அஞ்சனம் தீட்டிய அரிஹர புத்திரன்



* ஆஸ்ரமம் , சுசீந்திரம்

பல்லாண்டுகளுக்கு முன், நாகர்கோவில் அருகேயுள்ள சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆஸ்ரமம். இந்த ஊரிலுள்ள சாஸ்தா கோயில் அருகே பார்வையற்ற ஒருவர் வந்து தங்கினார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அவருக்கு அது ஒரு கோயில் என்பது தெரியவந்தது. பக்தர் ஒருவரை அழைத்து எந்த கோயில் என்று கேட்டதில் அவர் இது சாஸ்தா கோயில் என்று சொல்ல, சாஸ்தாவுக்கு என்ன பெயர் என்று கேட்ட பார்வையற்றவரிடம், பதிலுரைத்த பக்தர் கண்டன் சாஸ்தா கோயில் என்று கூறினார்.  அக்கோயில் வாசலில் சில நாட்கள் அமர்ந்து மனக் கண்ணால் சாஸ்தாவை வழிபட்டார். அந்த பார்வையற்றவர். ஒருநாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரம் பார்வையற்றவரின் கண்ணில் ஒருவர் மை தடவ பார்வை
உண்டானது. கண் திறந்த போது, அருகில் சாஸ்தா நேரில் நிற்பதைக் கண்டு மகிழ்ந்தார். கண்ணில் மை எழுதி பார்வை தந்ததால் சுவாமிக்கு, “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் பெயரான மணிகண்டன்) என பெயர் பெற்றார். பொதுவாக, சாஸ்தா இரு கால்களையும் குத்திட்டு, யோக நிலையில் இருப்பார். இங்கு வித்தியாசமாக, பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் இருக்கிறார்.

வலதுகையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். வாகனமாக யானை, குதிரை உள்ளன.பிராகாரத்தில் மாடன் தம்பிரான், பூதத்தார், ஈனன், வன்னியர் ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கின்றனர். வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது.அத்திரி மகரிஷியும், அனுசூயாவும்  ஆஸ்ரமம் அமைத்து தங்கிய பகுதி என்பதால் ‘‘ஆஸ்ரமம்’’ எனப்பட்டது. தற்போது “ஆஸ்ராமம்’ என வழங்கப்படுகிறது. அத்திரி உண்டாக்கிய யாக குண்ட தீர்த்தம், கோயிலுக்கு வெளியில் உள்ளது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏப்.2, 3ல் இரண்டு நாள் திருவிழா நடக்கிறது. இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். இதை “பரிவேட்டை’ என்பர்.அஞ்சனம் தீட்டிய கண்டன் சாஸ்தா கோயில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது.

- சு.இளம் கலைமாறன்