சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...



ஹெல்த் காலண்டர்

சர்வதேச கல்லீரல் அழற்சி தினம் ஜூலை 28

கல்லீரல் அழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும்ஜூலை 28-ம் தேதி உலகக் கல்லீரல் அழற்சி தினமாக (World Hepatitis Day) அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் பாரூக் சாமுவேல் புளும்பர்க்-குக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினமே கல்லீரல் அழற்சி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

2016-2021 காலகட்டத்தில் கல்லீரல் அழற்சி மீதான உலக சுகாதாரத் துறையின் உத்தியை நடைமுறைப்படுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்தும் வாய்ப்பை இந்த தினம் வழங்குகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகப் பொது சுகாதார ஆபத்தான கல்லீரல் அழற்சி வைரஸை ஒழிப்பதே இதன் நோக்கம். புதிய தொற்றை 90% குறைப்பது மற்றும் மரண விகிதத்தை 65% ஆகக் குறைப்பது இதன் முக்கிய செயல்திட்டம்.

கல்லீரல் அழற்சியைப் புரிந்து கொள்வோம்கல்லீரல் அழற்சி அடைவதால் ஏற்படும் இந்நோய் தானாகவே குணமடையக் கூடிய சாதாரண நிலையில் இருந்து கல்லீரல் நார் நோயாகவோ அல்லது கல்லீரல் புற்றாகவோ மாறக்கூடிய அளவுக்குத் தீவிரமானது. கல்லீரல் வைரஸ்கள் A, B, C, D மற்றும் E யால் உண்டாகும் ஒரு தொகுதி நோய்கள் இவை.

கல்லீரல் அழற்சி A வைரஸ் (HAV) :

அசுத்த உணவு நீர் மற்றும் நோயாளியுடனான நேரடித் தொடர்பு ஆகியவற்றால் ஏற்படும்.

கல்லீரல் அழற்சி B வைரஸ் (H BV) :

தொற்றுள்ள ரத்தம், விந்து மற்றும் பிற உடல் திரவங்கள் மூலம் பரவும் (சுகாதார நிலையங்கள் அல்லது போதை ஊசி இடுவோர் ஊசியைத் திரும்பப் பயன்படுத்துதல், பிரசவத்தின் போது தாயிடம் இருந்து சேய்க்கு, குடும்ப உறுப்பினரிடம் இருந்து குழந்தைக்கு மற்றும் தொற்றுள்ள இணையருடன் உடலுறவு).

கல்லீரல் அழற்சி C வைரஸ் (HCV) :

பாதுகாப்பாற்ற ஊசி (சுகாதார நிலையம் மற்றும் போதை ஊசி), அசுத்த ரத்தம் மற்றும் ரத்தப் பொருள் மாற்று ஆகியவற்றாலும், பிறந்த குழந்தைக்கு
HCV தொற்றுள்ள தாயாலும் பரவும்.

கல்லீரல் அழற்சி D வைரஸ் (HDV) :

தொற்றுள்ளவரின் ரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகிறது. இது HBV தொற்றுடன் அல்லது ஒரு மேல் தொற்றாக மட்டுமே ஏற்படும்.கல்லீரல் அழற்சி E வைரஸ் தொற்றுள்ள உணவு அல்லது நீரால் ஏற்படுகிறது.கல்லீரல் அழற்சி தினத்தின் முக்கிய செய்திகள்

* வைரஸ் கல்லீரல் அழற்சி ஒரு முக்கிய உலக சுகாதாரப் பிரச்னை என்பதால் உடனடி நடவடிக்கை தேவை. 2015-ம் ஆண்டு கணக்கின்படி உலக அளவில் 3.25 கோடி மக்கள் கல்லீரல் அழற்சி கொண்டவர்களாக உள்ளனர். நீடித்த கல்லீரல் அழற்சி உலக மக்கள் தொகையில் 50% கொண்ட 11 நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை வகிக்கிறது.

* கல்லீரல் அழற்சியால் ஏற்படும் மரணம் அதிகரிக்கிறது. 2015-ல் 13.4 லட்சம் மக்கள் மரணம் அடைந்தனர். காசநோய் மரணங்களுக்கு இணையாகவும் எஸ்.ஐ.வி. மரணங்களைவிட கூடுதலாகவும் இது இருக்கிறது.

* வெகுசிலரே சோதனை செய்து சிகிச்சை பெறுகின்றனர். HBV தொற்றுள்ளவர்களில் 9%, HCV  தொற்றுள்ளவர்களில் 20% மட்டுமே 2015-ம் ஆண்டில் சோதனை செய்து சிகிச்சை பெற்றனர். இதேபோல் HBV தொற்றுள்ளவர்களில் 8%, HCV தொற்றுள்ளவர்களில் 7% மட்டுமே 2015-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது கவலைக்குரிய செய்தி.

* புதிய கல்லீரல் அழற்சி தொற்றுகளில் பெரும்பாலும் C வகை தொடர்ந்து ஏற்படுகிறது. குழந்தைகளில் கல்லீரல் அழற்சி B தொற்று, 2015ல் கல்லீரல் அழற்சி B தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின் 1.3% ஆகக் குறைந்தது. (கல்லீரல் அழற்சி B தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் முன் அது 4.7% ஆக இருந்தது). 2015-ல் HCV தொற்று சில நாடுகளில் போதை ஊசியாலும், மருத்துவ நிலையங்களில் பாதுகாப்பற்ற முறையில் ஊசி இடுவதாலும் தொடர்ந்து ஏற்படுகிறது.

வைரஸ் கல்லீரல் அழற்சியைத் தடுக்கும் வழிகள்

* சோதனை செய்வதன்மூலம் உங்கள் தொற்று நிலையை அறிய முடியும்.

* பிறப்புக்கு முன்னான சோதனை, எதிர் வைரஸ் மருந்துகள், பிறந்த குழந்தைக்குக் கல்லீரல் அழற்சி B  தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் தாயிடம் இருந்து சேய்க்குப் பரவும் HBV தொற்றைத் தடுக்க முடியும்.

* கல்லீரல் அழற்சி A, B மற்றும் E தொற்றைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

* கல்லீரல் அழற்சி B தடுப்பு கல்லீரல் அழற்சி D-யையும் தடுக்கும்.

* ஊசி, ரத்தம் மற்றும் அறுவை சிகிச்சையில் பாதுகாப்பு மற்றும் போதை ஊசி தடுப்பு மூலம் கல்லீரல் அழற்சி B மற்றும் C யைத் தடுக்கலாம்.

* கல்லீரல் அழற்சி B மற்றும் C- க்கு பலனளிக்கும் பல சிகிச்சைகள் உள்ளன.

* பாதுகாப்பான குடிநீர், உணவு, மேம்பட்ட சுத்தம், கைகழுவல் மூலம் கல்லீரல் அழற்சி A மற்றும் E யைத்  தடுக்கலாம்.

ஓ.ஆர்.எஸ். தினம்  ஜூலை 29

வளர்ந்துவரும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் இளஞ்சிறார்களின் மரணத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்கள் விளங்குகின்றன. பெரும்பாலும் கழிப்பிட வசதிகள் இன்மையாலும், மோசமான சுகாதாரத்தாலும் உண்டாகும் வயிற்றுப் போக்கு, நீர்ச்சத்திழப்பு போன்ற கடுமையான உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும்.

குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்களை இது பாதிக்கிறது.வயிற்றுப் போக்கால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை அதிகமான நீராகாரங்களைக் கொடுப்பதன் மூலமும் ORS கரைசலைக் கொடுத்து சிகிச்சை அளிப்பதன் மூலமும் பெருமளவு தடுத்துவிடலாம். ORS இணை (ORS மற்றும் துத்தநாகம்) கடும் வயிற்றுப்போக்கையும் நீர்ச்சத்து இழப்பையும் தடுப்பதிலும் கையாள்வதிலும் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும் விதமாகவே ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29-ஆம் தேதி ORS தினம் கொண்டாடப்படுகிறது.

வாய்வழி மறுநீர்ச்சத்தேற்றும் உப்பில் பல உப்புக்களும் (மின்பகுப் பொருட்கள்) சர்க்கரையும் அடங்கியுள்ளன. மின்பகுபொருட்கள் மற்றும் சர்க்கரைச் சேர்க்கை வயிற்றில் நீர் மற்றும் மின்பகுபொருள் உறிஞ்சலைத் தூண்டுகிறது. இதனால் இது நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கிறது அல்லது மறுசீரமைக்கிறது மற்றும் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற நிலைமைகளில் இழந்த உப்புச்சத்தை ஈடுகட்டுகிறது. ORS பொடி வடிவத்தில் கடையில் பொட்டலங்களாகக் கிடைக்கின்றன. வீட்டிலும் இவற்றைத் தயாரிக்கலாம்.

ORS பானம் தயாரிக்கும் வழி

* ORS பொடியைச் சுத்தமான கோப்பையில் கொட்டவும். பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வழிகாட்டுதலைப் படிக்கவும். கூறப்பட்டபடி சுத்தமான நீரைச் சேர்க்கவும்.

* தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும். பால், சூப், பழரசம் அல்லது பானங்களைச் சேர்க்கக் கூடாது. சர்க்கரையும் சேர்க்கக் கூடாது.

* நன்றாகக் கலக்கவும். சுத்தமான கோப்பை மூலம் குழந்தைக்குப் புகட்டவும். குப்பியைப் பயன்படுத்த வேண்டாம்.

* ORS கரைசலுக்குப் போதுமான தண்ணீரை சேர்க்க வேண்டும். மிகவும் குறைந்த அளவு நீர் வயிற்றுப் போக்கை அதிகப்படுத்திவிடும். அதேபோல், சுகாதாரமற்ற தண்ணீரிலும் ORS கரைசல் தயாரிக்கக் கூடாது. ORS பாக்கெட்டுகள் கிடைக்காவிட்டால் அதை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கலாம்.

* சுத்தமான நீர் - 1 லிட்டர் (200 மி.லி. அளவுள்ள 5 கோப்பைகள்)

* சர்க்கரை - 6 தேக்கரண்டிகள் (1 தேக்கரண்டி = 5 கிராம்)

* உப்பு - அரைத் தேக்கரண்டி

* சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.கவனத்தில் கொள்ளவும்.

* வீட்டில் தயாரிக்கப்பட்ட கரைசலே பெரும்பாலும் போதுமானதாகும். அது மறுநீர்ச்சத்தேற்றத்துக்குப் பலன் அளிக்கும். சரியான அளவுகளைக் கொண்டு கலப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக சர்க்கரை வயிற்றுப்போக்கை மோசமாக்கும். அதிக உப்பு குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கும்.

* ORS கரைசலை மூடி வைக்க வேண்டும். 24 மணி நேரத்துக்கு மேல் பாதுகாத்து வைக்கக் கூடாது. ஏனெனில், பாக்டீரியாக்கள் உருவாகலாம்.

* அசுத்த நீரைப் பயன்படுத்தினால் நீர்ச்சத்தேற்றுவதனால் கிடைக்கும் நன்மைகளை இழக்க நேரிடும். பயன்படுத்துவதற்கு முன் நீரைக் கொதிக்க வைத்து ஆறவிட வேண்டும். நீரைக் கொதிக்க வைக்க முடியவில்லை என்றால் முடிந்த அளவு வடிகட்டிய நீரைப் பயன்படுத்த வேண்டும்.


எல்லோருக்கும் ORS கரைசலைப் பயன்படுத்த முடியுமா?

குழந்தைகளைப் போன்றே வயதானவர்களுக்கும் மறுநீர்ச்சத்தேற்றம் அவசியமானது ஆகும். அதனால், குழந்தைகள் முதல் வயது வந்த முதியவர் வரை எல்லோரும் ஓ.ஆர்.எஸ் சொட்டு மருந்தினைப் பயன்படுத்தலாம். ஆனால், குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் எளிதில் நீர்ச்சத்தை இழந்து போவார்கள்.

 தொகுப்பு: க.கதிரவன்