365 நாளும் குளிக்கலாம்!



குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. காலையில் வெயில் கொளுத்தினாலும், மாலை நேரத்தில் லேசாக பனிப்படர துவங்கியுள்ளது. எதை  தொட்டாலும் ஜில்லென்று இருக்கு. தண்ணீரும் ஜில்லுனு இருப்பதால், நாளை குளிக்கலாம்ன்னு குளியலை தவிர்ப்பவர்களுக்கு தினமும்  குளிப்பதன் அவசியம் நிச்சயம் தெரிந்திருக்காது. குளியல் என்பது உடலில் உள்ள அழுக்குகளை மட்டும் போக்குவதற்கு அல்ல. வெயிலோ  அல்லது குளிர்காலமோ எதுவாக இருந்தாலும், உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை தணித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும்.  இது நம்முடைய அன்றாட பணி என்பதால் அதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க அச்சப்படுகிறவர்களுக்கு ஆரோக்கியமான குளியலை சித்தமருத்துவ முறைப்படி விளக்குகிறார்  சித்த மருத்துவர் கோ.ராஜகுமரன். “உடலில் உள்ள வெப்பத்தை குளிர்விப்பதால் அதற்கு குளியல் என்று பெயர் வந்தது. சாதாரணமாக  இயந்திரம் ஒன்று இயங்குகிறது என்றாலே அது எளிமையாக வெப்பமடைந்து விடும். அது போல மனித உடல் இயங்க இயங்கிக் கொண்டு  இருக்கும் போது, உடலில் வெப்பம் உண்டாகும். உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்வதற்காகவே தினமும் காலையில் குளிக்க  வேண்டும் என்பது தான் சித்த மருத்துவம் சொல்லும் ஆழமான கருத்து. குளிர்காலத்தில் குளிக்க கூடாது, வெயில் காலத்தில் மட்டுமே  குளிக்கலாம் என்பதெல்லாம் கிடையாது. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமையாக தினமும் குளிக்க வேண்டும். குளிர்  காலங்களில் சில சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளலாம்.

▶குளிர்ச்சியான தண்ணீரை தவிர்த்துவிட்டு வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம். மூட்டு வலி, சளி தொந்தரவு, ஆஸ்துமா உள்ளவர்கள்  கட்டாயம் வெந்நீரை பயன்படுத்த வேண்டும். சுடுதண்ணீரை உடலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் தலைக்கு பயன்படுத்தக் கூடாது.

▶அஜீரணம், வயிற்று போக்கு, காய்ச்சல் உள்ளவர்கள் குளியலை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் டவல் பாத் கொண்டு உடலை  சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

▶நீண்ட காலமாக சிலருக்கு தலைவலி, சளி தொந்தரவு இருக்கும். அதனால் குளிக்க முடியாது என்பார்கள். அவர்கள் நொச்சி இலையை  தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் சளி தொந்தரவு, ஆஸ்துமா, தலைபாரம் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

▶வாதநாராயண இலையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கும் போது மூட்டு வலி பிரச்சனை தீரும்.

▶புளியமரத்து இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால் இடுப்பு வலி நீங்கும்.

▶தழுதாலை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்கும் போது வாதம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

▶வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் போது சளி தொந்தரவு வராது.

▶வேப்ப இலையை தண்ணீரில் சேர்த்து குளிக்கும் போது அம்மை, அலர்ஜி, தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

▶கொன்றை இலையை உடலில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

▶ரோஜா இலை பயன்படுத்தும் போது உடல் எவ்வளவு வெப்பமாக இருந்தாலும் உடல் வெப்பம் குறைந்து உடல் வனப்பு ஏற்படும். இவை  அனைத்தும் மூலிகை குளியல்.

சில பேருக்கு உடலில் கொப்பளங்கள் இருக்கும். ஆறாத புண் இருக்கிறது என்பவர்கள் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா  சூரணத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்கலாம். சொரியாசிஸ் நோய் உள்ளவர்கள் கருங்காலி சிறிதளவு எடுத்து தண்ணீரில்  நன்றாக கொதிக்க வைத்து வெதுவெதுப்பான பிறகு குளிக்கலாம். சதகுப்பை என்கிற மூலிகையை கொதிக்க வைத்து குளிப்பதன் மூலம்  பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தீராத இடுப்புவலி பிரச்னை எளிமையாக தீரும். குளிர்காலங்களில் குளிப்பதை  தவிர்க்காமல், ேமலே குறிப்பிட்டு இருக்கும் குளியல் முறைகளை பின்பற்றினால் உடலை எப்போதும் ஆரோக்கியமாகவும்,  சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் சித்த மருத்துவர் கோ.ராஜகுமரன்.

-ஜெ.சதீஷ்