வேப்பிலையின் மகத்துவம்!



வேப்பிலை ஒரு கசப்பு சுவை கொண்ட மூலிகையாகும். கசப்பு சுவையினை உடைய வேப்பிலையினை சாதாரணமாக மென்று விழுங்கலாம். வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம். வேப்பிலையை தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து கசாயமாகவும் பருகலாம்.
அருந்தும் விதம் எதுவாக இருப்பினும் கசப்பு சுவை வயிற்றினுள் குடற்பகுதியில் சென்றதும், அங்கு வசிக்கும் நூல் புழு, கொக்கிப்புழு, நாடாப்புழு போன்ற மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் வயிற்று உபாதையை உண்டு செய்யும் புழுக்கள் மடிந்து மலத்தின் மூலமாக வெளியேறி விடும்.

வயிற்றுப்பகுதியிலிருந்து குடல் உறிஞ்சுகளால் கசப்பு சுவை உறிஞ்சப்பட்டு ரத்தத்தை சென்றடையும்போது ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத கிருமிகள் இறந்து சிறுநீரின் வழியாக வெளியேறி விடும்.குடற்பகுதியில் வசிக்கும் புழுக்கள் வெளியேறி விடுவதால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருக்கும் முழு சக்தியும் உடலிற்கு கிடைக்கும். ரத்தத்தில் உள்ள தீய கிருமிகள் அழிந்து ரத்தம் தூய்மை அடைவதால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கின்றது.

வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், அம்மை கண்டவர்களை சுற்றி வேப்பிலை கொத்துகளைப் போடுவார்கள். அதன் காற்றே கிருமிகளை அழிக்கும் சக்தி படைத்தவை. அவர்கள் உடலில்  வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் அரைத்துப் பூசுவார்கள். இதனால் அம்மையினால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறையும்.

பற்களில் ஏற்படும் நோய்களான பல்வலி, பல் சொத்தை போன்றவைகளுக்கு வேப்பங்குச்சியினைக் கொண்டு தினமும் பல் துலக்கி வருதல் ஒரு சிறந்த மருத்துவமாகும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் வேப்பங்குச்சியை உபயோகித்து பல் துலக்கி வந்தால் மேற்கண்ட பல் உபாதைகளிலிருந்து அறவே விடு பெறலாம்.தலைப்பொடுகு, தலையில் பூச்சிக்கடியால் சொட்டை விழுதல் போன்றவை நீங்க வாரம் ஒருமுறை வேப்பிலைப் பொடியை நீர் விட்டு பிசைந்து தலையில் தடவி சுமார் இரண்டு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளித்து வந்தால் இந்த பிரச்னை நீங்கும்.

சரும பிரச்னை உள்ளவர்கள் உடல் முழுவதும் பூசிக்குளித்து வருவதால் தோல் நோய்கள் அறவே ஒழியும். கால் விரல் இடுக்குகளில் உண்டாகும் சேற்றுப்புண் உபாதை உடையவர்கள் வேப்ப எண்ணெயை அதன்மீது தடவி வருவதால் விரைவில் குணம் பெறலாம்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

அட்டைப்படம்:  தன்ஷிகா