சேப்பாக்கத்தை கலக்கிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி



சமீபத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால், அதே தருணத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலும் சில சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதுவும் வரலாற்று சாதனைகள். அதை நிகழ்த்திக் காட்டியவர்கள் வேறு யாருமல்ல. நம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர்தான்.

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்தது. இதில் ஒருநாள் போட்டிகள் மூன்றும் பெங்களூரில் நடந்தன. அந்த மூன்றிலும் வென்று அசத்தியது இந்திய பெண்கள் அணி. இந்நிலையில் அதே உத்வேகத்துடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியையும், மூன்று டி20 போட்டிகளையும் விளையாட சென்னை வந்தனர்.

முதலில்  டெஸ்ட் போட்டி நடந்தது. இதில்தான் சாதனை மேல் சாதனை படைத்தது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. 

இதில் முதல் நாளில் மட்டும் 525 ரன்கள் குவித்தது. இது  ஒரு நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையாக மாறியது. இந்தச் சாதனை இதுவரை ஆண் கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் இரண்டிலும் செய்யப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு ஸ்ரீலங்கா அணி ஒரு நாளில் 509 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டில் 1935ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாளில் 431 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது இங்கிலாந்து அணி. 

இதையெல்லாம் மொத்தமாக தகர்த்தது இந்திய பெண்கள் அணி. அத்துடன் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 575 ரன்கள் குவித்ததே சாதனையாக  இருந்தது. இதனையும் சமீபத்தில்  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி  செய்திருந்தது. அதையும் சேப்பாக்கம் மைதானத்தில் தகர்த்து எறிந்தனர் இந்திய அணியினர்.

ஒரு இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர். இதில் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் தலா 149, 205 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 292 ரன்கள் குவித்தனர். இதுவும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையானது. 

இதற்குமுன் 2004ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த கிரண் பாலுச், சஜ்ஜிதா ஷா இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் விக்கெட் பார்ட் னர்ஷிப்பாக 241 ரன்கள் குவித்திருந்தனர். அந்தச் சாதனையை தகர்த்தது மந்தனா, ஷபாலி ஜோடி. இதேபோல ஐந்தாவது விக்கெட்டிற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், ரிச்சா கோஷும் 143 ரன்கள் சேர்த்தனர். இதுவும் ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையாக மாறியது.

ஷபாலி வர்மா ஒரே நாளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் நூறு ரன்களை 113 பந்துகளிலும், இருநூறு ரன்களை 194 பந்துகளிலும் கடந்தார். இது பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம் மற்றும் இரட்டை சதம் ஆகும். அத்துடன் எட்டு சிக்சர்கள் அடித்து, பெண்கள் டெஸ்ட் போட்டியில் ஒருநாளில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் தன் வசப்படுத்தினார் ஷபாலி வர்மா.

இதன்பிறகு டி20 போட்டிகள் நடந்தன. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி மழையால் முடிவு இன்றி கைவிடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் நடந்த மூன்றாவது டி20யில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி தென் ஆப்பிரிக்காவை வென்று கோப்பையை பகிர்ந்து கொண்டது. இதிலும் மந்தனாவும், ஷபாலி வர்மாவும் ரன்களை குவித்து அசத்தினர்.    

4கடந்த 1976ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்தது. அதன்பிறகு 48 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சென்னையில் பெண்கள் டெஸ்ட் போட்டி நடந்துள்ளது.

41973ம் ஆண்டுதான் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடங்கப்பட்டது. அப்படியாக முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி 1976ல் இந்தியாவில் நடந்தது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. அதில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது.

41976ல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சென்னையைச் சேர்ந்த சாந்தா ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அப்போது பெண்கள் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்கள் கொண்டதாக இருந்தது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது.

41977ல் இருந்து ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆடி வருகிறது. சென்னை மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி என்பது 1984ம் ஆண்டு நடந்தது. இதில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.

41995ல் சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் வென்றது. 2007ல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா அணியுடன்
வெற்றிகளைப் பெற்றது.

4டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இப்போதுதான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடியுள்ளது.  

செய்தி: செல்வி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்