ஸ்லிம்மாக மாற்றும் கொண்டைக்கடலை



வாசகர் பகுதி

கொண்டைக் கடலையில் கருப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது கருப்பு நிற கொண்டைக்கடலைதான். இந்த கொண்டைக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துஉள்ளது.
மேலும் இந்த கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எடையை குறைக்கும்: கருப்பு நிற கொண்டைக் கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவை உடல் எடை குறைய உதவி புரியும். தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் ஜங்க் உணவுப் பொருட்களான சிப்ஸ் மற்றும் இதர
உணவுகளை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

இதய நோய்: கருப்பு நிற கொண்டைக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள்,  டெல் பின்டின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.

கொலஸ்ட்ரால் குறையும்: கருப்பு நிற கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற கொண்டைக்கடலையை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்: கருப்பு நிற கொண்டைக்கடலையில் உள்ள கரையும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்
கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.

இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும். அதிலும் ஒரு வாரம் தினமும் 1/2 கப் கொண்டைக்கடலையை வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

செரிமான பிரச்னைகள்: தினமும் இரவில் படுக்கும்போது கருப்பு நிற கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்னைகள் நீங்கிவிடும்.

இரும்புச்சத்து: கருப்பு நிற கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை ரத்தணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து, உடலில் எனர்ஜியை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்: மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டைக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

- கவிதா சரவணன், திருச்சி.