உறைவிடம் தேடி வந்த உடையார் சாஸ்தா



*வேய்ந்தான்குளம், திருநெல்வேலி

திருநெல்வேலியின் புதிய பஸ்நிலையம் சுற்றி பெரிய குளம் இருக்கிறது. இது முந்தைய காலங்களில் அதிக பரப்பளவை கொண்டிருந்தது. தற்போதைய புதிய பஸ்நிலையத்தையும் உள்ளடக்கி இருந்தது. அந்த குளத்தின் கரையோரம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தனர். தற்போதைய குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள். அது ஒரு கோடைகாலம் ஏழு சிறுவர்களில் இரண்டு பேர் பன்னிரெண்டு வயதை தொட்டவர்கள். மீதமுள்ள ஐந்து பேரும் பதினான்கு வயது உடையவர்கள். இந்த ஐந்து பேரும் வெப்பம் தாங்க முடியாத நிலையில் குளத்துக்குள் இறங்கி, அக்னியின் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். இது நாள்தோறும் தொடர்ந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் அப்பகுதியில் எந்த குளத்திலும் நீர் இருக்காது. காரணம் வெயிலின் வேகத்தில் குளத்து நீரெல்லாம் உறிஞ்சப்பட்டு நிலமெல்லாம் வெடிப்பு ஏற்பட்டு வானம் பார்த்த பூமியாக குளம் காட்சி அளிக்கும்.

ஒரு நாள் மாடுமேய்க்கும் சிறுவர்கள் ஏழுபேரும் வெயிலின் கொடுமையிலிருந்து மீள அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். இலைகள் உதிர்ந்த அந்த மரத்தின் கீழ் ஐந்துபேருக்கும் போதுமான நிழல் கிடைக்கவில்லை. இதனால் நான் தான் இதில் இருப்பேன். இந்த இடம் எனக்கு. என அவர்களுக்கு உள்ளே முட்டல், மோதல் உருவானது. பின்னர் அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி கொண்டனர். அதில் ஒரு சிறுவன் குத்தாலநம்பி அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து மரத்தின் மீது உராய்த்துக்கொண்டிருந்தான். அப்போது. மரம் தளிர்த்தது. கிளைகள் விரிவடைந்தன. நிழல் மயமாக அவ்விடம் திகழ்ந்தது. வியப்பும், பயமும் கொண்ட சிறுவர்கள் எழுந்து நின்றனர். ஏதோ விபரீதம் நிகழ்கிறதோ என நடுங்கினர்.‘‘அர்ச்சுனா, அர்ச்சுனா’’ என்றனர்.

கூட்டத்திலிருந்த சிறுவர்கள் நால்வர். அவர்களுக்கு தெரிந்தது அது மட்டும் தானே, ஆம். இடி இடித்தால் இப்படி சொல்லுங்கள் என்று ஊர் பெரியவர்களும், பெற்றோரும் சொல்லிக் கொடுத்ததை மறக்காமல் எந்த ஆபத்து நிகழும் முன்னும் ஒப்புவிப்பார்கள். உடனே மாடுகளை அவரவர் தொழுவங்களுக்கு ஓட்டிச்சென்றனர். வீட்டில் நடந்ததை தெரிவித்தனர் சிறுவர்கள். சிறுவர்களின் பேச்சைக் கேட்ட அவர்களது பொற்றோர்கள் பெருமாள் கோயில் அர்ச்சகரிடம் சென்று கூறினர். பின்னர் அர்ச்சகருடன் சேர்ந்து அவர்களும் அவ்விடம் வந்து பார்த்தனர். சோளிபோட்டு பார்த்தபோது சாஸ்தாவின் திருவிளையாடல் என்பது தெரியவந்தது. உடனே பூரண, புஷ்கலையுடன் கூடிய அமர்ந்த கோலத்தில் இருக்கும் சாஸ்தா திருமேனியை வைத்து வழிப்பட்டு வாருங்கள். நல்லதே நடக்கும் என்றனர்.

அர்ச்சகரின் கூற்றுக்கிணங்க அந்த மரத்தின் கீழே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சிலையை நிலை நிறுத்தி வணங்கி வந்தனர். மாதங்கள் பல கடந்த நிலையில் கோடை நெருங்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் சாஸ்தா சிலை முன்னே வந்து நின்றனர். மாடுகள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்க, சாமி முன்பு கூடி இருந்து ஏழு சிறுவர்களும் தூக்குச் சட்டியில் தாங்கள் கொண்டு வந்த கஞ்சியை உண்டனர். அப்போது சிறுவர்களில் ஒருவனான நயினார் கூறினான். ‘‘உச்சி வெயிலு உச்சந்தலையை பொழக்குது எங்களுக்கு. சாஸ்தா சாமி நீ மட்டும் மரத்து நிழலுல நல்லா உக்காந்திருக்க’’ என்றான். மறுநிமிடமே சாஸ்தா சிலைக்கு மேலே இருந்த மரக்கிளைகளில் இருந்த இலைகள் உதிர்ந்தன. சாஸ்தாவின் உச்சந்தலையில் வெயில் பட்டது.

இதைக்கண்ட கஞ்சி உண்டு கழுவாத கரத்தோடு இருந்த சிறுவர்கள் வியர்த்து விறு விறுக்க வேகம் கொண்டு எழுந்தனர். அப்போது ஆறுமுகம் என்ற சிறுவன், ‘‘சாஸ்தா சாமி, இந்த பய தெரியாம பேசிப்புட்டான். இவனை மன்னிச்சிடு சாமி. எங்களை காப்பாத்து என்று மண்டியிட்டு’’ வணங்கினர். இந்தச் சம்பவம் குறித்தும் அன்றைய தினமே தங்களது பெத்தவங்களிடம் கூறினர் சிறுவர்கள். அப்போது ‘‘நம்ம குலதெய்வ சாஸ்தா உங்களுக்கு துணையா இருக்கிறாரு, இனி பெரிய குளம் பக்கம் மாடு மேய்க்க போவாதிங்கல, குளத்துக்கு கிழக்கால மேய்ச்சலுக்கு மாடுகள பத்திக்கிட்டு போங்கல’’ என்று பெத்தவங்க சொல்ல, மறுநிமிடமே பேசலானான் குத்தாலநம்பி, ‘‘எப்பா, நம்ம குலதெய்வ சாஸ்தா, நமக்கு துணையா இருக்காருன்னு சொல்லுறியே, கஞ்சி குடிச்ச கைய கழுவ கூட கட்டாந்தர காட்டுல ஒரு சொட்டு தண்ணிகூட இல்ல, மாடு கண்ணுக தண்ணிக்கு தவியா, தவிச்சு அலையுதுங்க, சாஸ்தா மனசு வச்சு குளத்துல தண்ணிய வர வைக்கலாமுலா’’ என்றான்.

‘‘ஏலே, புத்திமதி சொன்னா கேக்கணும், இப்படி விதாண்டம் பேசப்பிடாது’’ என்று முடிக்குமுன்னே ஓ வென மழை பெய்தது. இரவு முழுக்க மழை கொட்டியது. எல்லாம் சாஸ்தாவின் அருள் தான் என உணர்ந்தனர். சாஸ்தாவிற்கு மண் சுவரால் கோயில் எழுப்பினர். பனை ஓலையால் கூரை அமைத்தனர். அப்போது கூரை காற்றில் பறந்தது. மீண்டும், மீண்டும் அமைக்க கூரை மட்டும் நிற்கவே இல்லை. அன்றிரவு ஊர் அர்ச்சகர் கனவில் தோன்றிய சாஸ்தா, மழையடித்தால் நனைவேன், வெயிலடித்தால் காய்வேன் எனக்கு கூரை வேண்டாம். வெயில் தான் வேண்டும். இனி என் தலைக்கு மேல கூரை போட விரும்பாதே என்றுரைத்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும். கூரை போடும் பணியை நிறுத்–்தினார் அர்ச்சகர். அன்றிலிருந்து இவ்விடமுள்ள சாஸ்தா, வெயிலு உகந்த உடையார் சாஸ்தா என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

இந்த வெயிலுகந்த உடையார் சாஸ்தா என்ற பெயரே வெயிலுகந்த சாஸ்தா என்றும் வெயிலுகந்தான் என்றும் அழைக்கப்படலாயிற்று. இதன் பொருட்டே கோயில் அருகே இருந்த பெரியகுளம் வெயிலுகந்தான் குளம் என்று அழைக்கப்பட்டது. அது மருவி வெயிந்தான் குளம் என்றும் வேந்தான்குளம் என்றும் அழைக்கப்படலாயிற்று. இந்த வேந்தான்குளம் எந்த கோடையிலும் வற்றாது. பெரும் கோடையானாலும் எங்கேனும் ஒரு பகுதியில் குட்டை அளவில் நீரை கொண்டிருக்கும். தாமிரபரணி ஆற்றின் மூலம் பெருகும் அணைக்கட்டுகளில் ஒன்றான அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பழவூர் அணையிலிருந்து பாளையம் கால்வாய் மூலம் இந்த வேய்ந்தான்குளத்துக்கு தண்ணீர் வருகிறது.

வெயிலுகந்த உடையார் சாஸ்தா கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புணரமைக்கப்பட்டது. அப்போது கருவரையின் மேற்கூரை கான்கிரீட் தளத்தால் அமைக்கப்பட்டது. அப்போது உடைப்பு ஏற்பட்ட போதும் கட்டுமான பணியை முன்னின்று நடத்தியவர் பணியாட்களை கட்டாயப்படுத்தி கூரையை அமைத்தார். அதன் விளைவு அவர் விபத்துக்குள்ளானார். காரணம் அறிய கோயில் திருப்பணிக்குழுவினர் சென்றபோது சாஸ்தா நாமமே வெயிலு உகந்த உடையார் என்றிருக்க வெயிலை தடுக்க வண்ணம் நீங்கள் கூரை அமைக்க கூடாது என்று வந்தது.

இதையடுத்து ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் கூரையில் வெயில் வரும் அளவுக்கு துளைகள் இடப்பட்டுள்ளது. அதன் வழியே வெயில் வருகிறது. சாஸ்தாவின் தலையில் வெயில் விழுகிறது.கருவறையில் சாஸ்தா பூரண, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவர் எதிரே அவரது வாகனமான யானை இரண்டரை அடி உயரத்தில் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து காவல் தெய்வமாக சுடலைமாடன், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருட்பாலிக்கின்றனர்.

சு.இளம் கலைமாறன்