கிருமிநாசினிகள் Antibiotics



நவீன மருத்துவத்தின் விஞ்ஞான கொடையாக நமக்குக் கிடைத்த கிருமி நாசினிகளும் (Antibiotics), அறுவைசிகிச்சை முறைகளும் மிக முக்கியமானவை. இவையே மனித குலத்தின் 90 சதவிகித நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன.

பல்வேறு நோய்கள் கிருமிகளால் ஏற்படுகின்றன என்று அறியப்பட்டிருக்கிறது... எனினும், கெட்ட காற்று, வாயு, பித்தம், தீயவினைகளால் நோய் உண்டாவதாக நம்பிக்கொண்டு, கைக்குழந்தைகளையும் இளந்தாய்களையும் இன்றும் வேப்பிலையுடன் நவீன மருத்துவரிடம் அழைத்து வருகிறது நம் சமுதாயம். பல நோய்களுக்கும் நவீன மருத்துவரிடம் தீர்வு இருப்பதாக நம்பி வருவது தான் கடவுள் நம்பிக்கையின் உச்சகட்டம்.

ஆரம்ப காலத்தில் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளிலிருந்து கிடைத்தன. இவை மனித உடலில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கவோ, குறைக்கவோ, கொல்லவோ பயன்படுத்தப்படுகிறது.

உடலில் ஏற்படும் எல்லாக் காயங்களும் கிருமிகளால் ஏற்படும் அனைத்து நோய்களும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, தானாகவே கிருமிகளை ஒழிக்க போராடி உடல் தோற்றுப்போகும் பட்சத்தில் என்ன ஆகும்? கிருமிகளால் உருவாகும் நோய், கிருமிகள் ஒன்றிலிருந்து பல நூறாக, லட்சங்களாக, கோடிகளாக, ஓரிடத்தில் மட்டுமல்லாது, உடல் முழுக்க பரவி (sepsis), நோயின் வீரியம் அதிகமாகி நோயாளி இறந்துபோகக்கூட நேரிடும்.

முதன்முதலாக மருத்துவ ஆராய்ச்சியாளர் எர்லீஷ், சில சாயம் மற்றும் உலோகங்களுக்கு கிருமி நாசினிகளுக்கான குணாதிசயம் இருப்பதை அறிந்தார். 1935ல், ஜெர்மன் மருத்துவர் டோமாக் Sulfonamide dyeயை கிருமிநாசினியாக பயன்படுத்தி வெற்றி கண்டார். 1877ல், விஞ்ஞானி லூயி பாஸ்டியர், சிறுநீர் ஆந்தராக்ஸ் கிருமிகளின் வளர்ச்சி காற்றில் இருக்கும் கிருமிகளால் கட்டுப்படுத்தப்படுவதைக் கண்டறிந்தார்.

1929ல், விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிளமிங், Penicillium mould (Staphylococcus) கிருமிகளை அழிப்பதைக் கண்டறிந்தார். இதற்குப் பிறகு ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டன... கொத்து கொத்தாக கிருமித் தொற்றுகளால் இறந்து கொண்டு இருந்த மனித சமுதாயத்தின் மரணம் தடுத்து நிறுத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிக கிருமிநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்று புதிதாக கிருமிநாசினிகளை கண்டுபிடிக்க இயலாத ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

அதனால், கீபிளி (உலக சுகாதார நிறுவனம்) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஆகிய அமைப்புகள் கிருமிநாசினிகளை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது (Avoid Antibiotic Abuse Mission AAA) என நவீன மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கிருமிநாசினிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட முறையில் - குழந்தைகள், நடுவயதினர், மூத்தகுடிமக்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் - ஒருவேளை, ஒருநாள் அளவு, ஒவ்வொரு   நோய்க்கும்   கொடுக்க வேண்டிய அளவு என நோயின் வீரியத்தை பொறுத்து மாறுபடும். 

இது ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கான அளவின் அடிப்படையில் கணக்கிடப்படும். அமெரிக்காவிலிருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு விடுமுறைக்கு வந்த ஒருவர், நான் மருந்து எழுதும்போது, ‘டாக்டர் அமெரிக்காவில் கிருமிநாசினிகளை உடனே தருவதில்லை. தந்தால்  5, 7, 10 நாட்கள் என தருவார்கள்.

இந்தியாவில் எடுத்தவுடன் கிருமிநாசினிகளை எழுதுவதும் 3 நாட்களுக்கு மட்டும் எழுதுவதும் ஏன்?’ என்று கேட்ட கேள்வி எனக்கு ஞாபகம் வருகிறது. மருந்துக்கடைகளில் ஒரு வேளைக்குக்கூட தருவது அவருக்கு தெரியவில்லை!

கிருமிநாசினிகளை பாக்டீரியாக்களுக்கு மட்டும் - (சிக்கன் பாக்ஸ் போன்ற ஒரு சில வைரஸ்களுக்கு ஆன்டி வைரஸ் இருப்பது தவிர) வயிறு, குடல் பாக்டீரியா மற்றும் கிருமிகளான ஒரு செல் உயிரியான அமீபாவிலிருந்து புழுக்கள் வரை பயன்படுத்த முடியும். சளி, மூக்கு ஒழுகுதல் உடன் வரும் ஃபுளு (Flu) மற்றும் சிக்குன்குனியா, டெங்கு, வைரஸ், எபோலா காய்ச்சலுக்கு கிருமிநாசினிகள் பயன்படாது.

அதனால், சில காய்ச்சலுக்கு நவீன மருத்துவர் ஜுரம் மாத்திரை மற்றும் அலர்ஜி, மூக்கடைப்பு மாத்திரை மட்டும் எழுதித் தரும்போது தெரிந்த மருந்துகளையே தருகிறாரே என நல்ல மருந்துகளை எழுதித் தருமாறு வற்புறுத்தாமல், அவர் கூறும் விளக்கங்களை ஏற்று, அவர் தரும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதும், 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஆலோசனை பெறுவதும் நல்லது.

கிருமிநாசினிகளை தேவையில்லாமல் உபயோகப்படுத்தும்போதோ, குறைவான அளவில் உபயோகப்படுத்தும்போதோ (dose), குறைவான நாட்கள் உபயோகப்படுத்தும்போதோ, அடிக்கடி உபயோகப்படுத், தும்போதோ, அது கிருமிகளைக் கொல்லும் வீரியம் (Resistant) குறைந்து, அவை கிருமிகளுக்கு எதிராக வேலை செய்யாமல்   போய்விடும்.

புதிய கிருமிநாசினிகளை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் பரிந்துரை அல்லாது ஓரிரு வேளைக்கு மட்டும் மருந்தாளுநர்கள் மூலமோ, தாமாகவோ கிருமிநாசினிகளை பயன்படுத்துவதை - குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுப்பதை  நிறுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

காச நோய்க்கு 4 அல்லது 5 மருந்துகள் கிருமிநாசினியாக உட்கொள்ளப்படுகிறதே... ஏன்? நோயாளியின் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமி நாசினிகள் T.B. கிருமியை அழிக்கும்
வீரியம் குறைந்ததே இதற்குக் காரணம். இது கிருமிநாசினிகளின் வீரியம் குறைவதற்கும் காரணமாகிறது (Multidrug resistant  MDR). 

*நோயாளியின் எடைக்குக் குறைவான, நோயின் வீரியத்துக்குக் குறைவான கிருமிநாசினிகளின்     அளவுக்கு, கிருமிகளுக்கு Mutation எனப்படும் உயிரின மூலக்கூறுகளின் (DNA / RNA) மாற்றம் ஏற்படுவது, நுண்ணுயிரிகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் பரிணாம வளர்ச்சியாகும்.

*குறைவான அளவில் (Low dose) கிருமிநாசினிகளை உபயோகிக்கும்போது மருந்துகளுக்கு உருவாகும் எதிர்ப்புச் சக்தியை இப்படி உணரலாம்... கொசு மருந்து உபயோகிக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன் கொசுக்களே இல்லாமல் போனது மாறி, இப்போது கொசுக்கள் அறைகளில் தாராளமாக உலவுகின்றனவே...

கொசு மருந்துக்கு அவை கொல்லப்படாமல் போவதுபோல, அம்மருந்துக்கு கிருமிகள் பழகிக்கொள்வதால் மருந்துக்கான வீரியம் குறைவதையே drug  resitant என்று கூறுகிறோம். இதனால்தான் MDR - காசநோய்க்கு பல்வேறு மருந்துகளை உபயோகப்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

கிருமிநாசினிகளை அடிக்கடி எடுப்பதால் இரைப்பையில், உணவுக்குழாயில், ஜீரணத்துக்குப் பயன்படும் சில நல்ல நுண்ணுயிரிகளையும் அழித்து, ஜீரண சக்தி குறைந்து, எடையும் குறையும் அபாயம் ஏற்படும். கிருமி நாசினிகள் வாந்தி, பேதி, வயிற்றுவலி, தோல் அலர்ஜி போன்ற சிறிய பக்கவிளைவுகளுடன், ஷாக் (Shock) போன்ற உயிரைப் பறிக்கும் பக்கவிளைவாகவும்   மாறலாம். கிருமிநாசினிகள்   சிறுநீரகம், ஈரல் போன்ற   உறுப்புகளையும் பாதிக்கும்.

ஒவ்வொரு கிருமியும் உடலின் ஒவ்வோர் இடத்தில் வளரும், வாழும். ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனியான கிருமிநாசினிகள் உண்டு. அவை ஒவ்வொன்றும்   குழந்தைகளுக்கு   சொட்டு மருந்தாக, புட்டி மருந்தாக, கரையும் மாத்திரைகளாக, பெரியவர்களுக்கு எடைக்குத் தகுந்த மாத்திரைகளாக, ஊசிமருந்தாக, சில வேளைகளில் புண்களுக்கு பவுடர்களாக, ஆயின்மென்ட் ஆக, பிறப்பு உறுப்பிலோ, ஆசனவாயிலோ வைக்கும் கரையும் மருந்துகளாக அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மருந்துக்கும் மருந்தின் அளவு, உட்கொள்ளும் நாட்களின் அளவு வேறுபடும். கடைகளில் காய்ச்சலுக்கு என்று மருந்தாளுநர் தைரியமாக - ஓரிரு வேளைக்காக  மருத்துவரின் பரிந்துரையின்றி   கிருமிநாசினிகளை   எடுத்துத் தரும்போதோ, அவ்வாறு தரும்   மருந்தினை   நோயாளி தைரியமாக ஓரிரு வேளை உட்கொள்ளும்போதோ, மருத்துவர் பரிந்துரைத்தும் நன்றாக ஆகிவிட்டது என ஓரிரு வேளைகளில் கிருமிநாசினிகளை உட்கொள்ளாமல் நிறுத்தும்போதோ - கிருமிநாசினிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

 உதாரணமாக ampicillin (அம்பிசிலின்), amoxicillin (அமாக்ஸ்சிலின்), erythromycin (எரித்திரோமைசின்) போன்ற மருந்துகள் இந்தியாவில் - முக்கியமாக
தமிழகத்தில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுவதால் அவை வீரியம் இழந்து வருகின்றன. சாதாரண காய்ச்சலுக்குக்கூட நரம்புகளில் மருந்து ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க வைக்கிறது.மருந்தாளுநர்கள், மருத்துவர் பரிந்துரையின்றி கிருமிநாசினிகளை தருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தட்டும்.

கிருமிநாசினிகளை பெயர் தெரிந்து கேட்டு வாங்கி உண்பதை மக்கள் நிறுத்தட்டும். தேவையில்லாத இடங்களில் கிருமிநாசினிகளை உபயோகிப்பதை மருத்துவர்களும் நிறுத்தட்டும்.நாம் நம் சந்ததியினருக்கு சொத்து, பாரம்பரியம், நல்ல சுற்றுச்சூழல், சுகாதாரங்களை மட்டுமல்ல... நல்ல வீரியம் மிக்க கிருமி நாசினிகளையும் விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Join The Fight Against Antimicrobial Resistance

D Dosage should be Adequate
E Ensure Monotherapy
M Microbiology Assistance (change or stop as per culture report)
A Appropriate Duration
N Narrow Spectrum
D Drugs combination to be avoided.