நதிகளின் மஹா கும்பமேளா



ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மஹா கும்பமேளா’ என்ற விழாவுக்கு கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அமைதியான முறையில் ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இன்றிருக்கும் எல்லா மதங்களை காட்டிலும் பழமையானதும் இந்திய வாழ்க்கை முறைகளோடு பின்னிப்பினைந்ததுமான ஹிந்து மதத்தின் மிக முக்கிய மத சடங்குகளில் ஒன்றாக இந்த ‘மஹா கும்பமேளா’ இருக்கிறது.

பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த திருவிழாவுக்கு பின்னணியில் மிக சுவாரஸ்யமான கதை ஒன்றிருக்கிறது. அந்த கதை என்ன என்பதையும் , இந்த திருவிழா எந்தெந்த இடங்களிலெல்லாம் நடைபெறுகிறது, இந்த விழாவின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஹரித்வார், அலஹாபாத், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் இந்த கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. இந்த நான்கு இடங்களிலும் ஒரே நேரத்தில் இல்லாமல் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒவ்வொரு இடத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு  ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி நாளில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் மார்ச் மாதம் வரை தொடர்ந்து நிகழும் இந்த சமயத்தில் 10 முதல் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கும்பமேளா திருவிழாவை பற்றி மிக சுவாரஸ்யமான ஒரு புராணக்கதை நம்பப்படுகிறது. பாகவத புராணப்படி துருவாச முனிவரின் சாபத்தினால் தங்களுடைய சக்திகளை எல்லாம் இழந்த தேவர்கள் பிரம்மா மற்றும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகின்றார். அவர்களோ உங்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கக் கூடியவர் மகாவிஷ்ணு ஒருவரே என்று கூறி தேவர்களை விஷ்ணு பரமாத்மாவிடம் செல்லுமாறு சொல்கின்றனர்.

விஷ்ணுவை சென்று பார்க்கும் தேவர்களை ‘க்ஷிர் சாகரம்’ என்ற கடலை கடைந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தி இழந்த உங்கள் சக்தியை திரும்ப பெறுமாறு வழிகாட்டுகிறார். இந்த சமயத்தில் தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பதற்காக அவர்களையும் அமிர்தத்தை கடையும் பணியில் ஈடுபடுமாறு விஷ்ணு கேட்டுக்கொள்கிறார்.

அப்படி அவர்கள் கலந்து கொண்டால் கிடைக்கும் அமிர்தத்தில் பாதியை அவர்களுக்கு தர தேவர்களும் ஒத்துக்கொள்கின்றனர். அதன்பின் க்ஷிர் சாகர் நதியின் மத்தியில் மந்தார மலையை கொண்டு தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக கடைகின்றனர். இந்த மந்தார மலையை ‘கூர்ம அவதாரம்’ எடுத்து விஷ்ணு பகவான் தாங்கிப்பிடிக்கிறார்.
மந்தாகினி நதியில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டதும் அதனை அடைவதற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை வருகிறது . அப்போது மோகினி என்னும் அழகிய மங்கையாக வரும் விஷ்ணு பகவான் அசுரர்களின் பிடியில் இருந்து அமிர்தத்தை காக்கும் பொருட்டு அதனை எடுத்து சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் அமிர்தத்தை எடுத்து செல்லும் போது நான்கு அமிர்த துளிகள் பூமியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அந்த துளிகள் விழுந்த இடங்களாகிய அலஹாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகியவற்றில் உள்ள புண்ணிய நதிகளின் கரையில் இந்த கும்ப மேளா விழா கொண்டாடப்படுகிறது.ஹரித்வாரில் பாயும் கங்கை நதி, அலஹாபாத்தில் பாயும் யமுனை நதி, நாசிக்கில் உள்ள கோதாவரி நதி மற்றும் உஜ்ஜைனில் உள்ள ஷிப்ரா நதிகளின் கரையில் இந்த கும்பமேளா விழா வெகு விமர்சையாக  கொண்டாடப்படுகிறது.
இந்த கும்பமேளாவின் முக்கிய சடங்கு அந்த விழா நடைபெறும் நதிக்கரையில் குளிப்பது தான். அமிர்த துளிகள் விழுந்த இந்த நதிகளில் குளிப்பதால்   தாங்கள் செய்த பாவங்களில் இருந்து விமோச்சனம் கிடைக்கும் என்பது இங்க வரும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் இந்த பண்டிகை நடக்கும் இடங்களுக்கு சாதுக்கள் மற்றும் அகோரிகள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து இங்குள்ள நதியில் நீராடுக்கின்றனர்.இந்த பண்டிகையில் கலந்துகொள்வதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து முக்கிய ஆன்மிக குருக்கள் வருகின்றனர். அவர்களிடம் ஆசி பெறுவதற்காகவும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த பண்டிகைக்கு வருவதால் அவர்களின் வசதிக்காக மாநில அரசுகள் மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்கின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன, நடமாடும் மருத்துவமனை, பேரிடர் மீட்பு படையினர் போன்றவை தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.மஹா கும்பமேளா நம்முடைய இந்திய நாட்டின் பாரம்பரிய நம்பிக்கைகளின் நிகழ்ச்சியாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

குடந்தை நடேசன்