விரிந்து கிடக்கிறது கேள்வி



ராஜா சந்திரசேகர்

*‘பறவையை விட்டு
ஏன் பிரிந்தாய்’
சிறகிடம் கேட்டேன்
‘நீந்திப் பழக’ என
பதில் வந்தது

*கால்களின் கீழே
விரிந்து கிடக்கிறது கேள்வி
கடந்து போனால்
கண்டடையலாம்
பதிலையும் என்னையும்

*இந்தப் பூச்செடி
தலையசைத்து
ஏதோ சொல்கிறது
என்ன என்றுதான்
தெரியவில்லை



*உன்னைப்
பார்க்க விரும்பவில்லை
உணர விரும்புகிறேன்

*பிறந்த பூனைக்குட்டி
கண் விழிப்பதைப் போல
என் சொற்கள்
உன்னைப் பார்க்கின்றன

*ரயில் போய்விட்டது
தண்டவாளத்தில்
ரத்தம் மின்னுகிறது
தூரத்திலிருந்து
ஆடு மேய்க்கும் சிறுமி
சத்தமிட்டபடியே
வேகமாக
ஓடி வந்துகொண்டிருக்கிறாள்

*வனமே
உன்னைப் பாட
ஒரு புல்லாங்குழல்
கொடு
போதும்

*வளைந்து செல்லும்
நீண்ட கோட்டை
வரைந்து
நதி என்கிறாள் குழந்தை
இல்லை என்பது போல் பார்க்க
அதிலிருந்து நீரள்ளி
முகத்தில் தெளிக்கிறாள்

*கிரீடம்
நசுங்கிப் போய்
துருப்பிடித்து விட்டது
ஆனாலும்
ராஜ ரோஷம்
குறையவில்லை

*கம்பியைக்
கிளையாக்கியது
அமர்ந்து போன பறவை

*நான் ஓய்வெடுக்க விரும்பும்
நாற்காலியை
உங்களை யார்
இப்போதே
செய்யச் சொன்னது?