உயிரை பாதிக்கும் Anaphylaxis!



கடல் சார்ந்த உணவுகள், கிழங்கு வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்.... இது போன்ற உணவுப் பொருட்களால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். வாய் தடித்திடும், சருமத்தில் சிவப்பு திட்டாக படறும், ஒரு விதமான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பினை இந்த ஒவ்வாமைகள் ஏற்படுத்தும். இந்த அலர்ஜிகள் நாளடைவில் குறையும்... அல்லது காலம் முழுதும் இந்த உணவினை அவர்கள் தவிர்க்க வேண்டும். அலர்ஜி என்றால் என்ன? அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விளக்குகிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் வரதராஜன்.

‘‘அலர்ஜியை ஒவ்வாமைன்னு சொல்வாங்க. ஏதாவது ஒரு பொருள் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் ேபாது தான் ஒவ்வாமை ஏற்படும். நம்ம உடம்பில் பல விதமான எதிர்ப்புசக்தி அணுக்கள் உள்ளன. அதில் இருந்து ஆன்டிபாடிகள் (antibody) உற்பத்தியாகும். அவ்வாறு உருவாகும் ஆன்டிபாடிகளில் IgE என்ற ஆன்டிபாடி அதிகமாக உற்பத்தியாகும் போது, ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உதாரணத்திற்கு தூசி, மகரந்த துகள்கள் அல்லது வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, ஊதுபத்தி புகை, சாம்பிராணி... இவை எல்லாமே ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதில் எக்ஸ்போஸ் ஆகும் போது ஒருவர் நான்கு முறை தும்முவார். மற்றவர் 40 முறை தும்முவர். அவரின் உடலில் IgE அதிகம் உற்பத்தியாகிறதுன்னு சொல்லலாம். மேலும் இவை நம்முடைய உடலில் எந்த ரூபத்தில் செல்கிறது என்பதை பொருத்து தான் அதனுடைய பாதிப்பு ஏற்படும்.

மேலும் அவை நம் உடல் உறுப்பில் ஏற்படும் பாதிப்பினை பொருத்து இவை மாறுபடும். மூக்கடைப்பு என்றால் அலர்ஜிக் சைனசைடிஸ். சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு எக்சிமா என்று பெயர். நுரையீரல் பாதித்தால் ஆஸ்துமா, சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஓரல் அலர்ஜி சிண்ட்ரோம் என்று ஒவ்வொரு அலர்ஜியின் பிரச்னைகளுக்கு ஏற்ப அதன் சிகிச்சையும் மாறுபடும்’’ என்றவர் அலர்ஜி ஏற்படும் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறையினை பற்றி விவரித்தார்.

IgE அதிகமா உற்பத்தியாகும் போது அது பேசோபில் என்ற அணு மீது ஒற்றிக் கொள்ளும். அந்த அணு உடைந்து அதில் இருந்து ஒரு வித ரசாயனம் வெளியாகும். முதலில் மூக்கில் தண்ணீர் வடியும், அடுத்து 4 மணி நேரத்தில் மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் பிறகாலத்தில் ஆஸ்துமாவாகவும் மாறலாம். இந்தப் பிரச்னை ஒட்டடை தூசி, தலையணை தட்டும் போது வெளியாகும் தூசி, செல்லப்பிராணிகளின் முடி, கரப்பான் பூச்சி போன்ற காரணத்தால் வரலாம்.

சிலருக்கு சாப்பாடு மூலம் அலர்ஜி ஏற்படலாம். முட்டை, பசுமாட்டுப்பால், கடலை, மீன், இறால் போன்றவை எளிதாக அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய உணவுகள். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் தலையணையை வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம். தலையணை உறையை துவைத்து வெயிலில் காய வைத்து இஸ்திரி ெசய்து உபயோகப்படுத்தலாம். அறையில் அதிக அளவு ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏ.சி பயன்படுத் தினால் அதில் உள்ள பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

சிலர் அதிக முடியுள்ள கரடி பொம்மை வைத்து விளையாடுவார்கள். அலர்ஜி பிரச்னையுள்ளவர்கள் வீட்டில் இருந்தால் இது போன்ற பொம்மைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தரைக்கும் வினைல் மற்றும் மர டைல்ஸ்கள் போடுவது அலர்ஜி பிரச்னை ஏற்படுவதை குறைக்கும்.

இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியும் அலர்ஜி குறையவில்லை என்றால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். சிலருக்கு மருந்து, மாத்திரை  மூலம் கட்டுப்படுத்தலாம். அதுவும் முடியாத பட்சத்தில் அவர்கள் இம்யுனோ தெரபியினை மேற்கொள்ளலாம். உடலில் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அலர்ஜெனை உள் செலுத்துவது இது ’’ என்றார்.

‘‘எல்லாருடைய உடம்பிலும் IgE இருக்கும். ஒரு சிலருக்கு இது அதிகம் சுரக்கும் போது ஒவ்வாமை ஏற்படும். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு அலர்ஜி பிரச்னை அவர்களுக்கு மறைந்திடும். மூன்று மற்றும் நான்கு மாத குழந்தைக்கு ஆரம்பத்தில் பசும் பால் அலர்ஜியாக இருக்கும். அதுவே இரண்டு வயதாகும் போது ஒவ்வாமை மறைந்திடும். முட்டை அலர்ஜி 9 மாதம் முதல் நான்கு வயது வரை இருக்கலாம்.

இது போன்ற அலர்ஜிகள் நாளடைவில் மறைந்திடும். ஆனால் சில அலர்ஜியின் சொரூபம் மாறுபடும். அதாவது தூசியினால் ஏற்படும் பிரச்னை பிற்காலத்தில் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வீசிங் போன்ற பிரச்னைக்கு வழிவகுக்கும். இதில் இருந்து அவர்கள் விடுபட முதலில் அலர்ஜி ஏற்படக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். இரண்டாவது முறையாக சிகிச்சையினை கடைபிடிக்க வேண்டும். அதிலும் குணமாகவில்லை என்றால் இம்யுனோ தெரபியினை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் சில அலர்ஜிகள் உயிரை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். Anaphylaxis ஒவ்வாமை உள்ளவர்களுக்கு முதலில் மூச்சுத்திணறல் ஏற்படும், பிறகு உடம்பு நீல நிறமாக மாறும், மயக்கம் ஏற்பட்டு, கை கால் குளிர்ந்திடும். இதனை மருத்துவ ரீதியில் Anabelactix shock ன்னு சொல்வாங்க. உடனே மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும்.

இது எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது என்பதால் இந்த பிரச்னை உள்ளவர்கள் அதற்கான மருந்தினை எப்போதும் டாக்டரின் ஆலோசனைப்படி கையில் வைத்துக் கொள்வது அவசியம். அலர்ஜி அட்டாக் ஏற்படும் போது உடனடியாக ஊசி மூலம் மருந்தினை உள்செலுத்திக் கொள்ளலாம்.

அலர்ஜியை தடுக்க அதற்கான முன்னெச்சரிக்கையை எடுப்பது அவசியம். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை அளித்தார் நுரையீரல் நிபுணரான டாக்டர் வரதராஜன்.

ஷம்ரிதி