maduraimeenakshi.org எனும் இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம். மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் அலுவலத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது 0452 - 2344360 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ கூட தகவல்களைப் பெறலாம்.

-  தேனி மு. சுப்பிரமணி