காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-மாலியவான்



நல்லவர்கள்! என்றும் உண்டு; எங்கும் உண்டு. உறவுகள் ஏதேனும் தவறுசெய்தால், அருகில் இருந்து அடிக்கடி அறவுரை-அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள்; “நாம் சொல்வதை இப்போது இவன் உதாசீனம் செய்தால்கூட, என்றாவது ஒருநாள் கேட்காமலா போய் விடுவான்?”என்ற எண்ணத்தில்,

நல்லதைச் சொல்லிக் கொண்டிருக்கும்
நல்லவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான்
‘மாலியவான்’.

 சுகேசன் எனும் ராட்சஸனின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அறிந்த கிராமணி எனும் கந்தர்வன் தன் மகளான தேவவதி என்பவளை, சுகேசனுக்குத் திருமணம் செய்து வைத்தார். சுகேசனுக்கும் தேவவதிக்கும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்; பிள்ளைகளுக்கு மாலியவான்,சுமாலி, மாலி எனப் பெயரிட்டார்கள்.  பிள்ளைகள் மூவரும் பிரம்மதேவரைக் குறித்துக் கடும்தவம் செய்து, வரங்கள் பலவற்றைப் பெற்றார்கள்;“பகைவர்களை நாங்கள் வெல்ல வேண்டும்; எங்களை யாரும் வெல்லக்கூடாது; நீண்ட ஆயுள், அளவில்லா அதிகாரம் ஆகியவற்றை அருள வேண்டும்; எங்களுக்குள் உள்ள அன்பு ஒருபோதும் குறையக்கூடாது” என்பதே அந்த மூன்று அரக்கர்களும் பெற்ற வரம்.

 தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் ஒரேஒரு வித்தியாசம்தான். உழைத்து சம்பாதித்த செல்வத்தை நல்வழியில் செலவழிப்பவர்கள்-தேவர்கள்; உழைத்து சம்பாதித்த செல்வத்தைத் தீய வழியில் செலவழிப்பவர்கள் அரக்கர்கள்.இதை மிகவும் அழகாகச் சொல்வார் சுவாமி சித்பவானந்தர்; “தேவர்கள் கடுந்தவம் செய்து வரங்கள் பெறுவார்கள்; சமாளிக்கமுடியாத பிரச்னை என்று வந்தால், தெய்வத்தின் திருவடிகளில் போய் விழுவார்கள். அரக்கர்களோ கடுந்தவம்செய்து வரம் பெறுவார்கள்; பெற்ற வரங்களைத் தீயவழியில் அடுத்தவர்களை அழிப்பதற்காகவே உபயோகிப்பார்கள்;  அல்லல் படுவார்கள்” என்பது அவர் வாக்கு.

இதற்கு எடுத்துக்காட்டுதான் மாலியவான்,சுமாலி, மாலி எனும் மூவர் வாழ்க்கை. வரங்களைப் பெற்றவுடன், ஆணவத்தின் காரணமாக நல்லவர்கள் அனைவருடனும் போர்செய்யத் தொடங்கினார்கள் மூவரும்.  அது மட்டுமல்ல; அசுர சிற்பியான விசுவகர்மாவை அழைத்து, “தேவதை
களுக்கு எல்லாம் அற்புதமாக சிருஷ்டி செய்து கொடுக்கிறாயல்லவா? அதேபோல எங்களுக்கும் ஓர் அற்புதமான நகரத்தை சிருஷ்டி செய்து கொடு!” என்றார்கள்.

விசுவகர்மா உடனே பதில் சொன்னார்; ”ஏற்கனவே இந்திரனின் உத்தரவுப்படி, இலங்கை என்ற நகரை சிருஷ்டி செய்திருக்கிறேன் நான். மிகவும் அழகான அது, இந்திரனின் அமராவதிப் பட்டினம் போல் விளங்குகிறது. நீங்கள் அங்கு போய் இருக்கலாம்” என்றார்.

பிறகென்ன? மாலியவான் முதலான மூவரும் இலங்கையைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டார்கள். மாலியவானுக்கும் சுந்தரி என்பவளுக்கும்; சுமாலிக்கும் கேதுமதி என்பவளுக்கும்; மாலிக்கும் வசுதை என்பவளுக்கும் திருமணம் நடந்தது. மூவருக்கும் குழந்தைகளும்
பிறந்தார்கள். 48வரபலத்தின் காரணமாக நல்வாழ்வு பெற்றதும், அரக்கர் மூவரும் அமரர்களுக்கும் அருந்தபசிகளுக்கும், பெரும்துயரை விளைவிக்கத் தொடங்கினார்கள்.அல்லல்பட்ட அனைவரும் அலையாழி அறிதுயிலும் மாயனான மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் அரக்கர்களுடன் போரில் ஈடுபட்டார்; போரில் மாலி இறக்க, மற்றவர் அனைவரும் போர்க்களத்திலிருந்து விலகி ஓடித் தப்பிப் பிழைத்தார்கள்.

தப்பிப்பிழைத்த மாலியவான், சுமாலி ஆகியோரில் சுமாலியின் மகளான கைகசிக்கும்விஸ்ரவஸ் என்ற முனிவருக்கும் பிறந்தவர்கள்தான், ராவணன்-கும்பகர்ணன்- விபீஷணன்-சூர்ப்பணகை ஆகியோர்.  ஏற்கனவே மகாவிஷ்ணுவிடம் போரில் ஈடுபட்டுப் பெரும் தோல்வியைத்தழுவித் தப்பிப்பிழைத்து அனுபவங்களை உணர்ந்த மாலியவான், சகோதரன் பேரனான ராவணனுக்கு அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தார். ஆனால் தாத்தா சொன்ன எதையுமே, ராவணன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அதற்காக மாலியவானும் தன் அறிவுரையை நிறுத்தவில்லை. வாலி வதம் முடிந்து, ஆஞ்சநேயர் இலங்கை வந்து இலங்கையைக் கொளுத்திவிட்டுத்திரும்
பியதும்  ராமர் படைகளுடன் கடல்தாண்டி வந்து தங்க,அங்கதன் தூதும்முடிந்து,ராவணன் ஏவலால் ஒற்றர்கள் வந்து வானரச் சேனையைப்பற்றிய தகவல்களை ராவணனிடம் சொல்ல, ராவணன் மந்திரா லோசனைசபை கூட்டினான்.

 அப்போது, அனுபவசாலியான மாலியவான் தன் பேரனான ராவணனுக்குச் சில வார்த்தைகள் சொல்லத் தொடங்கினார்.
“ராவணா! ஊழிக்காலத் தீயைப் போன்ற ராமனின் அம்புகளால் சமுத்திரராஜன் நடுங்கிப்போய், ஔிவீசும் நவமணி மாலையைக் கொண்டு வந்து ராமனுக்கு சமர்ப்பித்தான் என்பது, என் நெஞ்சில் சூலாயுதத்தால் குடைவதைப்போல இருக்கிறது.வருணபகவானே வணங்கி வழிசெய்து கொடுத்தான் என்றால், கேட்கவா வேண்டும்?

“மன்னா! வானர வீரர்கள் பெரும்பெரும் மலைகளைப் போட்டுக் கடலை அடைத்தார்கள் என்பதை அறிந்தபோது, அப்பாறைகள் என் நெஞ்சில் விழுவதைப்போலவே உணர்ந்தேன்.இவ்வளவிற்குப் பிறகும் அவர்களை வெல்ல முடியும் என நினைக்கலாமா?”எனப் புத்திமதி சொன்னார்.
 ராவணன் கேட்பானா? உதட்டைக்கடித்துக் கண்களில் கோபக்கனலைக் காட்டி, ”நன்றாக இருக்கிறது. நமது மந்திராலோசனை நன்றாகவே இருக்கிறது. பேசாமல் நீயும் என் தம்பியான விபீஷணனுடன் போய், நன்றாக வாழ்!” என்று கொதித்தான்.

அதன்பின் சேனாதிபதி பேசி முடிக்க, மாலியவான் தொடர்ந்தார்; மாலியவானின் இந்த உபதேசம் அற்புதமானது; அனுபவத்தில் கண்ட தெய்வீக உணர்வை அடியார் ஒருவர் விவரிப்பதைப்போல, தெளிவாக அமைந்துள்ளது.மாலியவான் தொடங்கினார்; ”பரம்பொருளே தசரதன் மைந்தன் ராமனாக - நம்முடன் போர்செய்ய வந்திருக்கின்றான். ஆதிசேஷனே லட்சுமணனாக வந்திருக்கிறான். மகாவிஷ்ணுவின் வில்லே(அகத்தியர் மூலமாக) ராமனிடம் வந்துள்ளது.

“வாலியின் மகனான அங்கதன் இந்திரனின் அம்சமாக வந்திருக்கிறான். அக்கினி பகவானே நீலனாக வந்திருக்கின்றான். தூது வந்தானே ஆஞ்சநேயன், அவன் வாயுவும் ருத்திரனும் இணைந்த வடிவம். அது மட்டுமல்ல! அந்த ஆஞ்சநேயன் இப்பிறவியின் பின், பிரம்மதேவனாக வரப்போகிறான்.

“அந்தப் பிரம்ம பதத்தை அனுமனுக்குக் கொடுத்தவனான ராமன், அரக்கர்களையெல்லாம் அடியோடு அழிப்பதற்காக இங்கே இலங்கைக்கு வந்திருக்கிறான். தேவர்கள் பலரும் வானரங்களாக வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
“அவர்கள் சொல்வது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். பாற்கடல் கடையும்போது அமிர்தத்துடன் அவதாரம் செய்த லட்சுமியே, சீதையாக வந்திருக்கிறாள்; உலகுக்கெல்லாம் தாயானவள் அவள்; எளிமையாக இருப்பதால் அவளைச் சாதாரணமானவளாகக் கருதி, இகழ்வானவளாக எண்ணாதே!

“ராமன் காட்டிற்கு வந்ததே, தேவர்களின் தூண்டுதலால் தான். ராவணா! உன்னை முடிப்பதற்காகவே மகா விஷ்ணு - ராமனாக, மனிதனாக வந்திருக்கிறார்.“மேலும் இப்போது இலங்கையில் அபசகுனங்கள் ஏராளமாக நிகழ்கின்றன. உலகிற்கே தாயான சீதாதேவியைக் கண்டுபிடிப்பதற்காக வந்த அனுமன் தாக்கியதால், இலங்கையின் அதிதேவதை இலங்கையை விட்டு நீங்கிப்போய் விட்டது; அதை நிரூபிக்கும் வண்ணமாக
இப்போது போரும் வந்துள்ளது.

“உத்தமனும் தேவகுரு பிரகஸ்பதியை விட உயர்ந்தவனும் ஞானியுமான விபீஷணன்,ராவணன் முதலான அரக்கர்கள் ராமனின் அம்புக்குப் பலியாவார்கள் - என்று சொல்லி விட்டுப்போனான். ராவணா! நல்லவர்கள் பேசிய பேச்சுக் களையெல்லாம் கேட்ட நான், அவற்றையெல்லாம் விரிவாகவே சொல்லியிருக்கிறேன் உனக்கு.

“அது மட்டுமா? என் சொந்த அனுபவத்தில் கண்டது;அரக்கர் குலத்தையெல்லாம் ஏற்கனவே மகாவிஷ்ணு அழித்திருக்கிறார். அதை அறிந்ததாலும் உன்மேல் உள்ள அன்பினாலும் என் மனதில் வேதனை தோன்ற, மனம் வருத்தத்துடன் நடப்பதையெல்லாம் சொன்னேன். சீதையை விட்டு விடு! இந்தத் தீமையெல்லாம் நீங்கிவிடும்”என்று விரிவாகச்சொல்லி முடித்தார் மாலியவான்.ராவணனா கேட்பான்? மாலியவானைப் பல விதங்களிலும் இழிவாகப்பேசி ஒதுக்கினான்.

அதன்பின் ராவணன் ஒரு கோபுரத்தின் மீதேறி ராம ரையும் படைகளையும் பார்க்க ராவணனை அறிந்த சுக்ரீவன் ‘பளிச்’சென்று பாய்ந்து ராவணனின் பத்து மணிமகுடங்களையும் தள்ளி, அவற்றில் இருந்த மாணிக்கங்களைப் பறித்து வந்தான். சுக்ரீவன் திரும்பிய பிறகு, ராவணன் அவையைக் கூட்டி ஆலோசனை செய்ய, நிகும்பன் என்பவன் எழுந்தான்; ”அரசே! ஆயிரம் வெள்ளம் அரக்கர் சேனை நம்மிடம் உள்ளது.

அப்படியிருக்க,எழுபது வெள்ளம் வானரப்படைகளைக் கொண்டு, அந்தப் பகைவர்களால் என்ன செய்து விட முடியும்? இரும்புத்தூண்(உலக்கை), கோடாரி, எரியீட்டி, கதை, வாள், வேல், சூலம் முதலியவைகளைத் தாங்கி, நாம் போர்புரியும்போது, தேவர்களே ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுக் கும்பிட்டபடியே ஓடுவார்கள் என்றால், வெறும் கையுடன் வந்திருக்கும் இந்தக் குரங்குகளா நம்மை வெல்லமுடியும்?” என்று ராவணனை அனுசரித்தே பேசினான்.

நிகும்பன் இவ்வாறு பேசி முடிந்ததும்,அதை மறுக்கும் விதமாகப் பேசத் தொடங்கினார் மாலியவான்; ”என்ன பேசுகிறாய் நீ? அனுமன் இங்குவந்து இந்நகரைக் கொளுத்தியபோது அவன் கையில் என்ன, சக்கராயுதம் வைத்து இருந்தானா? வில்-அம்பு ஆகியவற்றையாவது கையில் வைத்திருந்தானா அனுமன்? “பத்து மலைகள் போன்ற உன் மணிமகுடங்களிலிருந்து முழுவதுமாகப் பிடுங்கிக்கொண்டு போனானே; அந்த சுக்ரீவன் என்ன, சூலம்-வாள்-வேல் ஆகிய ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தானா? இல்லையே! வெறுங்கையுடன்தானே வந்து,பெரும் சேதங்களை உண்டாக்கிவிட்டுச் சென்றார்கள்?

“சொல்வதைக்கேள்! ராமனின் அம்புகள் இங்கு வருவதற்கு முன்னால், சீதையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்களை உடைய நாம், ஆயுதங்களில்லாத ராமனைச் சரண் அடைவதுதான் பிழைக்கும் வழி!  இதைத்தவிர நாம் உயிர் பிழைக்க வேறுவழியே கிடையாது”என்று பொறுமையோடு தெளிவாகச் சொன்னார்.

புக்கெரி மடுத்து இவ்வூரைப் பொடிசெய்து போயினாற்குச்சக்கரமுண்டோ? கையில் தனுவுண்டோ? வாளியுண்டோ?இக்கிரி பத்தின் மௌலி இனமணி அடங்கக் கொண்ட
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வாளும் வேலும்?
(கம்ப ராமாயணம்)

 மாலியவான் என்னதான் சொன்னாலும் ராவணன் கேட்பதாக இல்லை; கண்களில் தீப்பொறி பறக்க, “எனக்குக் கொடிய பழிச்சொல்லைச் சொல்கிறாய். உன் புத்தி ராமனிடம் போய் விட்டது. வரம்பில்லாமல் முறையற்ற தகுதியில்லாத வார்த்தைகளைப் பேசாதே!” என்று பேசி முடித்தான்.
முடித்த ராவணனுக்கு, அவன் மணிமுடிகள் பத்தும் அற்றபோது மறுபடியும் மாலியவானின் உபதேசம் தொடர்ந்தது; மாலியவான் தன்
முயற்சியில் மனம் தளரவில்லை.

 ராம-ராவண யுத்தம் தொடங்கியது. முதல்நாள் போர்க்களத்திற்கு வந்த ராவணன் பெரும்தோல்வி கண்டான். ராவணனின் அந்த நிலையை வர்ணிக்கும் கம்பரின் பிரபலமான பாடல் !

 வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
 நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
 தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
 வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே
மீண்டுபோனான்.

(கம்ப ராமாயணம்)
 உரம் வாய்ந்த நெஞ்சின் ஆற்றல், தோள் ஆற்றல், நாவாற்றல், மணி மகுடங்கள் பத்து, சிவபெருமான் தந்த வாள் என எல்லாவற்றையும் போர்க்களத்தில் இழந்த ராவணன், வீரத்தையும் இழந்து அரண்மனை திரும்பி, படுக்கையில்வீழ்ந்தான்.
 அந்த நேரத்தில் மாலியவான் அங்கே
வந்தார்;“அப்பாடா! ராமனிடம் நன்றாக அடி
பட்டுத் தோற்றுப்போய், வந்து விழுந்திருக்கிறான். அனேகமாக இப்போது நாம் சொல்வதைக் கேட்டாலும் கேட்கலாம்”என்று எண்ணியவர் பேசத் தொடங்கினார்.

“ராவணா!மனதில் வருத்தம் மூள,உன் தோள் ஆற்றலும் வாடிப்போய் விட்டதே! வாடாத தவம் உடையவனே! என்ன நடந்தது?” எனக் கேட்டார் மாலியவான். அதற்காகவே காத்திருந்ததைப்போல, தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டினான் ராவணன்; போரிலே பட்ட அடிகள், அவனைப் புலம்ப வைத்தன; ”தாத்தா! ராமன் தம்பியான லட்சுமணன் ஒருவன் மட்டுமே போதும், நம்சேனையை அழிக்க. அப்படியிருக்க ராமனைப்பற்றிச் சொல்லவா வேண்டும்?

“ராமன் நம் படை வீரர்களை அழித்து என்மீது அம்புகளைப் போட்டு என்னைக் கலங்க அடித்தான். அப்போது கூட, அந்த ராமன் சிறு வயதில் கூனியின் முதுகில் விளையாட்டாக அம்பு போட்டதைப்போலத்தான் அம்புகளை வீசினானே தவிர, கொஞ்சம்கூடக் கோபப்படவில்லை.
“அது மட்டுமா? ராமன் அம்பு ஊழித்தீயையும் தீய்த்துவிடும்; செல்லும் திசையைத் தீய்த்து விடும்; ராமனின் அம்பைப்பற்றிச் சொன்னால், சொல்லும் வாயையும் தீய்த்துவிடும். அவ்வளவு உக்கிரமானவை ராமனின் அம்புகள் !

“தாத்தா! அந்த ராமன் ஒரு குரங்கின் (அனுமன்)மேல் ஏறி வந்தான்.அதுஎன்ன காற்றா?நெருப்பா? அல்லது யமனே இப்படிக் குரங்காக வடிவம்கொண்டு வந்திருக்கிறானா?ஊஹும்! இனிமேல் நாம் போர்க்களத்திற்குப் போய்த் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன
இருக்கிறது? ராமனைப் பார்க்கும்போது, மன்மதனும் நாமும் நாய்க்குச் சமம்தான்” என்று பலவாறாகப் புலம்பினான்.

“ராமனைப் பற்றியும் ராமன் வீசிய அம்புகளைப் பற்றியும் ராமன் ஏறிவந்த அனுமனைப் பற்றியும் தான் பட்ட அடிகளைப் பற்றியும் இவ்வளவு அனுபவித்துப் பேசும் இந்த ராவணன்,கண்டிப்பாக நாம்சொல்லும் அறிவுரையைக் கேட்பான் இப்போது” என்ற எண்ணத்தில், மாலியவான் பேரனுக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பித்தார்.

“ராவணா! ராமனுடைய ஆற்றலைப்பற்றி ஏற்கனவே உன்னிடம் சொன்னேன்; நீயோ வீணாக என்னிடம் கோபித்தாய். கோபம்என்பதை அறியாத உன்தம்பியான விபீஷணன் உனக்கு நல்லுரைகள் சொன்னான்; அதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை நீ! நாங்கள் என்ன சொன்னாலும் அதை நீ ஏற்பதில்லை. உன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா என்ன? முன்னுரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி இன்னுரைப் பொருளும் கேளாய் ஏதுவுண்டெனினும் ஓராய் நின்னுரைக்கு உரை வேறுண்டோ நெருப்புரைத்தாலு நீண்ட மின்னுரைத்தாலு மொவ்வா விளங்கொளி அலங்கல் வேலோய்  (கம்ப ராமாயணம்)

மாலியவான் இவ்வாறு சொன்னபோது, ராவணன் பதில் ஏதும் சொல்லவில்லை; மறுத்துப் பேசவும் இல்லை. அதன் காரணமாக மாலியவான் தொடர்ந்தார். “உண்மையான உறவினர்கள், அதுவும் அனுபவப்பட்டுத் தெரிந்த அனுபவசாலிகள், ‘ஐயோ! இவன் கெட்டுப்போகின்றானே’ என்று மனம் வருந்திச் சொன்ன நல்லவை எதையும் ஏற்காமல் ஒதுக்கி விட்டாய்; சொல்வதைக் கேள்! உன் செயலால் சுற்றத்தார்கள், நீ அடைந்த வெற்றி, நண்பர்கள், உன் கல்வி-செல்வம், போர் செய்து களைத்துப்போன படைகள் என அனைத்துமே இறந்து போய் விடும்; அதை நீயே பார்ப்பாய்!” என்று மாலியவான்,மேலும் விளையக்கூடியவற்றை விவரித்தார்.

அடிபட்டு - மனமும் உடலும் களைத்திருந்த ராவணன், மாலியவான் சொன்னதை ஏற்பான்போலத்தான் இருந்தது; ஆனால், அதை நடக்க விடாமல், மகோதரன் என்ற பெயரில் மாபெரும் தடை ஒன்று வந்தது.அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த மகோதரன்,“வெற்றியும் தோல்வியும் இயற்கை.தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்பினால், நிச்சயமாக வெற்றி நமக்குத்தான்” என்றான்.
 மாலியவானின் உபதேசங்கள் உதவாமல் போயின.

ஆசை வசப்பட்டவனுக்கு,தீயவனின் வார்த்தைகள் தாம் மனதில் பதியும் என்பது உண்மையானது. மாலியவானின் வார்த்தைகளை ஒதுக்கி மகோதரனின் வார்த்தைகளுக்கு மனதை ஒதுக்கினான் ராவணன்.
கும்பகர்ணனை எழுப்பிப் பலவந்தமாகப் போருக்கு அனுப்பினான்; நிச்சயம் வெற்றி
நமக்குத்தான் என்று அழுத்தமாக நம்பவும்
செய்தான். கெட்டவர்களின் எண்ணங்கள் ஒருசில சமயங்களில் பலிக்கலாம்; எப்போதும் பலிக்கும் என்று கூற முடியாதல்லவா?
 கும்பகர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்தான். ராவணனின் மன ஊக்கத்திற்குப் பெரும் தூணாக இருந்த கும்பகர்ணன் சாய்ந்த அந்த நிலையில்கூட, மாலியவான் ராவணனுக்கு மறுபடியும் உபதேசம் செய்யவில்லை.

கும்பகர்ணன் வீழ்ந்தபிறகு, இந்திரஜித் போர்க்களம் புகுந்தான்; நாகபாசம், பிரம்மாஸ்திரம் என இந்திரஜித் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப்போயின. மனம் வருந்திய ராவணன் சபையைக்கூட்டி ஆலோசனை செய்ய, மாலியவான் தன்னுடைய கடைசி உபதேசத்தைத் தொடங்கினார்;
“ஐயா! ராவணா! சீதையை ஏமாற்றுவதற்காக அரக்கர் பிணங்களையெல்லாம் இழுத்துக் கடலில் வீசி விட்டோம். அனுமன் மருந்து மலை கொணர்ந்தபோது, இறந்துகிடந்த வானரங்கள் எல்லாம் மீண்டும் உயிர்பெற்று எழுந்து விட்டன. மிச்சம்-மீதி இருக்கும் அரக்கர்களைக் கொல்
வதற்காகத்தான், அவை உயிர் பெற்று எழுந்தன போலும்!

“இலங்கையில் இருந்து ஒரே தாவாகத்தாவி, மேரு மலைக்கு அப்பாலுள்ள மருந்து மலையைக் கொண்டுவர, அனுமன் ஒருவனால்தான்
முடியும்.அப்படிப்பட்ட அனுமன் மருந்து மலையை
எடுத்த இடத்திலேயே வைப்பதற்காகச்
சென்றுள்ளான். திரும்பி வரும்போது அனுமன்
மேருமலையைத் தூக்கி வந்து இலங்கையில் வீசினால் என்ன ஆகும்?

“அனுமான் அவ்வாறு செய்தால், யாரால் தடுக்க முடியும்? சொல்வதைக்கேள்! சீதா
தேவியை ராம-லட்சுமணர்களிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களைச் சரணாகதி அடை!
வேறு வழியில்லை.

“உன்னை வாலில் கட்டிப்போட்டுத் தூக்கிய வாலியை ஒரே அம்பால் வானுலகத்திற்கு அனுப்பிய ராமனை, கும்பகர்ணனைக் கொன்ற ராமனை, அரக்கர்களால் வெல்ல முடியுமா?யோசித்துப்பார்! திருந்து!”எனப் பேசி முடித்தார் மாலியவான்.
வழக்கப்படி ராவணன் மறுத்தான்; முடிந்தான்.

முதியவர்கள் தங்கள் அனுபவங்களை அப்படியே பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அனுபவத்தில் தெரிந்து கொண்டால் ஒழிய எதையும் ஏற்க மாட்டோம் என்பவர்களோ,முதியவர்கள் சொல்வதை ஏற்காததுடன் அவர்களை அவமானப்படுத்தவும் செய்வார்கள். அதற்காக அனுபவசாலிகளான முதியோர்கள் மனம் கலங்க மாட்டார்கள்; மறுபடி மறுபடி நல்லதைச்செய்யவே முயல்வார்கள் என்பது மாலியவான் எனும் உத்தமமான பாத்திரத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடம்.

(தொடரும்)