கவிதைக்காரர்கள் வீதி




கைகளில் ஏந்தியுள்ள
மெழுகுவர்த்தியை
வெளிச்சம் பின்தொடரும்.

uமறையும் குமிழிக்காக
கவலை கொள்வதில்லை
அலை.

uஇந்த இடுகாடு
என்னுடைய
மரண ஊர்வலத்துக்காகக்
காத்திருக்கிறது.

uவாழ்க்கைக் கிணற்றில்
எத்தனையோ பக்கெட்டுகள்
காணாமல் போயின

uவிடுகதையாகப் பேசும் கிழவி
உச்சிவெயிலில்
மயங்கிச் சரிந்தாள்
இப்போது
மரணப் புதிருக்கு
விடை கண்டிருப்பாள்

uகுழந்தைகளின் கனவில்
சோற்றுக் கவளத்துக்கு
கையேந்தும் நிலா

uவந்து போகும் யாரிடமும்
பிரபஞ்ச ரகசியத்தைப்
பகிர்ந்து கொள்வதில்லை
கடவுள்.

ப.மதியழகன்