உலகின் அமைதிக்கு கல்விதான் அடித்தளம்!



உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த 10 ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களில் ஒருவருக்கு  ‘உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்’ என்கிற விருதை லண்டனைச் சேர்ந்த ‘வர்க்கி டிரஸ்ட்’ 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. ஆசிரியர் பணியில் ஈடுபாடு, கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீதான நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மதிப்புமிக்க இந்த விருதை மகாராஷ்டிரா மாநிலம், சோலாபூர் மாவட்டம் பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் டிசாலே இந்த ஆண்டு பெற்றிருக்கிறார்.

32 வயதான ரஞ்சித் சிங், பரிதேவாடி கிராமத்தில் மாவட்ட ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது மிகவும் பாழடைந்த கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கிவந்தது. பள்ளியைச் சுற்றி மாட்டுக் கொட்டகை, தீவன சேமிப்பு அறை என மிக மோசமான சூழலாக இருந்ததைத் தனது தன்னலமற்ற கடின உழைப்பின் மூலம் ரஞ்சித் சிங் மாற்றியமைத்தார்.
பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ததோடு, பாடப் புத்தகத்தில் சிறப்பு கியூ.ஆர். குறியீடு முறையினையும் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் அதை கிளிக் செய்தால் பாடங்களை ஒலி வடிவில் கேட்கவும், பாடங்களையும் கதைகளையும் காணொலி வழியில் பார்க்கலாம்.

பரிதேவாடி கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெண் குழந்தைகளைச் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் அவர்களிடையே இருந்தது. பள்ளிப் பாடப்புத்தகங்கள் அந்தக் குழந்தைகளின் தாய்மொழியான கன்னடத்தில் இல்லை. பெருமுயற்சி எடுத்து ரஞ்சித் சிங் கன்னடத்தைக் கற்றுக்கொண்டார். பின்னர் 1 முதல் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களை கன்னட மொழியில் வடிவமைத்தார்.

இவருடைய பள்ளியில் பாடப் புத்தக கியூ.ஆர். குறியீடு முன்னோட்டத் திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்த நடைமுறையை மகாராஷ்டிர அரசு அறிமுகம் செய்தது. அதுபோல், தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி (என்.சி.இ.ஆர்.டி.) கவுன்சிலின் அனைத்து பாடப் புத்தகங்களில் கியூ.ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இவரது முயற்சிகள் பெருமளவில் வெற்றி கண்டன என்பதற்கு, அந்த கிராமத்தில் தற்போது சிறுவயதில் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் கைவிடப்பட்டதே சான்று. இன்று 100 சதவீத மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இவருடைய பள்ளியே மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தற்போது திகழ்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி பெண் தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். ரஞ்சித்சிங் இந்த கிராமத்திற்கு வந்தபோது இவையெல்லாம் அந்த மக்களின் கனவிலும் சாத்தியமில்லாத நிகழ்வாக இருந்தன.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் பரிசை வென்ற ரஞ்சித் சிங், தனது பரிசுத்தொகையில் 50 சதவீதத்தை, இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வான மற்ற 9 பேருடன் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள்தான், உலகின் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள்.

அந்த வகையில், நான் கொடுப்பதிலும், பகிர்ந்தளிப்பதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். எனவே, எனது பரிசுத் தொகையில், 50 சதவீதத்தைப் பிற இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வேன். இதனால் அவர்கள் சார்ந்த நாட்டின் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

‘‘பாகிஸ்தானுடனான மோதல்களை எதிர்த்து போராடுவதற்கு இந்தியா செலவழித்த பணத்தின் அளவில், பாதியை நாம் கல்விக்கு செலவிட்டிருந்தால் பிரச்னைக்கு ஒரு அமைதியான தீர்வை கண்டுபிடித்திருக்க முடியும்” என்று கூறும் ரஞ்சித் சிங், ‘‘இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லைத் தாண்டிய மாணவர்களிடையேயான உரையாடல் உலகில் அமைதி மற்றும் செழிப்புக்கு முக்கியமானதாக இருக்கும்” என்கிறார்.

மேலும் இது குறித்து கூறும் ரஞ்சித் சிங், “மோதலில் உள்ள நாடுகள் கல்வியை விட ராணுவத்திற்காக பணத்தை செலவிடுகின்றன. ராணுவம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது இவ்வளவு பணம் செலவழித்த பின் என்ன விளைவு?

நம் முன்னோர்கள் கனவு கண்ட உலகத்தை நாம் உருவாக்க விரும்பினால், அமைதியான குடிமக்களை வளர்ப்பதற்கான நேரம் இது. நாம் உரையாடலைப் பேண வேண்டும், நட்பை அதிகரிக்க வேண்டும். அமைதிதான் தீர்வு, போர் அல்ல. அதற்கு கல்வி அவசியமான ஒன்று” என்கிறார் ரஞ்சித் சிங்.

அன்னம் அரசு