சிறுகதை-உழைப்(பூ)பு



அழைப்பு மணி ஒலித்தது, கதவைத் திறந்தேன். அன்னம் நின்றிருந்தாள். இடுப்பில் பூக்கூடையில்லை. கையில் மட்டும் ஒரு கட்டப்பை. ‘‘என்ன அன்னம் இந்த நேரத்தில்’’ என்றேன்.
‘‘ஊருக்குப் போறேன் லலிதாம்மா, நாலு நாளைக்கு பூ யாவாரமில்ல. இந்தப் பத்திரிகையில ஒங்க வீட்டய்யா பாஸ்கர் பேரும், ஓம்பேரும் எழுதிக்க’’ என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து ஒரு பத்திரிகையும், ஒரு ரோஸும் எடுத்து அவளே கொண்டுவந்திருந்த ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

‘‘என்ன விசேஷம்? என்று கேட்டுக் கொண்டே பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன். ‘புதுமனை புகுவிழா’ என்றிருந்தது. ‘‘வீடு வாங்கியிருக்கியா அன்னம்?, எந்த ஏரியாவுல?’’ என்றதும் அவளே சொன்னாள்; ‘‘இந்த சென்னையில வீடு வாங்க என்னால முடியுமா? எங்க ஊரு செஞ்சி, அங்க வூடு கட்டியிருக்கோம்மா’’ என்றவள் மேலும் சொன்னாள். அதை அவள் சொன்னது போல அப்படியே எழுதுகிறேன். ‘‘இங்க பாரு லலிதாம்மா, எங்க வூட்ல நாங்க மூணு பேரு. ஒரு அண்ணன் ராஜவேலு, அப்புறமா நா, அடுத்தது குமாரவேலு. 

அப்பாரு வூட்டு மனைக்கட்டு நல்ல பெருசா இருந்தது. எங்கண்ணனும், தம்பியும் மூணு பங்கா போட்டு எனக்கும் ஆயிரம் சதுர அடில நிலம் கொடுத்தானுங்க. நா அதுல ஒரு அறு நூறு சதுரத்தில சின்னதா ஒரு வூடு கட்டிக்கினேம்மா; இது இன்னக்கி நேத்தக்கில்ல, அஞ்சு வருஷ முயற்சி. எங்கண்ணனும், தம்பியும் மேஸ்திரி.

அதனால் கொஞ்சம் கொஞ்சமா குருவி சேக்கற மாதிரி சேர்த்துக் கொடுத்தேம்மா. இன்னும் கூட கடனிருக்கு; சரோஜாகிட்டதான் சீட்டு போட்டிருக்கேன். எங்க ராஜவேலும், குமாரவேலும் முன்னாடியே கட்டிட்டாங்க. நாந்தா அசால்ட்டா இருந்தேன். எங்கவூட்டு நாதாரி (அவள் புருஷன்)  பத்திரிதான் ஒனக்குத் தெரியுமே, அதவச்சுகிட்டு என்னாத்த வூடு கட்டுறதுன்னு பேசாம இருந்துட்டேன்.

இந்த பூயாவாரம் பண்றதுக்கு முன்னாடி ஒரு கல்யாண மண்டபத்திலயும், ரெண்டு வூட்டுல கூட்டி பெருக்கி பாத்திரம் கழுவுற வேலயும் செஞ்சேன்; வாய்க்கும் வயித்துக்கும் சரியா போச்சு. அப்பதான் சரோஜா சொன்னா, பூயாவாரம் பண்ணு அதுல பாதிக்குப் பாதி லாபம் வரும் அப்புடீன்னா. 

அன்னயிலேந்து ஆரம்பிச்சேன்; கல்யாண மண்டபத்து வேலைய விட்டுட்டு பூ யாவாரம் பண்ணி, சரோஜா கிட்டயே சீட்டு போட்டு, பணம் எடுத்து அண்ணங்கிட்ட கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா கட்டுன வூடு.’’

‘‘ ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்னம், உன் முயற்சிக்கு பாராட்டுக்கள் என்றேன்’’. மேலும் சொன்னாள், ‘‘ லலிதாம்மா, நீ நம்புவியோ மாட்டியோ சரியா மூணு மணிக்கு அலாரம் வச்சு எந்திருப்பேன். குளிச்சிட்டு, டீ குடிக்கும்போதே, கதிரேசன் டெம்போல வந்து வூட்டாண்ட ஹாரன் அடிப்பான். 

பையும் பணமும் எடுத்துட்டு ஓடுவேன். டெம்போல சரோஜாவும், தனும் தூங்கி வழிஞ்சிட்டு ஒக்காதிருப்பாளுங்க; நானும் போய் சேர்ந்துக்குவேன். அரை அவர்ல பூச்சந்த போயிருவோம். மல்லி, முல்ல, ரோஜா, அரளி, சாமந்தி, மரிக்கொழுந்து, துளசி, தேங்கா, வெத்தல பாக்கு எல்லாம் வாங்கிட்டு ஒன் அவர்ல திரும்பி வந்து வூட்டாண்ட வுட்டுருவான் கதிர்.

ஆறு மணிக்கு புள்ளையார் கோயில்ல லக்கேஜ எறக்கிட்டு எம்மவ கோகிலாவ ‘சார்ட்‘ பண்ண சொல்லிட்டு நாலு கடைக்கு மொறவாச தெளிச்சிட்டு வந்து ஏழு மணிக்கு யாவாரந்தொடங்கி பத்து மணி வரைக்கும் அதாவது, வெயில் வரவும், கோயில் பூட்டவும் சரியா இருக்கும். நானும், மவளும் வூட்டுக்கு போயிருவோம். போயி பழைய சோறு துண்ணுட்டு, பூக்கட்ட ஆரம்பிச்சு 1 மணி வரைக்கும் கட்டுவோம். பக்கத்து வூட்டு திலகாலிடம் காசு கொடுத்து கட்ட சொல்லுவேன்.

ஒரு மணிக்கு ஒரு டாக்டரம்மா வூட்டு வேலக்குப் போயிட்டு அவங்க குடுக்குற சாப்பாட்ட எடுத்தாந்து நானும் எம்மவளுமா சாப்புடுவோம். என் மவன் செல்வா மதிய உணவுல சாப்புடுவான். சாயங்காலம் அஞ்சு மணிக்கு அவனயும், மவளையும் கோயிலாண்ட ஒக்காரச் சொல்லிட்டு இந்த மாதிரி தெருத்தெருவா நான் சுத்திட்டு ஏழு மணிக்கு வூட்டுக்குப் போயி சோறாக்குவேன். 

போம் போதே காய் வாங்கிட்டுப் போயிருவேன். ஒம்போது மணிக்கு புள்ளங்களும் வருவாங்க. என்னக் கட்டுன மவராசனும் போதையோட வருவான். எல்லாருமா சாப்டுட்டு, டிவில நியூஸ் பாத்துட்டு படுப்போம். எம்புருசனுக்கு தெரியாம பரணியில காச மறச்சு வக்கணும். அசந்து தூங்கும் போது தலவாணிக்கடில கூட கை விட்டு தேடிப்பாப்பான் அந்தாளு. மோசமானவனக் கட்டிகிட்டு கஷ்டப்படறேம்மா.

எங்கண்ணனுக்குதாம்மா நானு நன்றி சொல்லனும். ‘இங்க பாரு அன்னம்மா, நீ ரெண்டு புள்ளங்க வச்சிருக்க; நாளைக்கு கண்ணாலம், காட்சின்னா சம்பந்தி வூட்ல சொந்தவூடு இருக்கான்னு கேப்பாங்க; ஒம்புருஷனப் பத்தி ஒனக்கு நல்லாத் தெரியுமில்ல; ஒடம்புல தெம்பிருக்கும் போது கொஞ்சம் கஷ்டப்பட்டு தாயி; வயிசானா படுத்துக்கெடக்க ஒரு எடம் வேணாமா? அப்புடீன்னுது.’ நெசமாலுமே சொல்றேன் லலிதாம்மா, தினமும் அதிகாலை மூணு மணிக்கு எந்திரிக்க கஷ்டமாதானிருக்கு; அலாரத்த அணைச்சிட்டு, திரும்ப தூங்கலாமான்னு மனசு நெனக்கும். அதிகாலைத் தூக்கம் சொகமாத்தானிருக்கும்.

அப்ப நானு நெனச்சுக்குவேன் பெரிய பெரிய மினிஷ்டருங்கெல்லாமே ராத்திரி நாலஞ்சு மணீ நேரந்தா தூங்குவாங்களாம். அவுங்களே அதிகாலம்பற எழும் போது நாமெல்லாம் எந்த மூல? மேலும் அவங்க நாட்டுக்கு மினிஷ்டர்னா நானு எங்கவூட்டுக்கு மினிஷ்டர் அப்புடீன்னு பெருமையா நெனச்சுக்குவேன். அத்தோட வூடு கட்டணும்கற எண்ணம் தான் என்னோட நெஞ்சிலயும், நினவுலையும் நிக்கும். அலுப்ப தூக்கி அப்பால போட்டுட்டு எந்திருச்சிடுவேன்.

எம்புள்ளைங்களுக்காக பாக்குறந்தாயி; இல்லாங்காட்டி என்னக்கோ நா செத்திருப்பேன் அல்லது பொறந்த வூட்டோட போயிருப்பேன். கடேசியா ஒண்ணு சொல்லுறேன் கேளுங்க; ஒருநாள் டிவில ஒரு அம்மா சொன்னாங்க, ‘‘பொம்பளங்க சோர்ந்து போயிடக்கூடாது; நின்னு போராடணும். ஜெயிக்கணுங்கற வெறி இருக்கனும், முயற்சி இருந்தால் முன்னேற்றம் தானே வரும். பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம்தான், அதற்காக பயந்து கொண்டு கூண்டுக்கிளி போல முடங்கி விடக்கூடாது. 

வறுமை நிலைக்கு பயப்படாமல் நம் திறமையை வெளிப்படுத்தி தைரியமாய்  காரியம் சாதிக்க வேண்டும். இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் கடமையைச் செய்து கண்ணியமாய் வாழுங்கள். படித்திருந்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, அவரவர்  வாழ்க்கை அவரவர் கையில்’’னு சொன்னாங்க.
 
அதக்கேட்டு நானு இன்னும் உற்சாகமானேன். மனசால வூடு கட்டுன நான் இன்னைக்கி நெசமாலும் வூடு கட்டிட்டேன். அன்னக்கி கண்டுக்காம போன ஜனங்க இன்னக்கி ஆச்சர்யமா நிமிந்து பாத்து, ‘‘என்ன அன்னம் வூடு கட்டியிருக்கியாமில்ல’’ என்று கேக்குறாங்கன்னா பாருங்க... என் உழைப்புக்கு கெடச்ச மதிப்பு தானே இது என்றதும், சந்தேகமே வேண்டாம், நிச்சயமா இது உன் உழைப்போட அடையாளம் ஆகும். 

உண்மையிலேயே நீ சக்தியின் வடிவம் தான். புருஷன் பொறுப்பு கிடையாது என்றும் சோம்பேறி என்றும் தெரிந்ததும் அதைப்பற்றி புலம்பாமல் பொறுப்பை உன் தலையில் சுமந்து வீடு கட்டியிக்கிறாய். உன்னைப் பார்க்கும் போது எனக்கு சக்தியின் வடிவமாக நினைக்கத் தோன்றுகிறது.

உன்னை மட்டுமல்ல, உன் போன்ற நிறைய பெண்களை இங்கு சக்தியாகத் தான் பார்க்க தோன்றுகிறது என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று 500 ரூபாய் நோட்டு ஒன்று வைத்துக் கொடுத்து ‘‘வாழ்க வளமுடன்’’ என்று வாழ்த்தினேன். 

‘‘வூட்டுக்கடன் அடைஞ்சா கூட பூ யாவாரம் செய்வேன். ஏன்னா எம்பொண்ணுக்கு கண்ணாலத்துக்கு நகை சீட்டு போடணுமில்ல; அதுக்காகவும் நான் 3 ½  மணிக்கு  எழுந்திருப்பேன் என்று சொல்லிக் கொண்டே ‘‘ நான் போயிட்டு வரேன்ம்மா’’ என்று கிளம்பினாள் அன்னம்.

அன்னப்பறவை பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் என்பதே அதன் சிறப்பு என்பார்கள். இந்த அன்னமும் சோம்பேறித்தனம் என்ற கெட்டதை விட்டு விட்டு முயற்சி என்ற நல்லதை மட்டும் எடுத்து, உழைத்து வீடு கட்டியிருக்கிறாள். எனவே ‘‘ஹேட்ஸ் ஆஃப்’’ அன்னம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றேன். ‘‘அன்னம்...’’உன் பெற்றோர் உனக்குப் பொருத்தமான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.

க.நாகலட்சுமி