வாசகர் பகுதி



நீண்ட ஆயுள்  தரும் நெல்லிக்காய்

இயற்கை அளித்துள்ள பல்வேறு காய், கனி வகைகளில் மிகவும் அற்புத மருத்துவ குணமுடையது நெல்லிக்காய்.  உலர்ந்த உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பு,ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒருசில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்பு.

*நெல்லிக்காய் தைலம் முடிவளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபக சக்தியையும் அளிக்கும்.

*கோடை காலங்களில் நமக்கு பொதுவாக ஏற்படக்கூடிய தாகம், நாவறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றுக்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும்.

*நெல்லிக்கனி நீர்ச்சத்து மிகுந்தது. இது சாப்பிடுவதால் பற்களும், ஈறுகளும் பலப்படுவதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

*கணைச்சூட்டில் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலன் அளிக்கும்.

*ரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தம் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

*உணவு செரிமான இன்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும், தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

*நெல்லிக்காய் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. அன்றாடம் ஒரு தேக்கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு முடி கருமையாகவும் இருக்கும்.   

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவுகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாக பயன்படுத்தினால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

- லதா சம்பத்குமார், குடியாத்தம்.