காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்!
வாசகர் பகுதி

*சுண்டைக்காய்: உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது. உயிர்ச் சத்துகளுடன், இரும்பு மற்றும் புரதச் சத்துகள் ஏராளம் உள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். எலும்பு, பற்களுக்கு வலுவையும், உறுதியையும் அளிக்கவல்லது. பற்களின் மேலுள்ள எனாமலை பாதுகாக்கும். நரம்புகள் உறுதியுடன் இருக்க உதவும். இதனை துவையல், கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
*நெல்லிக்காய்: அருநெல்லி, பெரு நெல்லி, கருநெல்லி என மூன்று வகை உள்ளன. பெருநெல்லியில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி இதில் நிறைந்துள்ளது.
கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளை புதுப்பித்தலும், ரத்தத்தில் உள்ள நஞ்சுகளை நீக்கவும் உதவும். சிறு குடல், பெருங்குடல் நோய்களை சீராக்கும். உஷ்ண ரோகமான மூல நோய்களை படிப்படியாக குறைத்து உடலை பாதுகாக்கும்.
கண்பார்வை ஒளிபெறும். முடி உதிர்தல், புழுவெட்டு, பொடுகு பிரச்னைக்கு தீர்வளிக்கும். கண் பார்வைக்கு மிக நல்லது. பெரிய நெல்லிக்காயை துருவி வதக்கி பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்து உப்பு, தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம்.
*அத்தி: மலச்சிக்கல், வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி நிறைந்தது. கண்களுக்கு குளிர்ச்சி தரும். பற்களுக்கு பலம் உண்டாக்குகிறது. இரும்புச்சத்து நிறைந்தது.
ஒரு நாளைக்கு இரண்டு பழம் என சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி வராமல் தடுக்கலாம். இதன் பழம் மட்டுமில்லாமல் மரத்தின் பட்டை, காய்களிலும் மருத்துவப் பயன் உடையவை.
- எஸ்.சுரேந்திரன், சென்னை.
|