செய்திகள் வாசிப்பது டாக்டர்



புற்றுநோய் பரிசோதனையை கட்டாயமாக்க முடிவு!

‘புற்றுநோய் கண்டறியும் சோதனை அனைவருக்கும் நடத்த வேண்டும். இதை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். பெங்களூருவிலுள்ள கித்வாய் புற்றுநோய் தடுப்பு மையத்தில் புதிய கட்டிடங்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்த
அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.

‘‘புற்றுநோய் மிகப்பெரிய கொடிய நோய். அந்நோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் புற்றுநோயை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். புற்றுநோய் உடலைத் தாக்கும் முன்பு அதை அடையாளம் காண்பதுடன் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் இணைந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்கு மட்டும் இன்றி, இந்த கொடிய நோயை பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதுவும் அரசுகளின் கடமையாகும். நவீன உலகில் உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. தினந்தோறும் மாறியும் வருகின்றன. எனவே, புற்றுநோய் கண்டறியும் சோதனை அனைவருக்கும் நடத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின்படி வருடந்தோறும் 5 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2020-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிடும் என்பது இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கணிப்பாகும்.

இந்தியாவில் 12.5 சதவீதம் பேர் மட்டுமே நோய் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மீதியுள்ள நபர்கள் தங்களின் உடல் நிலையை பரிசோதனை செய்வதில்லை. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை கட்டணம் அதிகம் என்பதால் சாதாரண மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய்க்கு குறைந்த கட்டணத்தில் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும்.

இதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் நோயின் தீவிரத்தின் காரணமாக துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அத்துடன் மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையுடன் மனரீதியான சிகிச்சையும் அளிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்க வேண்டிய விஷயம்தான்!

- ஜி.ஸ்ரீவித்யா