த்ரிஷாவுக்கு திருமணமா?



ஸ்வீட் சர்ப்ரைஸ்

தொழிலதிபர் கம் படத் தயாரிப்பாளர் வருண்மணியனும் த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்களும், ‘அவர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்’ என்ற செய்தியும் கோலிவுட்டின் கொண்டாட்ட டாக் ஆகியிருக்கிறது. ‘ஐயெம் நாட் எங்கேஜ்டு... அப்படி ஆனா, நிச்சயம் உங்களுக்குத்தான் முதலில் சொல்வேன்’ என இதற்கு சமாளிபிகேஷன் ட்வீட் செய்தார் த்ரிஷா. ஆனாலும் த்ரிஷா - வருண் இருவருக்குமான வாட்ஸ் அப் வாழ்த்து, செல்லுக்கு செல் உலவுகிறது.

‘‘யார் இந்த வருண்மணியன்? எப்படி நிகழ்ந்தது இந்த லவ் மிராக்கிள்?’’ - இருவரின் நெருங்கிய - நெருங்காத நட்பு வட்டங்களில் விசாரித்ததிலிருந்து...‘காவியத்தலைவன்’ படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர்தான் வருண்மணியன். அதற்கு முன், ‘வாயை மூடி பேசவும்’ படத்தைத் தயாரித்தவர். இந்த இரு படங்களிலும் சம்பந்தம் இல்லாதவர் த்ரிஷா. இருவரும் எப்படி பழக்கமானார்கள்?

வருணை ஒரு தயாரிப்பாளராகத்தான் சினிமாத்துறையினருக்குத் தெரிந்திருக்கும். கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸில் பல நூறு கோடிகள் டர்ன் ஓவர் செய்து வரும் நிறுவனம் அவருடையது என்கிறார்கள் சினிமா நண்பர்கள். மும்பையில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் வருண். எல்.கே.ஜி.யிலிருந்து பிளஸ் 2 வரை ஆஸ்ரம் ஸ்கூலில் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்தவர்.

ரொம்பவும் பாஸிட்டிவ் அப்ரோச்... லைஃபை கொண்டாட வேண்டும் என்ற பாலிஸி உள்ளவர் வருண். பார்ட்டி பறவையான அவருக்கு சென்னையில் ஒரு பார்ட்டி நைட்டில்தான் த்ரிஷாவுடன் நட்பு பூத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடக் காதலாம்!

இருவரின் சந்திப்பிற்கும், காதல் செடி வளர்வதற்கும் தமிழின் முக்கிய இளம் நடிகர்கள் இருவர் காரணமென சொல்லப்படுகிறது. அதிலும், தெலுங்கில் கொடி கட்டிப் பறந்து, தற்போது தமிழ் இண்டஸ்ட்ரியைக் குறி வைத்து வரும் ‘புத்த’ நடிகர்தான் இருவருக்கும் பொது நண்பர். தன் பட புரொடியூஸர் என்கிற முறையில் வருணோடு அந்த நடிகர் பார்ட்டி - பப்களில் தலைகாட்ட, அப்போதுதான் த்ரிஷாவும் அந்த ஜமாவில் இணைந்திருக்கிறார்.

த்ரிஷா - வருண் நிச்சயதார்த்த செய்தி வெளியான அன்றே ராய் லட்சுமி, தனது ட்வீட் பக்கத்தில், ‘உண்மையில் நடந்திருந்தால் நடந்ததென்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே’ எனப் பெயர் குறிப்பிடாமல் கொதித்திருந்தார். ஏன் இவருக்கு ஆவேசம் என விசாரித்தால், ‘‘சில மாதங்களுக்கு முன்பு ராய் லட்சுமிக்கு தொழிலதிபருடன் திருமணம் எனக் கிளம்பிய வதந்தி குறிப்பிட்டது இந்த வருணைத்தான்’’ என்கிறார்கள் இண்டஸ்ட்ரியில்.

‘‘த்ரிஷா - வருண் நிச்சயதார்த்தம் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் வீட்டில் எளிய முறையில் நடந்ததாம். ஃபங்ஷனில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் உடனிருந்து மகளை ஆசீர்வதித்தார். மிக நெருங்கிய நண்பர்கள், உறவுகள் என சுமார் 20 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளஞ்ஜோடியை ஆசீர்வதித்து மகிழ்ந்தார்கள். அப்போது எடுத்த படங்கள்தான் வெளியானவை எல்லாம்’’ என உறுதி செய்கிறார்கள் த்ரிஷாவின் நெருங்கிய வட்டத்தினர்.

த்ரிஷாவின் அம்மாவிடம் இது பற்றிக் கேட்டால், ‘‘நிச்சயதார்த்தம் நடந்தால் கண்டிப்பாக உங்களிடம் (மீடியாவிடம்)தான் முதலில் சொல்லுவோம்’’ என ஒன் லைனில் முடித்துக்கொண்டார். ‘‘அப்புறம் அந்த போட்டோஸ்... எப்படி?’’ என்பதற்குள் நாட் ரீச்சபிள் ஆகிவிட்டார். வருணைப் பிடிக்க முயன்றால், ‘‘அவர் எங்க போனையே அவாய்ட் பண்றார்...’’ என்கிறார்கள் ‘காவிய’ யூனிட்டில் உள்ளவர்கள்.

நல்ல நியூஸ்தானே... இதை ஏன் த்ரிஷா மறைக்க வேண்டும்? த்ரிஷா தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகி நிற்கிறது. அஜித்துடன் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தை பொங்கலுக்கு குறி வைத்திருக்கிறார்கள். மேலும், ‘அப்பாடக்கர்’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என கைவசம் கமிட்மென்ட்ஸ் வைத்திருக்கிறார். ‘‘நிச்சயதார்த்த நியூஸை ஒப்புக்கொண்டால் தல படத்திற்கு நெகட்டிவ் டாக் வரும்’’ என்று இயக்குநரே த்ரிஷாவிடம் சொன்னதாக ஒரு டாக் உலவுகிறது.

‘‘ ‘நாய்க் குட்டிக்கு பர்த் டே...’, ‘ஐ லவ் சென்னை’ என எடுத்ததற்கெல்லாம் ட்வீட் செய்யும் பொண்ணு... இப்போது, ‘நிச்சயதார்த்தம் நடக்கவில்லை’ என்று மட்டும்தான் ட்வீட் செய்திருந்தாரே தவிர, ‘வருணை யாரென்றே எனக்குத் தெரியாது... நாங்கள் இருவரும் இணைந்திருக்கும் படம் கிராபிக்ஸ்...’ என எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. வருணும் வாய் திறக்கவில்லை. இதுவே அவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதை உறுதி செய்கிறது’’ என இருவரின் நெருங்கிய நட்புகளும் காதைக் கடிக்கின்றன. எது எப்படியோ... காதலைச் சேர்த்து வைத்த ஹீரோக்கள் காலமெல்லாம் வாழ்க!

-மை.பாரதிராஜா