நியூஸ் வே



*‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் கோலிவுட் வந்திருக்கும் அகிலா கிஷோர், 2012ல் ‘மிஸ் குயின் ஆஃப் இந்தியா’ போட்டியில் ரன்னராக வெற்றி பெற்றவர். இந்த பட்டமே கன்னட சினிமாவில் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. ‘பதே பதே’ என்ற கன்னடப் படத்துக்குப் பிறகு பார்த்திபன் கண்ணில் சிக்கியவருக்கு முதல் தமிழ்ப் படமே நல்ல ஓபனிங்காக அமைந்துள்ளது.

*‘லிங்கா’ படத்தின் ஒவ்வொரு டேக் இடைவேளை யிலும் 10 நிமிஷமாவது ரெஸ்ட் எடுக்கிறார் ரஜினி. கட்டாய ஓய்வை பரிந்துரைத்திருக்கிறார்கள் டாக்டர்கள். சண்டைக் காட்சிகளை கடைசியாக படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

*மணிரத்னத்தின் புதிய படத்திற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா, சூர்யா அளவிற்கு நடிகர்கள் பேசப்பட்டார்கள். ஸ்கிரிப்ட் சுருக்கமும் அவர்களுக்கு சொல்லப்பட்டது. இப்போது இவர்கள் யாரும் இல்லாமல் மம்முட்டி மகன் துல்ஹர், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

*தமன்னாவின் மூன்று இந்திப் படங்களும் தோல்வியடைந்து விட்டன. அதனால் வெறுப்பான தமன்னா, மும்பை வீட்டை காலி செய்து விட்டார். இனி தெலுங்கு, தமிழ்ப்படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கும் அவர், புது போட்டோ ஆல்பம் ரெடி செய்து உலவ விட்டிருக்கிறார்.

*செல்வராகவன் தன் மனைவி கீதாஞ்சலி யை டைரக்டர் ஆக்கி விட்டார். தான் செய்வதற்கு வைத்திருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ ஸ்கிரிப்ட்டை தூக்கி அவரிடமே கொடுத்து விட்டார். ஏழு நாட்கள் ஷூட்டிங்கும் நடந்து முடிந்து விட்டது.

*விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் தீபாவளிக்கு நிச்சயமாகிவிட்டது. ‘விஸ்வரூபம் 2’ பொங்கலுக்கு மாறிவிட்டது. அனேகமாக விஷாலின் ‘பூஜை’ தவிர எல்லாப் படங்களும் போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றன. நெடுநாட்களுக்குப் பிறகு முதல்வர் கலந்து கொள்கிற பாடல் வெளியீட்டு விழா ‘ஐ’ என்கிறார்கள். அவரோடு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், ஜாக்கி சான், கமலஹாசன் பங்கு பெறுகிறார்கள்.

*இப்போது சமந்தாவின் க்ளோஸ் ஃபிரண்ட் இடத்தில் இருப்பது, நூர். ஷூட்டிங் போவதற்கு முன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து விடைபெறுகிறார். ஷூட்டிங் முடித்து சோர்வாக திரும்பினாலும் நூரை கொஞ்சி விட்டுத்தான் ஃபிரஷ் ஆகிறார். நெருக்கமானவர்களிடம் எப்போதும் நூர் புராணம் பாடுகிறார். த்ரிஷா பாணியில் சமந்தா

*தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ரெடியாகி விட்டது. பின்னணி இசை முடிந்தால் வெளியிடவே ரெடி. ஆனால், தீபாவளிக்கு ‘ஐ’ வருவதால் தாமதிக்கிறார்கள். தீபாவளி படங்கள் ரிலீசுக்கு தாமதமானால் ‘அனேகனை’ அனேகமாக களமிறக்குவார்கள். இல்லாவிட்டால் நவம்பர் ரிலீஸ்தான்.

*ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அப்டேட்டில் அனல் பறந்துகொண்டிருந்த சந்தானம் இப்போது இருக்கும் இடமே தெரியவில்லை. கதாநாயகன் ஆசை அவரை பீடித்துக் கொள்ள, தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை அணுகத் தயங்குவதே சந்தானத்தின் தலை
மறைவுக்குக் காரணம்.

*ஆர்யாவின் தம்பி நடித்த ‘அமரகாவியம்’ படத்தை அவரது நண்பர் குழுவினர் பார்த்து விட்டார்கள். அதில் நயன்தாரா, விஷால், ஜீவா, ஜெயம் ரவி, ஹன்சிகா என அத்தனை பேரும் அடக்கம். படம் பார்த்த பிறகு எல்லோரும் ஆர்யா வீட்டிற்குப் போய்
பிரியாணி சாப்பிட்டார்கள்.

*‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகாவைவிட எனக்குத்தான் முக்கியத்துவம் என்று ராய் லட்சுமி தனது நட்பு வட்டாரங்களில் பெருமையடித்துக் கொண்ட செய்தி இயக்குனர் சுந்தர்.சியின் காதில் விழ, லட்சுமியை காய்ச்சி எடுத்துவிட்டாராம் அவர். மீடியாவில் அடிபட்ட இந்த செய்தியை அறிக்கை விட்டு மறுத்திருக்கிறார் ராய் லட்சுமி. பெயர் மாற்றம் நல்லா வேலை செய்யுது போல...

*‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ வெற்றிக்குப் பிறகு இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக புழங்கி வரும் ‘உப்புமா கம்பெனி’ என்ற வார்த்தையையே அடுத்த படத்தின் தலைப்பாக அறிவித்துவிட்டார். உடனே கதை அமர்வில் உட்கார்ந்தும் விட்டார்.

*‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் தொடர்ந்து ஜீவாவுடன் ஜோடி போட்டவர் பூனம் பஜ்வா. இடையில் காணாமல் போயிருந்தவர் ஜெயம் ரவி - ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இரண்டாவது நாயகியாக ரீ என்ட்ரி ஆகிறார். இவருக்காக நண்பன் ஜெயம் ரவியிடம் பூனத்தை சிபாரிசு செய்ததே ஜீவாதான் என்கிறார்கள்.

*மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைகோர்க்கிறார் பிரபுதேவா. தற்போது பாலிவுட்டில் ‘ஆக்ஷன் ஜாக்ஸன்’, ‘சிங் இஸ் ஃபீலிங்’ படங்களை இயக்கிக்கொண்டிருக்கும் நடனப்புயல், இவற்றை முடித்துவிட்டு விஜய் படத்தை ஆரம்பிக்கிறாராம். ‘கத்தி’யைத் தொடர்ந்து சிம்புதேவன் படத்தில் நடிக்கும் விஜய்யின் அடுத்த கால்ஷீட் பிரபுதேவாவுக்குத்தான் என்கிறது நடனப்புயலின் வட்டாரம்.