சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சனியும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்


சிம்ம லக்னத்தில் பிறந்து இப்படி ஒரு சேர்க்கை பெற்றவர்கள், தனிமையின் சுகமும், தவத்தின் அருமையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மலையும் காடும் இவர்களுக்குப் பிடித்தமானது; நாடும் நகரமும் அதன் நெரிசலும் இவர்களை எரிச்சல்படுத்தும். ஆனாலும், எல்லோராலும் அப்படிப் போய்விட முடியுமா என்ன? எனவேதான், சூரியனும் சனியும் சேர்ந்தால் அடுக்குமல்லி போல பிரச்னைகள் தாமாக மலர்ந்து எதிரில் நிற்கும்.



இவர்களும் பிரச்னைகளுக்குப் பழகிக் கொள்வார்கள். நகமும் சதையும்போல ஏதேனும் பிரச்னை இவர்களைச் சூழ்ந்தபடி இருக்கும். காரணம் என்னவெனில், லக்னாதிபதியான சூரியனோடு ஆறுக்குரிய கிரகமான சனி சேர்கிறது. அநாவசியமாக எதிலும் ஈடுபடாமல் தாமரை இலை மீது தண்ணீர் போல இருந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி எப்போதும் இருக்கவும் முடியாது. அதனால்தான் இவர்கள் கரடுமுரடான பாதையில் நடக்கத் தொடங்கி விடுவார்கள். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த சேர்க்கைதான் மிகவும் கடினமானதும், சவால்மிக்கதும், ஆபத்தானதுமாகும்.

இவை இரண்டும் சேர்வது, முரண்பாடு களின் முழுத் தொகுப்பாகும். மண வாழ்க்கையில் சூறாவளியை உண்டாக்கி விட்டுச் செல்லும். சூரியன் தலைமைக் கிரகம். சனியோ தொழிலாளி. ‘‘நான் சொன்னால் கேட்க வேண்டும்’’ என்றும், ‘‘எனக்கும் தன்மானமுள்ளது’’ என்றும் எப்போதும் ஒரு மனப்போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் சூரியன் - சனி சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும், பூப்பெய்துதலிலிருந்து பிரச்னை தொடங்கும். மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி என்று தொடரும். ஆண்களுக்கு பார்வைக் கோளாறு, காலில் அடிக்கடி அடிபடுதல் என்றெல்லாம் இருக்கும். 

இனி எந்தெந்த இடத்தில் இவர்கள் இணைந்தால் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்... லக்னத்திலேயே - அதாவது சிம்மத்திலேயே ராசிநாதனாகிய சூரியனோடு ஜென்மப் பகையான சனி இணைந்தால், சூரியனின் வேகமும் சனியின் மந்தமும் ஒருசேர இவர்களிடத்தில் காணப்படும். சனி பகவான் ஆறுக்கும் ஏழுக்கும் உரியவராவார். எனவே, சிறு வயதிலிருந்தே ஏதேனும் உடம்பு படுத்தியபடி இருக்கும். எந்த விஷயத்திலுமே ஆர்வமில்லாமல் மசமசவென்று இருப்பார்கள்.

உடனே எந்த காரியத்தையும் முடிக்க மாட்டார்கள். தலைமைப் பண்பும், பொறுப்பேற்கும் தன்மையும் சுத்தமாக இருக்காது. எவ்வளவு முக்கியமான விஷயமானாலும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். குரூரமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்படு வார்கள். இவர்களை மூளைச் சலவை செய்வது எளிது. தனித்தன்மையோடு இருந்து, காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டால் இவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும். இல்லையெனில், காற்றினால் அலைக்கழிக்கப்படும் தூசு போன்று அல்லாடுவார்கள்.

இரண்டாம் இடமான கன்னியில் இந்த இரண்டு கிரகச் சேர்க்கை சமபலத்தோடு இருக்கும். இவர்களுக்கு ஆரம்பக் கல்வி சுமாராகவும், உயர்கல்வி நன்றாகவும் அமையும். கையில் பணம் தங்காது. பல் வலி, கண்களில் குளோக்கோமா, மாறுகண் போன்ற பிரச்னைகள் வந்து நீங்கும். அளவாகப் பேசுவது எப்போதும் நல்லது. இல்லையெனில் உங்கள் பேச்சே எதிரிகளை உருவாக்கும். சுரீரென்று கோபம் வரும்.யாரேனும் ஒரு ஞானகுருவை வழிகாட்டியாகக் கொண்டால் இவர்கள் பல மடங்கு உயர்வார்கள். மனதில் பட்டதை மறைக்காமல் பேசுதல் போன்ற குணங்களும் உண்டு.

இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு இவர்கள்தான் முதலில் சென்று உதவுவார்கள். சிலருக்கு திக்குவாய் கோளாறும் இருக்கும். மூன்றாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் மிகுந்த நற்பலன்கள் உண்டு. ஆங்கிலம், பிரெஞ்சு என ஏதாவது அன்னிய மொழியில் புலமை பெறுவார்கள். இங்கு சனி உச்சமாவதாலும், கூடவே சூரியன் நீசமாகி இணைவதாலும் நீசபங்க ராஜயோகம் உண்டு. இளைய சகோதரருக்கு  இவர்களால் மிகுந்த நன்மை உண்டு.

கையில் பத்து பைசா இல்லாமல் துணிவையே துணையாகக் கொண்டு தொழில் தொடங்குவார்கள். சாம்பார் முதல் சாட்டிலைட் வரை எல்லாவற்றையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். சிலருக்கு காது மந்தத்தன்மை இருக்கும். போகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். பழங்காலப் பொருட்கள் சேர்த்து வைத்திருப்பார்கள். வாழ்க்கைத்துணை வந்தபிறகே இவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

நான்காம் இடமான விருச்சிகத்தில் இந்த சேர்க்கை இருந்தால், தாய், தந்தை இருந்தும் இல்லாதவர்களாக தாத்தா, பாட்டியிடமே வளருவார்கள். இவர்களின் தாயாருக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் வந்தபடி இருக்கும். கல்வித் தடை இருக்கும். இவர்கள் தங்கள் பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. நண்பர்களே உலகம் என்கிற எண்ணத்தை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நீர் நிலைகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. முக்கியமாக கடல். ஏனெனில், சனியே கடலை ஆள்கிறார். தாய்வழி உறவினர்களோடு அவ்வப்போது மோதல் ஏற்படும்.

விவசாயத்தில் ஈடுபாடு காட்டினால் பெரும் லாபம் பெறுவார்கள். இரவு நேரங்களில் இவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஐந்தாம் இடமான தனுசு ராசியில் சூரியனும், சனியும் ஒன்றாக இருந்தால் வாரிசுகள் கோபக்காரர்களாக இருப்பார்கள்.  சட்ட நுணுக்கங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு ஒருவரை எப்படி தப்ப வைப்பது என்பதையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். லக்னாதிபதியோடு சனி இங்கு சேரும்போது அவசரக் குடுக்கைத்தனமும், எதிலுமே மிகையுணர்ச்சியையும் கொள்ள வைக்கும். இவர்கள் புத்திசாலியா அல்லது புத்தி மட்டானவர்களா என்று புரியாத அளவுக்கு சில நேரங்களில் நடந்து கொள்வார்கள்.

பூர்வீகச் சொத்தை மிகவும் கஷ்டப்பட்டு  வழக்காடித்தான் பெற வேண்டி இருக்கும். காலதாமதமாகக் குழந்தைப் பேறு கிட்டும். தாய்மாமன் வழியில் அவ்வப்போது பிரச்னைகள் வந்தபடி இருக்கும். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதை நினைவில் கொண்டால் நல்லது. ஆறாம் இடமான மகர ராசியில் சூரியனும், சனியும் அமர்ந்து மறைவது மிக மிக நல்லது. திடீர் பணவரவு, வழக்கில் வெற்றி, ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் என நன்மைகள் தொடரும். அரசுத் துறையில் மாபெரும் பதவியை வகிப்பார்கள்.

பகைவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்துவிட்டு மத்திம வயதில்தான் தாய்நாடு திரும்புவார்கள். சரீரம் மிகவும் மெல்லியதாக ஆகாமல் இவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏழாம் இடமான கும்பம் வாழ்க்கைத்துணையைக் குறிப்பதால், இவ்விரு கிரகங்கள் இங்கு இணைந்து அமர்ந்தால் ஒரே வயதுள்ள அல்லது தன்னை விட மூத்த பெண் மனைவியாக அமையும் வாய்ப்புண்டு.

விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டால்தான் திருமண வாழ்வு ருசிக்கும். கலப்புத் திருமணம், காதல் திருமணம் போன்றவற்றிற்கும் வாய்ப்புண்டு. கூட்டு வியாபாரத்தைத் தவிர்த்தல் நல்லது. சமாதானம் பேசுவதற்கு இவர்கள் தூது செல்லாமல் இருப்பது நல்லது. வீண்பழி வந்து சேரும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நேர்மையான, நம்பத்தகுந்த நபர்கள் மூலம் சென்றால் மிகவும் நல்லது. ‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’ என்கிற மகாவாக்கியத்தை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நல்லோர் போர்வையிலுள்ள தீயவர்களின் சேர்க்கையால் பெரும் அவஸ்தைப்படுவார்கள்.

மீன ராசியான எட்டில் சூரியனும் சனியும் மறைந்தால் நல்லதுதான். இது நீண்ட ஆயுளைத் தரும். ஆனால், சிறு சிறு விபத்தையும் ஏற்படுத்தும். நிறைய பேர் ஹோட்டல், போர்டிங் லாட்ஜிங் வைத்து நடத்துபவர்கள் உண்டு. அரசாங்க விருது களைப் பெறுவார்கள். சாதாரணமாகப் பேசி முடிக்க வேண்டிய விஷயத்திற்கெல்லாம் வழக்கு வரை செல்வார்கள். யாரையும் நம்பி எந்தப் பொருளையும் இவர்கள் ஒப்படைக்கக் கூடாது. ஓவியர்களாகவும் இவர்கள் மிளிர்வார்கள். இவர்கள் சதா பயணத்திலேயே இருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான மேஷத்தில் சூரியனும் சனியும் இடம் பெறும்போது தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே போட்டி இருந்துகொண்டே இருக்கும். தான் செய்வதுதான் சரி என்று ஒருவரையொருவர் விஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் அவ்வப்போது சிறு விரிசல் வந்து நீங்கும். இவர்களில் பலர் தர்ம நிறுவனங்களுக்கு நிறைய நிதி அளிப்பார்கள். முன்னோர்கள் குறித்த ஆராய்ச்சியில் இறங்குவார்கள். சொந்த ஊர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையோடு இருக்கவே விரும்புவார்கள். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தவரைக்கூட மறக்க மாட்டார்கள்.  

பத்தாம் இடமான ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்திருப்பதால் துறவறத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். பால்யத்திலேயே பாத யாத்திரை செல்வார்கள். இவர்கள் சித்த வைத்தியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருப்பார்கள். வனவியல் துறை, சுற்றுலாத்துறை, கெமிக்கல் கம்பெனி, உளவுத்துறை, கோழிப் பண்ணை போன்ற முக்கிய துறைகளில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். குலத் தொழிலில் ஆர்வம் செலுத்தி செய்வோரும் உண்டு. சிறுசிறு நகரங்களை உருவாக்குவார்கள்.

பதினோராம் இடமான மிதுன ராசியில் சூரியனும் சனியும் அமர்ந்தால் மூத்த சகோதரரோடு பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கும். எல்லா விஷயத்திற்கும் கணக்கு பார்க்க ஆரம்பிப்பார்கள். மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பது நல்லது. இல்லையெனில் அவரால் பிரச்னைகள் வரக்கூடும். திறமையிருந்தும் வெளிப்படுத்துவதில் தயக்கம் இருந்தபடி இருக்கும். பன்னிரண்டாம் இடமான கடகத்தில் சூரியனும் சனியும் மறைவதால் தூக்கம் வராது தவிப்பார்கள்.

பழைய கெட்ட நினைவுகளை மறக்காமல் இருப்பார்கள். அடுத்தடுத்து வாழ்க்கைப் படியில் செல்ல வேண்டுமே என்கிற எண்ணமே இல்லாமல் கிடப்பார்கள். இவர்களை யாராவது உந்தித் தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல வீண்பழிக்கு ஆளாவார்கள். அதனால் யாராக இருந்தாலும் இரண்டடி தள்ளியே இருங்கள். ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல’ எனும் குறளை மனதில் கொள்ளுங்கள்.    

இந்த அமைப்பானது பெரும்பாலும் எதிர்மறைக் கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்களே, அதுபோன்றது இது. ஏனெனில், இந்த இரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டே இருப்பதால் எந்த காரியத்தையுமே உருப்படியாகச் செய்ய முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே, இவர்கள் மலை மீது அமைந்துள்ள புராதன சிவாலயங்களுக்குச் சென்று வருதல் நல்லது. அப்படிப்பட்ட தலமே திருக்கழுக்குன்றம் ஆகும். இங்குள்ள மலையே வேத சொரூபமாதலால் வேதகிரீஸ்வரர் எனும் நாமம் இவருக்கு.

வாழைப்பூவின் குருத்து போன்ற சுயம்புலிங்கமாய் தரிசனம் அளிக்கிறார். கருவறைக் கூரையின் ஒருபுறம் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது கருவறையிலிருக்கும் அனைத்து பூஜா பொருட்களும் சிதறிக் கிடக்குமாம். ஆனால் இந்த வேதகிரீஸ்வரர் மட்டும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அருட்காட்சியளிப்பாராம்.

மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள நான்கு வாசல்களிலும் மிகப்பெரிய கோபுரங்களுடன் கூடிய மாபெரும் ஆலயத்தில் பக்தவத்சலர் எனும் திருப்பெயரோடு லிங்க ரூபமாய் அருள்கிறார். இக்கோயில் தாழக்கோயில் என அழைக்கப்படுகிறது. வெளிப் பிராகாரத்தில் திரிபுரசுந்தரி அன்னை சந்நதி உள்ளது. சென்னைக்கு அருகே செங்கல்பட்டு-மகாபலிபுரம் நடுவே திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)