கவனச்சிதறலும் மிகை இயக்கக் கோளாறும்
(Attention Dificit / Hyperactive Disorder)
அகமெனும் அட்சயப் பாத்திரம்
நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் சில மாற்றங்களினால் தொடர்ந்து ஒரு செயலில் கவனம் செலுத்த முடியாமல் போவதும், ஒரு நிலையில் இருக்க இயலாமல் மிகை இயக்கமாக, அதீத உந்துதல் சக்தியோடு இருப்பதும் Attention Dificit / Hyperactive Disorder (ADHD) என்று குறிப்பிடப்படுகிறது.  குழந்தைகளிடத்தில் அதிகமாகக் காணப்படும் ADHD பற்றிய விழிப்புணர்வு கடந்த பத்தாண்டுகளில் கூடியுள்ளது எனலாம்.குழந்தைகளில் உலக அளவில் 8 சதவீதத்தினரும், தேசிய அளவில் 7.1 சதவீதத்தினரும் இப்பாதிப்பினைக் கொண்டிருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் கூறுகின்றன. தென்னிந்தியாவில் 8.8 சதவீத குழந்தைகள் கவனக்குறைவு, மிகை இயக்கக் குறைப்பட்டினைக் கொண்டுள்ளனர் என்றும் மற்றொரு புள்ளி விவரம் சொல்கிறது.  உலக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு மருத்துவ அமைப்புகள், உளவியல் ஆய்வுக் குழுமங்கள், குழந்தைகள் நல நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட எண்ணற்ற ஆய்வுகளின் முடிவுகள் ஒப்பீட்டளவில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிக அளவில் ADHD பாதிப்பினைக் கொண்டுள்ளனர் என்று உறுதிப்படுத்துகின்றன.

விசேஷ நாட்களில், திருமண வீடுகளில் ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியின் அடையாளமாகத்தான் அன்று பார்க்கப்பட்டனர். முந்தைய தலைமுறையினர் “குழந்தை துறுதுறு என்று இருக்கிறது”, “சுட்டித்தனமாக இருக்கிறாள்”, “என் மகன் சுறுசுறுப்பு… ஓரிடத்தில் தங்கமாட்டான்”, “வகுப்பில் அவளுடைய முறை வருவதற்குள் முந்திரிக்கொட்டை போல் விடை கூறிக்கொண்டே இருப்பாள்..  அவ்வளவு புத்திசாலி”, “எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்… அவனுக்கு ஆர்வக்கோளாறு அதிகம்” என்றெல்லாம் பெருமையாகக் கூறுவார்கள். அன்று குழந்தைகளிடம் பாராட்டுதலுக்குரிய குணாதிசயங்களாகப் பார்க்கப்பட்டவை இன்று ADHD குறைபாடாகப் பார்க்கப்படுவது ஆச்சர்யமான காலச்சுழற்சியே.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றமும் அனைத்தையும் கூர்ந்து ஆராயும் போக்கை நம்மிடம் வளர்த்துள்ளது. எனவே, ஒவ்வொன்றையும் விரிவாக அலசும்பொழுது முந்தைய காலகட்டங்களில் வெகு இயல்பான செயல்களாக அறியப்பட்டவை இன்று மனநலக் கோளாறுகளாக பல்வேறு பெயர்களுகளோடு அழைக்கப்படுகின்றன.
இத்தகைய மனநலக் குறைபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை நடைமுறை பாதிப்புகளின் அளவைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். மேலும், குழந்தைப் பருவத்தில் இருக்கும் இச்சிக்கலானது வளரிளம் பருவத்தில் அறிவின் முதிர்ச்சி ஏற்படும்போது தானாகவே மறைந்து சீரான அமைதி ஏற்பட்டு விடும் என்ற அறிவியல் உண்மையையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பள்ளிப் பருவத்தில் அன்றாட வீட்டுப் பாடங்களைச் செய்து முடிப்பதில் சிரமம், ஓய்வு எடுக்காமல் இருப்பது, ஓரிடத்தில் அமர முடியாமல் தவிப்பிலே இருப்பது போன்ற அடிப்படை அறிகுறிகளை வைத்து மட்டும் குறைபாடு உள்ளது என்று தீர்மானித்துவிட முடியாது.
மேலும்,குழந்தைப் பருவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நிலைகொள்ளாமல் இருப்பது இயல்பே. பல குழந்தைகள் விளையாட்டுப் புத்தியினால் கல்வியின் அவசியம் புரியாத எளிய குழந்தைமையோடுதான் இருப்பார்கள்.
அவர்களை எல்லாம் அவசரப்பட்டு ADHD நோயாளிகள் என்று முத்திரை குத்திவிடும் தவறு இன்று நிறைய நடக்கிறது. நம் குழந்தைக்கு பாதிப்பு இருப்பதாக நினைத்தால், உளவியல் துறை வல்லுநர்களிடம் தயங்காமல் சென்று முதற்கட்ட சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பச்சூழல் அறிதல், ஆளுமை மதிப்பீட்டு சோதனை, கலந்துரையாடல் ஆகியவற்றை முறையாக சோதித்த பின்னரே எதையும் உறுதிசெய்வார்கள்.
கல்வி கற்றலில் கவனக் குறைவு, மிகை இயக்கம் போன்றவற்றைக் கொண்டு குழந்தைகளிடத்தில் ADHD அறியப்படுகிறது. அதே நேரம் பெரியவர்களிடம் பணியிடத்தில் வேலைகளைச் செய்வதில் சிரமம், உறவு முறைகளில் சிக்கல், ஆபத்தான செயல்களில் கவனமின்றி ஈடுபடுவது, சரியான உறக்கமின்மை, அதிக கவலை, தாழ்வு மனப்பான்மை போன்றவை காணப்பட்டால், சிறுவயதில் தீர்க்கப்படாத ADHD-யின் விளைவுகளாக இருக்க வாய்ப்பு அதிகம்.
ஆனால், எல்லாவிதமான மன நோய்களுக்கும், மனச்சிக்கல்களுக்கும் இவையே அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன என்பதால், பிரித்தறிந்து இனம் காணுவது சவாலாகத்தான் இருக்கும். எனவே, கூடுதல் காரணிகளான ஏதோ ஒன்று நம்மைப் பிடித்துத் தள்ளுவது போன்ற உள்உந்து சக்தி மனநிலை (Internal motor Energy ), அதிகமாகும் மறதி, தொடர்பற்ற பேச்சு, வாகனங்கள் இயக்குவதில் சிரமம், கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய அன்றாடக் கடமைகளைத் துவங்கும் முதல்படியில் மிகுந்த சிரமம் (Task starting Trouble) போன்ற பிரச்சனைகள் வரும்போது ADHD சோதனையினை மேற்கொள்ள வேண்டும்.
ADHD பாதிப்பின் முதல் நிலைக் காரணிகளான கால்களையும், கைகளையும் அசைத்துக்கொண்டே இருப்பது, ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பது, மற்றவர்கள் பேசும் பொழுது அநாகரிகமாக நடுவில் குறுக்கிட்டுப் பேசுவது (Interpting), பொது இடங்களில் சிறிதும் காத்திருக்க முடியாமல் பொறுமையின்றி எரிச்சலடைவது இவற்றைப் பொதுவாக அனைவரிடத்திலும் நாம் காணலாம்.
ஆக, இது ஒரு பெரிய நோயல்ல. உணர்வுகளின் மாற்றம் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் கவனமின்மையை நடைமுறைப் பயிற்சிகள் மூலம் குணப்படுத்தி, மிகை இயக்கத்தின் அதீத சக்தியை பயன் தரும் நேர்மறைச் செயல்களாக மாற்ற முயற்சி செய்வதே சிறந்த தீர்வு.
அவ்வாறு குறைகளை நிறைகளாக மாற்றும் மனநலப் பயிற்சிகளை மேற்கொண்டால் பெரிய சாதனையாளர்களாக ADHD பாதிப்புக்கு ஆளானவர்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
உலக அளவில் பெரும் சாதனையாளர்களாக வெவ்வேறு துறைகளில் தங்களை நிரூபித்துவிட்ட பில்கேட்ஸ், ரிச்சர்டு ப்ரான்சன், வால்ட் டிஸ்னி போன்றவர்கள் ADHD பாதிப்பு கொண்டவர்களே என்பது பலருக்கும் விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறது. பாலிவுட் நடிகை அலியா பட் தன்னுடைய மாறுபட்ட கதாபாத்திரங்கள் நடிப்புத்திறன் மூலமாக பரவலாக அறியப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவர் சிறுவயதில் தனக்கு கல்வியில் கவனம் செலுத்துவதில் பெரும் சிக்கல் இருந்ததையும், ADHD உடன் போராடியதையும் தற்போது பேட்டிகளை நினைவு கூர்கிறார். சற்றே பின்னோக்கி வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் தொலைபேசியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹம்பெல், புகழ்பெற்ற ஓவியர் மற்றும் அறிவியலாளர் லியனர்டோ டாவின்சி, எழுத்தாளர் அகதா கிறிஸ்டி, எண்ணற்ற அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன், இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பாடகர் ஜான் லெனோன் போன்றவர்களும் தங்களுடைய ADHD குறைபாட்டினை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உலகம் வியக்கும் அளவுக்கு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர்களே.
ஒலிம்பிக் போட்டிகளில் 28 முறை தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் என ADHD வெற்றியாளர்களை நாம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமது வீட்டிலோ, குடும்பத்திலோ பாதிப்பு கொண்ட குழந்தைகளையோ, பெரியவர்களையோ சந்திக்க நேர்ந்தால் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்து மேற்கண்ட உதாரணங்களை எடுத்துக் கூற வேண்டும்.
‘ADHD ஒரு திறன் குறைபாடு அல்ல. மாற்றுத்திறன்” என்று நம்பிக்கை வார்த்தைகளை முதன் முதலில் குறிப்பிட்டவர் அமெரிக்க மனநல மருத்துவர் எட்வர்டு எம் ஹாலோவெல் தான். ADHD துறையில் நிபுணரான இவர் கவனச்சிதறல் சார்ந்து எண்ணற்ற விழிப்புணர்வு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் தன்னையே சோதனைக்கு உட்படுத்தி தனது டிஸ்லெக்சியா (Dyslexia) மற்றும் ADHD குறைபாட்டினை வெளிப்படையாகப் பகிர்ந்ததோடு, முறையான தீர்வுகளையும் கண்டறிந்தார். ADHD பாதிப்படைந்த தனது ஐந்து வயது மகளுக்காக அவர் எழுதிய “எல்லா மூளையும் ஒன்றல்ல. சிறந்த மூளை என்று எதுவும் இல்லை. சில மூளைகள் சிறப்பான தனித்தன்மையை அடைந்திருக்கின்றன’ என்ற கவிதை உலகப் பிரசித்திபெற்றது. அவர்களை நிதானமான அணுகுமுறையில் அக்கறையோடு அடிப்படையான பயிற்சி முறைகளை மேற்கொள்ள உதவ வேண்டும். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி “மென்மையான அணுகு முறையான அகிம்சை வழியின் மூலம் நீங்கள் உலகத்தையே அசைக்க முடியும்” என்று கூறியதோடு அதனை செயலாக்கிக் காட்டியதையும் மறந்துவிடக்கூடாது.ADHD பாதிப்பிற்கான சிகிச்சை மற்றும் நடைமுறை பயிற்சி முறைகளை விரிவாக அடுத்த இதழில் காண்போம்.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|