அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-67
‘தெய்வமுண்டாக மெய்தொண்டு செய்தே’
‘‘தொண்டு செய்யாது, நின்பாதம் தொழாது துணிந்திச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ ? அப்பரி சடியேன் கண்டு செய்தால் அது கை தவமோ அன்றி செய்தவமோ ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே’’ பாடல் எண்.45
அபிராமி பட்டர் ஆலயத்தில் பரிசாரகராக இருந்தார்.அப்பணிக்கான இலக்கணம் என்ன ? அது எந்த அளவிற்கு நமக்கு பொருந்துகிறது என்பதை எண்ணிப் பார்ப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதியும் தனித்தன்மையும் இருப்பது போல் இப்பரிசாரக பணிக்கும் என்னென்ன தகுதிகள் தேவை என்பதை . இப்பாடலில் எதில் மறையாக பதவி செய்யப்பட்டுள்ளது.முதலில் அதை நேர்மறையாகப் புரிந்து கொண்டு அதன் பிறகு இப்பாடலை புரிந்து கொள்ளல் என்பது நலம் பயக்கும். தொண்டு செய்ய வேண்டும்.
‘‘தெய்வமுண்டாக மெய்தொண்டு செய்தே’’ - 44 பாதம் தொழ வேண்டும் ‘‘அல்லும், பகலும் தொழும் அவர்க்கே’’ - 28 மனம் விரும்பியதை யெல்லாம் செய்யலாகாது. ‘‘தோளாயர் மேல் வைத்த ஆசையுமே’’- 31 ஆகம முறையை அறிந்து செய்ய வேண்டும் ‘‘முறை முறையே பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே’’ - 6
கை தவம் செய்ய வேண்டும் ‘‘முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’’ - 25 செய்தவம் செய்ய வேண்டும் ‘‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’’ - 79 தவறு தவிர்க்க வேண்டும் ‘‘வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்’’- 66 பொறுமையுடன் செய்ய வேண்டும். ‘‘பொறுக்கும் தகைமை’’- 46 வெறுப்பிருக்கலாகாது ‘‘விரும்பித் தொழும் - 94’’
இந்த ஒன்பது இலக்கணங்களையும் கொண்டவர்கள் பரிச்சாரகர்கள். இதை ஒவ்வொன்றாய் இனி பார்ப்போம். ‘‘தொண்டு செய்யாது’’ -ஆலயத்தை பொறுத்தவரை தொண்டு என்பது ஆலயத்தை தூய்மை செய்வது நறும்புகை (தூபம்), தீபம், நறுமணப் பூக்களை சேமித்து வைத்தல், மாலையாக தொடுத்தல், இறைவனுக்கு நீராட்ட (அபிஷேகத்திற்காக) நீர் தயார் செய்தல், சந்தனம் அரைத்து வைத்தல், இறை உணவு (நைவேத்யம்) தயார் செய்தல், அலங்காரத்திற்கு துணி, அணி இவற்றை தயார் செய்வது.பரிவார தேவதைகளுக்கு அபிஷேக அலங்காரம் செய்து வைத்தல், இந்த ஒன்பது பணியையும் தொண்டு என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகின்றார். தொண்டு என்ற சொல்லுக்கு வடமொழியில் ‘‘நவகிரியா’’, இதற்கு நேர் தமிழாக்கம் புதியதாக்குகிற ஒன்பது செயல் என்பது பொருள். இந்த பணியை தான் செய்யவில்லை என்பதையே ‘‘ தொண்டு செய்யாது’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.
நின் பாதம் தொழாது பாதம் தொழுவது என்பது ஆலயப்பணி செய்ய தகுதி பெறுவது பொருட்டு வீட்டில் செய்கின்ற ஒன்பது செயலாகும். சந்தியா வந்தனம். (சூரிய வழிபாடு) ‘‘உதிக்கின்ற செங்கதிர் ’’ - 1, ‘‘மறைகின்ற வாரிதியோ’’ - 20 வேதாத்தியானம் (மறை ஓதுதல்) ‘‘மறை சொல்லிய வண்ணம் தொழும் -’’ 91 அக்னி சந்தானம் (வேள்வி தீ ஓம்பல்) (வேதிகா) ‘‘வேதங்கள் பாடும் நெய் பீடம் - 60 தீக்ஷா ஜபம் (ஜபம் செய்தல்) ‘‘நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து - 32 (தீட்சை) குரு வந்தனம் (குரு வணக்கம்) உன் அடியாரைப் பேணி. தேவதா வந்தனம் (குலதேவதா ப்ரார்த்தனை) ‘‘ஆதித்தன், அம்புலி, அங்கி...97’’ பித்ருவந்தனம் (தென்புலத்தார் வழிபாடு) ‘‘வெண்பகடூரும் பதம் - 91’’ நித்ய சுத்தி அல்ப சங்கியா முதலான ஸ்நானம் வரை (கண் விழித்தது முதல் கண் உறங்குவது வரை) ஒரு மனிதன் தான் தனக்காக செய்து கொள்கின்ற சுத்தியான மலஜலம் கழிப்பது, நீராடல், உண்ணல், உடுத்தல், இவைகளின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.
சைவ தீக்ஷை - எந்த கோயிலில் பணிபுரிகிறார்களோ அந்த கோயிலில் உள்ள தேவதையின் மந்திரத்தை குருவினிடத்து தீட்சையாக பெற்று ஜபித்தல் ‘‘மன்னியது உன் திருமந்திரம்’’- 6 வீட்டில் பூசித்தல் முதலானவை, இந்த ஒன்பது செயலையும் சேர்த்த ஒரே சொல்லையே ‘‘நின் பாதம் தொழுவது’’ என்று எதிர் மறையாக குறிப்பிடுகின்றார். ‘‘துணிந்திக்கையே பண்டு செய்வார்’’ - 6 மனம், வாக்கு, காயத்தின் குற்றங்களாகிய காம - ஆசை- ‘‘ஆசைக்கடலில் அகப்பட்டு’’-32.க்ரோத-சினம்-‘‘நன்றே உனக்கு’’- 30. மோகம் - மயக்கம் - ‘‘வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்’’-47.
லோப - பற்று, மாரண - கொலை, மத - ஆணவம், தஸ்கர - கனவு மாச்சர்ய - பொறாமை, அசத்யம் - பொய் ‘‘வருந்தா வகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக இனி எனக்கு பொருந்தாது ஒரு பொருள் இல்லை’’- 90. இந்த ஒன்பதும் நல்லோர் அஞ்சி விலக்கும் தீய குணங்களாம். இச்சையினால் குற்றத்தை குற்ற உணர்வு இல்லாது இயல்பாய் துணிந்து செயல்படுவதை குணம் எனக் கொண்டவர் இயல்பு என்பதையே பட்டர், ‘‘துணிந்து இச்சையே பண்டு செய்வார்’’ என்கிறார்.
‘‘உளரோ இலரோ ’’ தனது பணிக்குரிய தகுதிகளாக சாத்திரங்களில் கூறப்பட்டிருப்பதை கண்டு அது அப்படியே முழுவதுமாய் பொருந்தியிருப்பவர்கள் வெகு சிலராகவும், அப்பண்பு இல்லாதவர்கள் பலராகவும் இருப்பதை கண்டு ‘‘உளரோ இலரோ’’ என்று குறிப்பிடுகிறார். ‘‘அப்பரிசடியேன் கண்டு செய்தால்’’ பரிசு என்ற சொல்லிற்கு குணம் என்றும் பொருள் இந்த இடத்தில் குணம் என்பது ஆகமத்தை அறிந்து அதன் வழி மனம், வாக்கு, காயத்தை செலுத்துவதாகும். கண்டு என்பதற்கு ஞான நோக்கு என்பது பொருள் ஆகமங்கள் எந்த வகையில் இறைவனைப் பற்றி கூறியிருக்கிறதோ அதன் வழிபின்பற்றி இறையருளை அடைய முற்படுதலாகும்.
‘‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம் பத்ததியே’’- 6 அந்த வகையில் ஆலய பரிசாரகர்கள் ஒன்பது விதமான குணங்களை ஆகமத்தின் மூலம் அறிதல் வேண்டும். தேவதையின் பெயர் ‘‘நாமம் திரிபுரை’’-73 அதற்குரிய மந்திரம்-‘‘உன் திரு மந்திரம் ’’ - 6 அதற்குகந்த காலம்-‘‘யாமம் வையிரவர் ஏத்தும் பொழுது’’-73 பூசனைக்கு பயன்படும் சிறப்புப் பொருள்- திருமுலை மேல் அப்பும் களப் (சந்தனம் ) -78 யந்த்ரம் - ‘‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே ’’-19 வழிபாட்டு செயலாக்க வரிசை உபாசகன் பின்பற்ற வேண்டிய ஆசாரம் ‘‘கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் ’’-12 தேவதையின் உருவம் மற்றும் புராணம் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை பாசாங்குசமும் கரும்பும் அங்கே. சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே ’’ அந்த தேவதையை வழிபட அறிந்து கொண்டு செரிந்தேன் ’’ - 3
இந்த ஒன்பதையும் சேர்த்து பரிசு என்று குறிப்பிடுகின்றார். இதையெல்லாம் அறிந்து ஆலயத்தில் பரிசாரகராக பணியாற்ற வேண்டும். இவை ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியே வெகு சிறப்பாக ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆகம அறிவை பெற்று பணி செய்வதைத் தான். ‘‘அப்பரிசு அடியேன் கண்டு செய்தால்’’ - என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். அதன் படி தான் கண்டு உணர்ந்து செய்வேனாயின்.
‘‘அது கைதவமோ’’ ‘‘தவம்’’ - என்பது மூன்று விதம் , கைதவம், செய்தவம், மெய்தவம். முற்பிறப்பில் தவம் செய்து அதன் பலனை முழுவதும் அடையாது உயிர்நீத்துவிடின், அடுத்தபிறவியில் தவம் செய்யாமலேயே அந்த தவத்திற்கு உரிய பலனானது எளிய முயற்சியிலேயே மிகுந்த பலனை விரைவில் தருவதாய் அமையும். இதுவே உபாசனையில் கைதவம் எனப்படுகிறது.அபிராமி பட்டர் இப்பிறவியில் தான் தவம் செய்யவில்லை என்பதை நன்கு அறிகிறார். இருந்தும் செய்யாத சிறு முயற்சிக்கு பெரும் பயனாக இறைவி அவர் முன் தோன்றி அடிக்கடி காட்சி ‘அளிப்பதால் அந்த அளவிற்கு நாம் தவம் எல்லாம் செய்யவில்லையே எப்படி நமக்கு காட்சியளிக்கிறாள் அம்பாள், அது முற்பிறவியில் செய்த தவமாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார். அதையே ‘‘கைத் தவமோ’’ என்று குறிப்பிடுகிறார்.
‘‘அன்றிச் செய்தவமோ ’’ பரிசாரக இலக்கணத்தில் கூறிய படி ஆலயபணி செய்வதனால், முன் சொன்ன தொண்டு செய்வது, பாதம் தொழுவது, பரிசு கண்டு செய்வது என்பதை முயற்சியினாலே அடைய தான் முற்படுகிறார். அதனால் ‘‘செய்தவமோ’’ என்கிறார்.
‘‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே’’தொண்டு செய்கின்ற பொழுதோ, பாதம் தொழுகின்ற பொழுதோ, பரிசு கண்டு செய்கின்ற பொழுதோ தவறு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இதையே ஆகமம் ‘‘காலத்தவறு, எண்ணத்தவறு, கவனக் குறைவு இவற்றை பொறுத்துக் கொண்டு என்பதை காலலோபே, நியம லோபே, சிரத்தாலோபே... என்பதிலிருந்தும் அறியலாம். அது தவறான விளைவையும் தரவல்லது. ஆகையினால் அப்படிப்பட்ட செயல்களை தான் செய்யும் பொழுது பொருத்துக் கொள் என்று உமையம்மையை பிராத்திக்கின்றார். அதையே ‘‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே என்கிறார்.’’
‘‘பின் வெறுக்கை அன்றே’’ பொருத்துக் கொள்ள வேண்டிய பட்டர் வெறுக்கை அன்றே என்ற வார்த்தையால் மறை முகமாக குற்றத்தை பொறுத்துக் கொள்வதோடு நிறுத்தி விடாமல் பலனை பூரணமாக அளித்து விடு என்பதற்கு ஆகமம். ‘‘எப்படிச் சொல்லப்பட்டதோ அப்படியே செய்யப்பட்டதாக கருதி என்பதை’’ ‘‘யதோக்தம் யதா சாஸ்த்ரா அனுஷிடிதம்’’ என்கிறது.
இப்பாடல் முழுவதிலும் இருக்கின்ற பண்புகள் தனக்கு இல்லாததாக அபிராமி பட்டரால் சொல்லப்பட்டிருப்பினும், வழிபடுவோர் பின்பற்ற வேண்டிய ஆசாரத்தை வரையறுத்து உபாசனை. நெறியை தெளிவுற வளியுறுத்துகிறார். உபாசனை நெறிகளை மிகச் சரிவர பின்பற்றுவது என்பது அறியதும், கடினமானதுமாகும்.
பல நேரங்களில் அது நாம் எதிர் பார்த்த விளைவை தராது போவதற்கான வாய்ப்பு உண்டு.அந்த சிக்கல் தீர்ந்து மிகச் சரியாக அமைத்துக் கொள்வதற்கு உமையம்மையையே சரணடைந்து வேண்டுகின்றார்.சைவ சமய நோக்கில் உழவாரத் தொண்டு செய்து அருள் பெற்றவர் வாகீசர். பண்டு செய்து அருள் பெற்றவர் ஞானசம்பந்தர். சிவபெருமானையே குருவாகக் கண்டு செய்து அருள் பெற்றவர். மாணிக்கவாசகர் சிவபெருமானுக்கு மிண்டு (சொந்தரவு) செய்து அருள் பெற்றவர் சுந்தரர்.
இவர்கள் நால்வரும் திருக்கடையூர் சிவபெருமானைப் பாடியுள்ளார்கள். அதைச் சுட்டிக் காட்டி எனக்கும் அருள் புரிய வேண்டும் என்று உமையம்மையை பிரார்த்திக்கிறார். ஆனால் அவர்கள் போல் உயர்ந்த தவத்தை தான் செய்ய வில்லை என்பதையே ‘‘தொண்டு செய்யாது...’’ என்ற இப்பாடலின் மூலம் விளக்குகிறார் அபிராமி பட்டர்.
( தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
|