கவிதைக்காரர்கள் வீதி




யுவதி
தன் பெண்ணாய்
இருக்கமாட்டாள் என்ற
போலி நம்பிக்கையையும்
தன் பெண்ணாய்
இருக்கக்கூடாது என்ற
நிஜமான பிரார்த்தனையையும்
மத்திம வயதினருக்குத் தந்தபடி
முகம் மூடி விரைந்து
கொண்டிருக்கிறாள்
யாரோ ஒரு யுவனின்
இருசக்கர வாகனப்
பின்னிருக்கையில்
ஒரு யுவதி!
- கீர்த்தி, கொளத்தூர்.

போதை
குப்பிகள் திறக்கப்பட்டு
கோப்பைகளை நிரப்பி
வெற்றுடம்பாய் வீழும்
மதுபானப்புட்டி பிரதிபலிப்பது,
அருந்துபவனின் எதிர்காலத்தை.
 - ஜி.மணிமாறன், ஆலப்பாக்கம்.

இழந்தது
சிக்னலில் யாசிக்கும் அவன்
எந்த வியாபாரத்தில்
நஷ்டப்பட்டு
இந்த நிலைக்கு
வந்திருப்பான்?
- ப.மதியழகன், மன்னார்குடி.

தெப்பக்குளம்
ஒவ்வொரு கோயிலின்
தெப்பக்குளப் படிக்கட்டுகளிலும்
ஏதோ ஒரு கதை
ஓடிக்  கொண்டிருக்கிறது
கடவுளைப் பற்றியிருந்தால்
காட்சி கொடுத்தது
முனிவரைப் பற்றியிருந்தால்
முக்தி அடைந்தது
காதலரைப் பற்றியிருந்தால்
கடைசி சந்திப்பு
- நாகேந்திர பாரதி, சென்னை-24.

விழுந்தது
தெருப்பக்கம் வந்து
திசையறியாமல்
ஓடையில் விழுந்தது
காற்று!
- சந்திரா மனோகரன், திண்டல்.