வீர நாய்கள்
- தீபச்செல்வன்
எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும் அழைக்கப்படும்போதெல்லாம் சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும் எனது வீடுகளில் எந்த வேளையிலும் சோதனைகள் நடத்துவதையும் அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும் எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும் எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும்
எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன் பார்த்துச்செல்லும்போதும் துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின் மரணத்தின் சந்தேகத்தையும் இன்னுமின்னும் எல்லாவற்றையும் சகிக்கப்பழகிவிட்டேன் எத்தனையோ தடவை ரோந்து சென்றுவிட்ட பின்னும் இராணுவத்தைப் பார்த்து குரைக்கும் என் வீட்டு நாய்க்குத்தான் இன்னும் சகிக்கத் தெரியவில்லை.
|