மூணு வர்ணங்களால் ஆனதுதான் இந்தியா!



அடங்காதே ரகசியங்கள்

‘‘இப்போதைய சூழல்ல சொல்ல வேண்டிய கதை இது. புதுமுக இயக்குநர்கள் இது மாதிரி ஒரு சப்ஜெக்ட்டை எடுக்க பயப்படுவாங்க. அப்படியிருக்கதைரியமா நான் எடுத்திருக்கக் காரணம் எங்க தயாரிப்பாளரும் இயக்குநரும்தான். சரத்குமார் சார் இதுல அரசியல்வாதியா வர்றார். 24 வருஷங்களுக்கு முன்னாடி வந்த ‘அமைதிப்படை’யைப் பத்தி இப்பவும் பேசறோம்.

 இன்றைய சூழலுக்கும் அது பொருந்திப் போறதைப் பார்த்து ஆச்சரியப்படறோம். இதேமாதிரி இன்னும் இருபது வருஷங்களுக்குப் பிறகும் ‘அடங்காதே’ பேசப்படும். அந்த நம்பிக்கை யூனிட்ல எல்லாருக்கும் இருக்கு...’’நம்பிக்கையுடன் பேசுகிறார்- ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்திராபேடி நடிக்கும் ‘அடங்காதே’ படத்தின் அறிமுக இயக்குநரான சண்முகம் முத்துசாமி.ஜி.வி.பிரகாஷும் நீங்களும் நல்ல நண்பர்களாச்சே?ஆக்சுவலா அவர் அதுக்கும் மேல! பெஸ்ட் வெல்விஷர். ‘பென்சில்’ படத்துல நான் இணை இயக்குநர் ப்ளஸ் டயலாக் ரைட்டர்.

அதுல ஜி.வி. சார் பேசின முதல் வசனத்தை சொல்லிக் கொடுத்தவன் நான். அப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப வரை தொடருது.அவர் தயாரிச்ச ‘மதயானைக் கூட்டம்’ பார்த்துட்டு என் மனசுல தோணினதை சொன்னேன். முகஸ்துதி இல்லாம நான் பேசினதுல அவர் இம்ப்ரஸ் ஆகிட்டார். ‘ஷான் எதாவது கதை வச்சிருந்தா சொல்லுங்க?’ன்னார். அப்படி ரெடியானது தான் இந்தக் கதை. ஜி.வி. சார் கதையை ஓகே பண்ணின விஷயத்தை நண்பரும் காமெடி நடிகருமான பிளாக் பாண்டிகிட்ட சொன்னேன்.

உடனே, அவர் ‘ஜாக்சன் துரை’ தயாரிப்பாளர் ஸ்ரீக்ரீன் ஷரவணன் சார்கிட்ட என்னை அழைச்சிட்டுப் போய், கதை சொல்ல வைச்சார். தேங்க்ஸ் பாண்டி. தயாரிப்பாளருக்கு கதை பிடிச்சிருந்தது. ஆனா, ‘அறிமுக இயக்குநருக்கு பதிலா பெரிய இயக்குநர் பண்ணினா பெட்டர்’னு ஃபீல் பண்ணினார். அப்ப ஜி.வி. சார்தான் புரொட்யூசர்கிட்ட, ‘நீங்க என்னை நம்பி ஷானுக்கு படம் கொடுங்க. அவர் ராஜமௌலி மாதிரி வரக்கூடியவர்’னு சொன்னார். எவ்வளவு பெரிய நம்பிக்கை! இந்தப் படத்துக்காக சம்பளம் முதற்கொண்டு நிறைய விஷயங்களை ஜி.வி.பிரகாஷ் சார் விட்டுக் கொடுத்திருக்கார்.

யோகி பாபுவும் என் நண்பர்தான். ரொம்ப ரொம்ப பிரியம் உள்ளவர். காமெடி நல்லா வரணும்னு அவரே நிறைய பன்ச்சஸ் அள்ளிக் கொடுத்திருக்கார். யாருக்கு ‘அடங்காதே’னு சொல்லியிருக்கீங்க? படம் பார்த்தா விடை கிடைக்கும். மூணு வர்ணங்களால் ஆனது இந்தியா. அதை ஒரு கலரா மாத்த முயற்சி செஞ்சா என்னவாகும்? இதுதான் ஒன்லைன். படத்துல ஜி.வி. சார், சுரபி, சரத்குமார், மந்த்ராபேடி, யோகி பாபுனு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துக்குப் பிறகு சுரபி தமிழ்ல ஒரு ரவுண்ட் வருவாங்க.

முக்கியமான போர்ஷனை காசில ஷூட் பண்ணியிருக்கோம். அங்குள்ள ஒரு ஏரியால போலீஸ் அதிகாரியா ஒரு தமிழர் இருந்ததால ராணுவப் பகுதில எங்களால ஷூட் பண்ண முடிஞ்சுது. ஸ்பெஷல் பர்மிஷனை அவர்தான் வாங்கிக் கொடுத்தார். ஒளிப்பதிவை பி.கே.வர்மா பண்ணியிருக்கார். ஜி.வி. சார் இசை, நல்லா வந்திருக்கு. பிரமாதமா தீம் ஸாங் கொடுத்திருக்கார். சரத்குமார், மந்த்ராபேடி காம்பினேஷனே மிரட்டுதே..? இந்த புராஜெக்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போன்ல சரத் சாரை அப்ரோச் பண்ணினேன். ‘நடிக்கலை’னு சொல்லிட்டார்.

‘கதையைக் கேட்டுட்டு உங்க முடிவை சொல்லுங்க சார்’னு சொல்லிட்டு நேர்ல சந்திச்சு கதையை சொன்னேன். அவர் எங்க தயாரிப்பாளருக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நல்ல கதை. நான் பண்றதுக்கு கொஞ்சம் முன்ன பின்ன டைம் ஆனாலும் விட்டுடாதீங்க. கண்டிப்பா இந்தப் படத்தை பண்ணுங்க’னு சொன்னார்! ஸ்பாட்ல ஃபிட்னஸ் பத்தி நிறைய டிப்ஸ் சொல்லுவார். ‘சண்முகம் என்ன நீங்க ஜிம்முக்கே போறதில்லையா?’ னு ஹெல்த் பத்தி அக்கறையா விசாரிப்பார். ரொம்ப மென்மையானவர்.

பதினான்கு வருஷ இடைவெளிக்குப் பிறகு மந்திராபேடி தமிழ்ல ரீஎன்ட்ரி ஆகறாங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசர் கேரக்டர் என்பதால் மொதல்ல விஜயசாந்திதான் மைண்ட்ல வந்தாங்க. ஒருநாள் டுவிட்டர்ல மந்திரா பேடி மேம் போட்டோவைப் பார்த்தேன். செம டைட் ஃபிட்லுக்ல ஒரு ஸ்டில் போஸ்ட் பண்ணியிருந்தாங்க. போன்ல அவங்களைப் பிடிக்க ஒரு மாசமாச்சு. கதை பிடிச்சு உடனே ஓகே சொல்லிட்டாங்க. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இயக்குநர் ஆகியிருக்கீங்க...?

ஆமா. ஆச்சர்யம் என்னன்னா, 8 வயசு வரைக்கும் சினிமாவே நான் பார்த்ததில்ல. தியேட்டர் பக்கமே போனதில்ல! பூர்வீகம் விருத்தாச்சலம். காலேஜ் படிக்கிறப்ப சினிமா பக்கம் என்னை ஈர்த்தது சேரன் சார் படங்கள். ‘பொற்காலம்’ பார்த்துட்டு அவர் கிட்ட உதவியாளரா சேர ஆசைப்பட்டேன். சென்னை வந்ததும் நகுலன் பொன்னுசாமி சார்கிட்ட ‘வர்ணஜாலம்’, தங்கர்பச்சான் சார்கிட்ட ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, சேரன் சார்கிட்ட ‘ராமன் தேடிய சீதை’, அப்புறம் ‘பாகன்’, மணிவண்ணன் சார்கிட்ட ‘அமைதிப்படை 2’, கோபி நயினார் சார்கிட்ட ‘அறம்’ வரை ஒர்க் பண்ணியிருக்கேன்.

‘அமைதிப்படை 2’ல மணிவண்ணன் சார்கிட்ட பத்து அசிஸ்டென்ட்ஸ், ரெண்டு இணை இயக்குநர்கள் இருந்தாங்க. பெரிய டீமா ஒர்க் பண்ணினோம். படப்பிடிப்புக்கு முன்னாடி எங்க அத்தனை பேரையும் கூப்பிட்டு படத்தோட கதையை ஷாட் பை ஷாட்டா ஒன்றரை மணிநேரம் சொன்னார். அந்த ஆடியோ பதிவை இப்பவும் பொக்கிஷமா பாதுகாக்கறேன்.

அந்த படத்தோட ஷூட் கோவைல போயிட்டிருந்தப்ப ஒரு பெரிய சைஸ் டிவி வேணும்னு ஆர்ட் டிபார்ட்மென்ட்ல மணிவண்ணன் சார் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த டிவி வரவே இல்லை. ஆனா, ஷூட்டிங் ஸ்மூத்தா போயிட்டிருந்தது. எனக்கு பயங்கரமான ஆச்சரியம். வேற டைரக்டரா இருந்தா ‘பேக்கப்’ சொல்லி ஷூட்டையே நிறுத்தியிருப்பாங்க. மணிவண்ணன் சார் அதை செய்யல.

அவர்கிட்ட போய், ‘உங்களுக்கு கோபம் வந்தா கைல இருக்கிற பேடால(pad) அடிப்பீங்கனு பலரும் என்னை பயமுறுத்தினாங்க. பார்த்தா நீங்க கூலா இருக்கீங்களே’னு கேட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே ‘நாம கேட்டது கிடைக்கலைனாலும் நமக்கு சினிமா எடுக்கத் தெரிஞ்சிருக்கணும். அப்படித்தான் நான் இவ்வளவு படங்கள் எடுத்திருக்கேன்.

கேமராவுக்கு முன்னாடி இருக்கற கதாபாத்திரம், நடிகன் இதையெல்லாம் தாண்டித்தான் நாம கேட்டிருந்த அந்த செட் பிராப்பர்ட்டி இருக்கும். அதுக்காக நாம  போராடினா கதைல கவனம் செலுத்த முடியாது’னு சொன்னார். எவ்வளவு பெரிய அட்வைஸ் இது!

-மை.பாரதிராஜா