கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா?



“இந்த முழு நாடும் கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ்” எனும் ரிங்டோனை கேட்டு கேட்டு செம கடுப்பாகி போயிருந்த நமது இந்திய சிட்டிசன்கள் கொரோனா பயத்திலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். புது வருடத்தில் தடுப்பூசியும் வரப் போகிறது. இனி கவலை இல்லை என நினைக்கும் நிலையில், மீண்டும் அனைவரையும் பீதிக்குள் தள்ளியுள்ளது, இங்கிலாந்து நாட்டில் பரவும் புது வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்.

இதோ அந்த நாடு மீண்டும் தனிமை படுத்தப்பட்டுவிட்டது. பல்வேறு கட்ட ஊரடங்குகள் மீண்டும் அங்கு அமலுக்கு வந்தவண்ணம் உள்ளது. புது கொரோனா வேகமாய் பரவும். நிறைய மக்கள் செத்து வீழ்வார்கள், இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் அதை தடுக்காது. பழைய கொரோனாவைவிட இது ரொம்ப ஆபத்தானது. அது இது என்று ஏகப்பட்ட செய்திகள், கொரோனாவை விட வேகமாக ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.

வைரஸ் உருமாற்றத்தால் மனித இனத்திற்கு மேலும் அழிவு காத்திருக்கிறதா? என்ற பயம் கலந்த கேள்விதான் எல்லோர் மனதிலும் இப்போது விருட்சமாய் வளர்ந்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது,  ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது அவ்வளவு பெரிய ஆபத்தான செயலா எனக் கேட்டால், நிச்சயமாக “இல்லவே இல்லை” என்பேன்.

பொதுவாக மரபணு பிழற்வு (mutation) என்பது ஒரு இயற்கை செயலாகவே நிகழ்கிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட சிலவகை வைரஸ்களுக்கு மரபணு பிழற்வு ஏற்படும். ஒரு வைரஸின் மரபணு மாற்றம் அதன் சிறு சிறு செயல்பாடுகளை மாற்றி கொண்டேதான் இருக்கும். இது வரை கோவிட்-19 ஏ முப்பதுக்கும் மேற்பட்ட முறை மரபணு பிழற்விற்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

பலரை விரைவில் தொற்றும் குணம் கொண்ட ஒரு வீரிய மிக்க வைரஸ் உடலின் எதிர்ப்பையும் மீறி அந்த நபருக்கு பல உடல்நலக் கோளாறை உண்டு பண்ணும். அதே வைரஸ் காலப்போக்கில் அதனுள் ஏற்படும் மரபணு பிறழ்வால் அதன் வீரியத்தை வெகுவாக இழக்கும்.  இயற்கையின் நியதிபடி, ஒவ்வொரு முறையும் வைரஸில் மரபணு மாற்றம் அல்லது பிழற்வு ஏற்படும் போது, வைரஸ் தன் வீரியத்தை இழப்பதாகவே ஆராய்ச்சிகள் கூறுகிறது. வெகுசில வைரஸ் வகைகளே அரிதாக மேலும் வீரியம் அடைவதாக அறியப்படுகிறது.

இப்போது கோவிட்19 பற்றி பரவி வரும் செய்தியும் அப்படியே. கொரோனா உருமாற்றம் அடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள ஆராய்ச்சிகள் எவையும் அது மேலும் வீரியமடைந்துள்ளதை இதுவரை அறுதியிட்டு உறுதிப்படுத்தவில்லைதான். கிட்டதட்ட ஒரு வருடமாய் பீதியை கிளப்பி கொண்டிருந்த கொரோனா செய்திகள் தற்போது ஒருவாறு குறைந்து அதை குறித்த விழிப்புணர்வு மிக நன்றாக கொண்டுவரப்பட்டு, கொரோனா தாக்குதல் நன்கு நிர்வகிக்கக்கூடிய ஒரு நோயாகவே மாறியுள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய மகிழ்ச்சியான செய்தியே.

நிலைமை இவ்வாறு இருக்க மீண்டும் பூதம் கிளம்புவது போல் புறப்பட்டிருக்கும் உருமாற்ற கொரோனா குறித்து நிச்சயம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லைதான். 1960களில் காலரா வியாதி உருவான போது இதே போல்தான் அச்சத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் ஊரை காலி செய்து ஓடினர். காலப் போக்கில் அந்நோய் குறித்த ஆராய்ச்சிகள் வலுப்பெறப்பட்டு தற்போது அவை மிகச்சாதாரண ஒரு நோயாக மாறிப்போனது காலம் நமக்கு உணர்த்திய உண்மைப்பாடம்.

இதனிடையே கொரோனாவின் இரண்டாம் அலை வீசும். அதுவும் மிக வீரியமாக வீசக்கூடும் என்பதெல்லாம் ஜனத்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர அடர்த்தியான ஜனத்தொகை கொண்ட இந்தியாவிற்கு நிச்சயம் பொருந்தாதுதான். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகவே மக்கள் தொகை குறைவுதான். அங்கு கொரோனா தொற்று ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே சமூக இடைவெளியை மிக தீவிரமாக கடைபிடித்த சிலருக்கு ஒரு முறைகூட கொரோனாவின் முகாந்திரம் இல்லாமல் போயிருக்க கூடும். அது போன்ற பிரிவினருக்கு புதிதாக தற்போது தொற்று ஏற்படுவதே இரண்டாம் அலையாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. மூன்றில் ஒருவர் அறிகுறிகள் ஏதும் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகி எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்படி இருக்க இந்தியாவில் இரண்டாம் அலைக்கெல்லாம்  பெரிதாக  வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

இயற்கையாவே எதிர்ப்பு சக்தி கொண்டமக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை கொரோனா நிரூபித்து விட்டதென்னவோ உண்மைதான். இனியும் அதே ஃபார்முலாதான் எல்லா வகை நோய் தொற்றுக்கும் கைகொடுக்கப் போகிறது என்பதென்னவோ நாம் பொறுத்திருந்து அறிந்து கொள்ள வேண்டிய பெரும் உண்மையாகும்.

‘‘நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற குறளுக்கு ஏற்ப நோயின் தன்மையை நன்கு அறிந்து அச்சம் தவிர்த்து அதற்குண்டான நோய் தீர்க்கும் வழிகளை கண்டறிவதே கொரோனா மட்டுமல்ல இனியும் வரப்போகும் எல்லா நோய்களுக்கும் பெரும் தீர்வாகும். ஆக எவ்வகை வைரஸாக இருந்தாலும் சரி நல்ல உணவு பழக்கங்களும் உடல் நலம் குறித்த சீரிய விழிப்புணர்வுதான் அருமருந்தாக இருக்கும் வரப் போகும் நாட்களுக்கு.

முனைவர் தி.ஞா.நித்யா

உயிரித் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்