உடலைக் காக்கும் குடம்புளி



‘தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை’ என்று சொல்லுமளவுக்கு புளி நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் சமையலுக்கு குடம்புளியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக் காக்கும், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது குடம்புளி.இதற்கு, கொடம்புளி, கொருக்காப்புளி, கொக்கம்புளி, சீமை கொறுக்காய், மலபார்புளி எனப் பல பெயர்கள் உள்ளன.  

குடம்புளி செரிமான உறுப்புகளைத் தூண்டி, அவற்றின் சக்தியை அதிகரிக்கும்.  உடல் எடையைக் குறைக்கும் மருந்து வகைகளில், மிக முக்கியமான மூலப் பொருளாக குடம்புளி பயன்படுத்தப்படுகிறது.  இதிலுள்ள `ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட்’ (Hydroxycitric Acid) இதயத்தைக் காக்கக்கூடியது. அத்துடன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.  தசைகளையும் தசைநார்களையும் உறுதியாக்கி ஆற்றலை அதிகரிக்கும்; ரத்தக் கொழுப்பைக் கரைக்க உதவும்.  

இதிலுள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகத் தரப்படுகிறது.  
இதன் பழத்தோலில் தயாரிக்கப்படும் ஜூஸ், வாதம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்குச் சிறந்த மருந்து.  குடம்புளியை அவ்வப்போது சமையலில் சேர்த்து வந்தால், முதுமைக் காலத்தில் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ளலாம். குடம்புளியில் உள்ள புளிப்புச் சுவை மூளையைச் சுறுசுறுப்பாக்கும். தசைகளுக்கு புத்துணர்வு ஊட்டும்.
 
உடலில் உள்ள வாத நாடியைச் சிறப்பாக்கும் பண்பு குடம்புளிக்கு உண்டு.  அடிக்கடி உடலில் இதைச் சேர்க்கும்போது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சரியாகிறது. செரிமானமும் இயல்பாகிறது.  சாதாரண புளிக்குப் பதிலாக குடம்புளியைப் பயன்படுத்தி வந்தால், உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும். கொழுப்பைக் கரைப்பதில் குடம்புளி முக்கியப் பங்கு வகிப்பதால், டயட் இருப்பவர்கள் இதை தாராளமாய் பரிசீலிக்கலாம்.  புளியின் துவர்ப்பு மூளைக்கு நல்லது. இதனால் குழந்தைகளுக்கு இதனைத் தரலாம். குடம்புளியில் ரசம் வைத்துச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

- சரஸ்