தல புராணம்-மெட்ராஸ் ஒய்எம்சிஏ…



பொதுவாக, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கட்டடங்கள் பலவும் சிவப்பு வண்ணத்திலேயே காட்சியளிக்கும். அதிலிருந்தே அவை பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தவை எனச் சொல்லலாம்.

ஆனால், ஐரோப்பிய தனி வணிகர்களும், அமைப்புகளும், நிறுவனங்களும் இங்கே உருவாக்கிய கட்டடங்கள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
சென்னை பிராட்வேயிலுள்ள சட்டக்கல்லூரியின் எதிரிலே பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் ஒய்எம்சிஏ கட்டடமும் இப்படியான மாறுபட்டினுள் அடங்கும்.

ஏனெனில், சாக்லெட் நிறத்தில் முழுக்க முழுக்கக் கற்களால் உருவாக்கப்பட்ட அழகான கட்டடம் அது. இன்று பரபரப்பான நெருக்கடி மிகுந்த இடமாகிப் போனாலும் கூட இதன் உள்ளே செல்லும்போது காற்றோட்டம் நம் உடலை வருடுகிறது. ‘‘மெட்ராஸில் முழுவதும் கற்களால் ஆன ஒரே பப்ளிக் பில்டிங் ஒய்எம்சிஏ கட்டடமே...’’ என சமர்செட் பிளேனி தொகுத்த ‘SOUTHERN INDIA - ITS HISTORY, PEOPLE, COMMERCE, AND INDUSTRIAL RESOURCES’ நூலில் இக்கட்டடம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இன்று அரசால் பாரம்பரியக் கட்டடமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இதன் வயது 120. ஆனால், ஒய்எம்சிஏ-வின் வயது இதைவிட ஒன்பது வருடங்கள் அதிகம். அதென்ன ஒய்எம்சிஏ?Young Men’s Christian Association எனச் சொல்லப்படும் தன்னார்வ அமைப்பின் சுருக்கமே ஒய்எம்சிஏ! தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கிளை விரித்திருக்கும் இந்த அமைப்பின் தோற்றம் இங்கிலாந்து.

1844ம் வருடம் சர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்ற கொடையாளர் லண்டனில் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். இளைஞர்கள் தவறான பாதைகளில் பயணிக்காமல், தங்கள் வாழ்க்கையையும், சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இதனைத் தொடங்கினார் வில்லியம்ஸ்.
பின்னர், இந்த அமைப்பின் கிளை பல்வேறு நாடுகளில் பரவியது. இந்தியாவிற்குள் 1854ம் வருடம் வந்தது. அன்றைய கல்கத்தாவில் பாப்டிஸ்ட் மிஷனரியைச் சேர்ந்த ஜான் லாசன் என்பவர் ‘கல்கத்தா கிறிஸ்துவ இளைஞர் சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார்.

இதை, 1857ம் வருடம் கல்கத்தா ஒய்எம்சிஏ எனப் பெயர் மாற்றி நடத்தலானார். இதுவே ஆசியாவின் முதல் ஒய்எம்சிஏ அமைப்பு.
இதன்பிறகே கொழும்பு, திருவனந்தபுரம், பம்பாய், மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் விரிந்தது. ெதன்னிந்தியாவில் திருவனந்தபுரத்தில் முதல்முதலாக ஒய்எம்சிஏ தொடங்கப்பட்டது.இந்நிலையில்தான், 1888ம் வருடம் மெட்ராஸ் மிஷனரி அமைப்பு அமெரிக்காவில் இருந்த சர்வதேச ஒய்எம்சிஏ கமிட்டியிடம் மெட்ராஸில் ஓர் அசோசியேஷன் அமைக்க வேண்டி கேட்டது.

அந்த சர்வதேச கமிட்டியைச் சேர்ந்த டேவிட் மெக்கானாகி என்ற இளைஞர் 1890ம் வருடம் மெட்ராஸ் வந்து எஸ்பிளனேடில் (இப்போது உயர்நீதிமன்றமும், சட்டக்கல்லூரியும் இருக்கும் பிராட்வே பகுதி) ஒய்எம்சிஏவைத் தோற்றுவித்தார். இவரே மெட்ராஸ் ஒய்எம்சிஏவின் முதல் பொதுச் செயலாளர்.

மட்டுமல்ல. இந்தியா முழுவதும் ஆங்காங்கே தொடங்கப்பட்ட ஒய்எம்சிஏவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார். 1891ம் வருடம் ஒய்எம்சிஏ தேசிய கவுன்சிலை மெட்ராஸில் நிர்மாணித்தார். அதே வருடம் பிப்ரவரி மாதம் முதல் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம், ஒய்எம்சிஏயின் இந்திய தேசிய கமிட்டி உருவாக்கப்பட்டது. இதில் பதினேழு அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு ஓர் அமைப்பாக இணைந்தனர். ஆரம்பத்தில் இதன் தலைமையகமாக மெட்ராஸ் இருந்தது.

சேர்மனாக சத்தியநாதன் என்பவரும், செயலராக டேவிட் மெக்கானாகியும், பொருளாளராக டபிள்யு.ஆர்.ஆர்பத்நாட் என்பவரும் இருந்தனர். பின்னர், இந்த அமைப்பின் தலைமையகம் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது.தொடர்ந்து, 1964ம் வருடம் தில்லிக்கு மாறியது. இன்று இந்திய ஒய்எம்சிஏக்களுக்கான உயரதிகார அமைப்பாக இந்தத் தேசிய கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

இதன் முதல் இந்திய பொதுச் செயலாளர் கே.டி.பால் ஆவார். இவர் 1919ம் வருடம் காந்திஜி ெசான்னதற்கிணங்க லண்டனில் இந்திய ஒய்எம்சிஏ மாணவர் விடுதியைத் துவங்கினார். மெட்ராஸில் ஒய்எம்சிஏ தொடங்கப்பட்டதும் அதற்கென ஒரு கட்டடம் தேவைப்பட்டது. இதனால், 1897ம் வருடம் ஜனவரி 29ம் தேதி புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹேவ்லாக் நாட்டினார்.
இடத்திற்கான நிதியை பிரிட்டன் நண்பர்கள் அளிக்க, கட்டுமானங்களுக்கான நிதியை அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவைச் சேர்ந்த ஜான் வானாமேக்கர் என்பவர் வழங்கினார். 1899ம் வருடம் கற்களாலான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இளைஞர்களை நல்வழிபடுத்தி அறிவுபூர்வமாகவும், சமூக ரீதியாகவும், உடல் சார்ந்தும், ஆன்மீகத்திலும் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பாட்டைத் தொடங்கியது.

இதனால், முதலில் வீடில்லாதவர்களுக்கு விடுதியும், உடல்திறனை மேம்படுத்த விளையாட்டுகளும் ஒய்எம்சிஏவால் உருவாக்கப்பட்டன.
இப்படியாக, 1908ம் வருடம்  சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவில் கிறிஸ்துவ மாணவர்களுக்காக ஒரு விடுதியும், பிறகு 1911ல் சிந்தாதிரிப்பேட்டையில் மேலும் இரண்டு விடுதிகளும் தொடங்கப்பட்டன.

தொடர்ந்து ராயப்பேட்டை, வேப்பேரி என ஒய்எம்சிஏவின் கிளைகள் மெட்ராஸில் விரிந்தன. அங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.   ‘‘இன்னைக்கு மெட்ராஸ் ஒய்எம்சிஏவுக்கு ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, கோடம்பாக்கம், ராயபுரம், கொட்டிவாக்கம், எஸ்பிளனேடு, ெகாடைக்கானல்னு மொத்தம் எட்டு இடங்கள்ல கிளைகள் இருக்கு...’’ என்கிறார் மெட்ராஸ் ஒய்எம்சிஏவின் பொதுச் செயலாளரான ஆசிர் பாண்டியன்.

‘‘பொதுவா, ஒய்எம்சிஏன்னா கிறிஸ்துவர்களுக்கான சங்கம்னு நினைப்பாங்க. முதல்ல, லண்டன்ல தொடங்கினப்ப அங்க எல்லோருமே கிறிஸ்துவர்கள். அதனால, இந்தப் பெயர் வச்சாங்க. ஆனா, இந்நிறுவனம் மொழி, இனம், மதம்னு எல்லாத்தையும் கடந்தே இயங்கிட்டு வருது. தமிழ்நாடு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பு இது. சமுதாயப் பணியாற்றுவதே எங்களின் முதல் குறிக்கோள். இப்ப, மெட்ராஸ் ஒய்எம்சிஏவுல 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதுல, முக்கால்வாசி பேர் கிறிஸ்துவர்கள் அல்லாத உறுப்பினர்கள்.

இன்னைக்கு வரை கல்வியும், உடல் செயல்பாடுமே முக்கிய நோக்கங்களாக் கொண்டு செயல்பட்டுட்டு வர்றோம். 1844ல் இதை ஆரம்பிக்கும்போது இங்கிலாந்துல தொழிற்புரட்சி ஏற்பட்டுச்சு. அப்ப, எல்லோரும் பிழைப்பைத் தேடி லண்டன் வந்தாங்க. பணம் சம்பாதிச்ச பலரும் குடி, போதைப் பொருள்னு தவறான வழிகளுக்குப் போனாங்க.

சிலர் வீடுகள் இல்லாம தெருக்கள்ல வாழ்ந்தாங்க. இவங்கள மேம்படுத்தி நல்வாழ்வு கொடுக்க பனிரெண்டு வாலிபர்கள் சேர்ந்து ஒரு சர்ச்ல இந்த அமைப்பை உருவாக்கினாங்க. அதுல முதன்மையானவர்தான் சர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.  

பிறகு, இளைஞர்களை நல்வழிப்படுத்திக் கொண்டு வர்றாங்க. இதுக்கு விளையாட்டு ஒரு வழியா இருந்துச்சு. வீடு இல்லாதவங்கள அரவணைக்க விடுதிகள உருவாக்கினாங்க. அப்படித்தான் ஒய்எம்சிஏ வளர்ந்துச்சு. இன்னைக்கும் உலகம் முழுவதும் உள்ள ஒய்எம்சிஏக்கள்ல ஜிம்மும், நீச்சல்குளமும், விடுதியும் இருக்கும்...’’ என ஆரம்பத்தை விவரிக்கிறார் ஆசிர் பாண்டியன்.

பின்னர், உடல் செயற்பாட்டிற்கென 1917ம் வருடம் முதன்முதலாக ஒய்எம்சிஏவில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் இன்று சென்ைன மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள நர்ஸ் குவார்ட்டர்ஸ் இருக்கும் இடத்தில் இருந்தது. தொடர்ந்து, உடற்கல்வியியல் கல்லூரி 1920ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதை, ஹாரி குரோ பக் என்பவர் நிர்மாணித்தார். இந்தியாவின் முதல் உடற்கல்வியியல் நிறுவனம் இது.

மட்டுமல்ல. ஆசியாவின் பெரிய உடற்கல்வியியல் கல்லூரியும் இதுவேதான். இந்தக் கல்லூரி முதலில் எஸ்பிளனேடிலும், அங்கிருந்து 1923ம் வருடம் ராயப்பேட்டைக்கும் மாறியது.பிறகு, நந்தனம் பகுதியில் அன்றைய பிரிட்டிஷ் அரசு இடம் வழங்க 1932ம் வருடம் அங்கு சென்றது. அன்றுமுதல் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி என்ற பெயருடன் ெசயல்பட்டு வருகிறது. முதல் இந்திய ஒலிம்பிக் டீமிற்கு இந்த மைதானத்தில்தான் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்த ஹாரி குரோ பக் அந்தந்த விளையாட்டுகளுக்கென விதிமுறைகளை உருவாக்கினார். இதுவே பக் ரூல்ஸ் புத்தகம். இன்றும் இந்தப் புத்தகத்திலுள்ள விதிமுறைகளே இந்தியா முழுவதும் விளையாட்டுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன.இதற்கிடையே, லாரன்ஸ் சிபர் என்பவர் தெருவோரக் குழந்தைகளுக்காக நிறைய செய்தார். அவர்களைக் குளிக்கவைத்து, உணவுகள் வழங்கினார். இத்துடன் நிற்காமல் அவர்களுக்குக் கல்வி புகட்ட இரவுப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அப்படியே, சிறுவர்கள் நகரம் என்ற புதிய கான்செப்ட்டை நடைமுறைப்படுத்தினார். இதுவே, பின்னாளில் தினசரிப் பள்ளியாக உருமாறியது.

1947ம் வருடம் கோட்டை வளாகத்தில் மாகாண அரசு ஒய்எம்சிஏவுக்கு ஓர் இடம் ஒதுக்கியது. அங்கே ஒய்எம்சிஏ உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த இடம், இரண்டாம் உலகப் போரில் வீரர்களுக்கு மருத்துவம் பார்ப்பது, உணவு வழங்குவது உள்ளிட்ட நிறைய பணிவிடைகளை மெட்ராஸ் ஒய்எம்சிஏ செய்ததற்காக அரசு தானமாகக் கொடுத்தது.

பின்னர், 1960களில் கொட்டிவாக்கத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று திறக்கப்பட்டது. மொத்தமாக இந்த இரண்டு பள்ளிகளிலும் இன்று இரண்டாயிரத்து 500 பேர் படித்து வருகின்றனர்.‘‘எங்க ஒய்எம்சிஏ பற்றியும், பணிகள் பற்றியும் சொல்ல நிறைய இருக்கு. இந்த ஒய்எம்சிஏவில் உள்ள மெக்கானாகி ஹாலுக்கு காந்திஜி வந்து உரையாற்றி இருக்கார். இதை இன்றும் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள ஐந்தாவது பிளாட்பாரத்தில் இருக்கும் கல்வெட்டில் பார்க்கலாம். அப்புறம், மூதறிஞர் ராஜாஜி, டாக்டர் ஏ.எல்.லட்சுமணசுவாமி முதலியார், சி.பி.ராமஸ்வாமி ஐயர்னு நிறைய விவிஐபிக்கள் இங்க பேசியிருக்காங்க.

இன்னைக்கு எழும்பூர், தண்டையார்பேட்டை, சாத்துமா நகர்னு மூணு இடங்கள்ல சமூக ேசவை மையங்கள் வச்சிருக்கோம். இங்க இரவுப் பள்ளியும், டே கேர் சென்டரும் நடத்துறோம். நிறைய பெற்றோர் வேலைக்குப் போறதால அவங்க குழந்தைகள இந்த டே கேர் சென்டர்ல விட்டுட்டு போவாங்க. அடுத்து, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, ராயப்பேட்டைனு மூணு இடங்கள்ல ஆண்கள் விடுதியும், ஓ.எம்.ஆர்ல பெண்கள் விடுதியும் இருக்கு.

அப்புறம், கவனிக்கப்படாத விளையாட்டுகளை மேம்படுத்த மாநில அளவுல போட்டிகள் நடத்திட்டு இருக்கோம். தமிழ் வளர்ச்சிக்காக 1945ல் இருந்து தமிழ் பட்டிமன்றம் மெக்கானாகி ஹால்ல நடத்திட்டு வர்றோம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தப் பட்டிமன்றம் நடக்கும். இதுல பேசாத விவிஐபிக்களேகிடையாதுனு சொல்லலாம். அடுத்த வருஷம் 75வது வருஷக் கொண்டாட்டத்தை நடத்த இருக்கோம்.

எங்ககிட்ட மறுவாழ்வுக்கென தனி டீம் இருக்கு. அதன்மூலம்,சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டத்துல 75 வீடுகள் கட்டித் தந்தோம். கடந்த வருஷம் கேரளா வெள்ளத்துல ஏற்பட்ட பாதிப்பையொட்டி அங்க, பள்ளியும், வீடுகளும் கட்டி முடிச்சிருக்கோம்.

சமீபத்திய கஜா புயல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கு நாகப்பட்டிணத்துல நூறு வீடுகளும், ஒரு சமுதாயக் கூடமும் கட்டித்தர மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பணிகள அடுத்த மாசம் ஆரம்பிக்கிறோம். ஒரிசா பானி புயல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கு நிதியுதவி செய்திருக்கோம். இப்படி மெட்ராஸ் ஒய்எம்சிஏ பணிகள் போயிட்டு இருக்கு.

இதையெல்லாம் உறுப்பினர்கள் சந்தா உள்ளிட்ட சில வருமானங்கள் மூலமே செய்றோம். எங்களுக்கு வெளிநாட்டுப் பணம் துளியும் கிடையாது. எல்லோரும் மனமுவந்து இந்த சேவைகளை மேற்கொள்றோம். நிறைவா எங்க பணி போயிட்டு இருக்கு...’’ என்கிறார் ஆசிர் பாண்டியன்
நெகிழ்வாக!      
                   
பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா