ஸ்ரீதேவி வாரிசின் பலே திட்டம்!



‘நம்ம’ ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர். இவர் தனது அம்மாவைப் போலவே பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கவேண்டுமென விரும்பியே நடிக்க வந்தார். பாலிவுட்டின் முக்கிய புள்ளியான கரன் ஜோஹரின் படத்தில் நடித்தும் ஜான்வியால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.அப்பா போனி கபூர் இந்தியில் பெரிய தயாரிப்பாளர். 
அஜீத்தை வைத்து தமிழிலும் படங்களைத் தயாரித்தவர். அப்படியிருந்தும் அவர் தயாரிப்பில் மகளை நடிக்க வைக்கவில்லைஆனாலும் எப்படி சினிமாவில் வரவேற்பை பெறுவது என்று குழப்பத்தில் இருந்தார் ஜான்வி. பெற்ற மகள் கஷ்டப்படுவதைப் பார்த்து மனமிரங்கிய அப்பா, ‘சரி உன் விருப்பம் போல் செய். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடந்து கொள்’ என்று சொல்லிவிட்டாராம்.

இதனால்தான் இப்பொழுது தமிழ், தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் ஜான்வி கபூர். பாலிவுட்டில் அப்பா அம்மா பெயர்களும் பின்னணியும் உதவாததால், தனக்கென ஒரு பெயரை உருவாக்க வேண்டுமென நினைத்த ஜான்வி, தனக்கென ஒரு பப்ளிக் ரிலேஷன் குழுவை வைத்து கொண்டிருக்கிறாராம்.

‘நாடோடிகள்’ படத்தில் நமோ நாராயணன் செய்யும் வேலைகளை அடுத்த நிமிடமே ஃப்ளெக்ஸ் வைத்து விளம்பரப்படுத்துவார்கள் அல்லவா? அதேபாணியில் இப்போது ஜான்வியின் பிஆர் குழு பரபரப்பாக செயல்பட்டு வருகிறதாம்.

முதல் கட்டமாக ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கப் போகிறார் என்பதையே ஒரு பெரும் செய்தியாக்கிவிட்டார்கள். அடுத்து இவர் ஜூனியர் என்டிஆர் உடன் ‘தேவரா’வில் நடிக்கிறார், ராம் சரணுடன் ஜோடி சேரப் போகிறார் என்பதையெல்லாம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக்கி வருகிறது இந்த டீம்.லேட்டஸ்ட் ஆக சூர்யாவுடன் ஜோடி சேரப் போகிறார் ஜான்வி என்றும் அடுத்த செய்தியை கசியவிட்டிருக்கிறார்கள்.

இதைப் பார்த்து ஜான்விக்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கிறது. அவரை நடிக்க வைத்தால் இந்தி மார்க்கெட்டிலும் வியாபாரமாகும். சமூக ஊடகங்களிலும் நல்ல விளம்பரம் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் வருவார்கள் என பக்காவாக திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறதாம் பிஆர் குழு.தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாகிவிட்டால், பின்னர் பாலிவுட்டில் இருந்து தானாகவே அழைப்பு வரும் என்றும் ஒரு கணக்கு போட்டிருப்பதாகவும் ஜான்வி தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

காம்ஸ் பாப்பா