வாசகர் பகுதி



காய்கறிகளின் அரசன் முருங்கை

*ஏழைகளின் மரப்பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது.

*பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது. முருங்கைக்காயை சூப்பாக செய்து சாப்பிட்டால் அருமையான மருத்துவ குணங்களை அழியாமல் பெறலாம்.

*மனித நாடி, நரம்புகளை உரமேற்றி, மெருகேற்றுவது முருங்கை. கபத்தை வெளியேற்றும். உடலுக்கு அருமையான பலத்தை தரும்.
நலிவடைந்தவர்களுக்கும் பிணிகளால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் முருங்கைக்காய் சூப் ஒரு வரப்பிரசாதம்.

*இரத்த விருத்திக்கு தினம் முருங்கைக்காய் சாப்பிட்டு வரலாம். சிறுவர், சிறுமியர் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் தவிர்க்கலாம். எலும்புருக்கி நோய் சரியாகும். பெண்களின் மாதவிடாய் நோய்கள், உதிரப்போக்கு முதலியன நீங்கும்.

*காக்காய் வலிப்பு நோயால் அவதியுறும் அன்பர்கள் அடிக்கடி அரை வேக்காடு பதத்தில் முருங்கைக்காய் சூப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*நரம்பு பிரச்னை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து மிகுந்து உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

*நீரிழிவு நோயாளிகள் நலத்திற்கு உத்திரவாதம் தரும் ஒப்பற்ற காய். மாலைக்கண் வியாதிகளை நீக்க வல்லது.

*கண்ணாடி அணிந்தவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் அதிகமாவதைத் தடுக்கலாம்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

குளிர்கால டிப்ஸ்

*பனிக்காலத்தில் சருமம் உலர்ந்து வெடிப்பு ஏற்படும். இதை குணப்படுத்த வைட்டமின் ஈ காப்ஸ்யூல் எண்ணெயை இரவு முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின், இளஞ்சூடான நீரால் முகத்தை கழுவி வரவும்.

*பனிக்காலத்தில் உதடு வெடித்து எரிச்சல், வலி ஏற்படலாம். இதற்கு தினசரி வாஸலைன் கிரீம் அல்லது ஒயிட் பெட்ரோலிய ஜெல்லி பூசி வருவது நல்லது.

*குளிர்காலத்தில் முகத்திற்குப் பூச எலுமிச்சை சாறை பயன்படுத்த வேண்டாம். பாலாடையை எடுத்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வரலாம்.

*வீட்டிற்குள் ஈரம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தரையை துடைத்த பிறகு பழைய பெட்ஷீட், சணல் சாக்கு போன்றவற்றை தரை காயும் வரை ஆங்காங்கே விரித்து வைக்கவும்.

*பனிக் காலத்தில் துணிகள் எளிதில் உலர்வதில்லை. எனவே கனமான, முரட்டுத் துணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

*ஸ்வெட்டர், சாக்ஸ், மப்ளர் போன்றவற்றை எடுத்து சுத்தப்படுத்தி ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

*தீப்பெட்டி, விளக்கு, மெழுகுவர்த்தி, எமர்ஜென்ஸி லாம்ப், டார்ச் போன்றவை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தக்க சமயத்தில் உதவியாக இருக்கும்.

*வெளியே போய் வந்ததும் சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, கிரீம் பூசவும். இதனால் சேற்றுப்புண் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

*பனிக்காலத்தில் மிளகு, ரசம், பூண்டு, வெங்காயம் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால், நோய்க்கிருமிகள் பரவாது.

*எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

*இருமல் சிரப், காய்ச்சல், தலைவலி மாத்திரைகள் மற்றும் விக்கல் போன்றவற்றை தயாராக வைத்திருப்பது குளிர்காலத்தில் ஏற்படும் திடீர் சளி, இருமல், தும்மல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும்.

- சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.