Medical Trends



ரிலாக்ஸ்

பல் அறுவை சிகிச்சைக்குப்பின்...

பல்லில் அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வலி இருக்கும். அதனால் உணவு சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். சூடான உணவை சாப்பிடுவதால் ரத்தக்கசிவு ஏற்படும். மேலும் கடினமான உணவும் வலியை அதிகரிக்கும். பல்லில் ஒட்டிக்கொள்ளக்கூடிய மற்றும் அதிகம் மெல்லக்கூடிய உணவையும் தவிர்க்க வேண்டும். அதற்கு சூப், தயிர், ஜுஸ் என திரவு உணவுகளாகவோ, பாதி திட உணவு
களாகவோ உட்கொள்வது நல்லது.

காலில் தசைப்பிடிப்பா?

ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கும் நீர்ச்சத்து பற்றாக்குறை உண்டாகலாம். இதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக் கூடும். எனவே, அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்னால் கால்களுக்கு தளர்வு கொடுக்கும் பயிற்சிகள் அல்லது ஸ்டேஷனரி சைக்கிளிங்கும் செய்யலாம்.

ஆன்லைன் தள்ளுபடி நிர்ப்பந்தம்

ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் அள்ளித்தரும் சலுகைகளால் மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆன்லைனில் தள்ளுபடி கிடைப்பதை தெரிந்து கொள்ளும் சில வாடிக்கையாளர்கள் மருந்து விற்பனை செய்பவர்களிடமும் தள்ளுபடி கேட்கின்றனர். இதனால் வழக்கமாக மருந்து வாங்குவோரை தக்க வைக்க 10 சதவீதம் தள்ளுபடி தர வேண்டியுள்ளதாம்.

வித்தியாசமான ஸ்பா

ரெகுலராக ஸ்பாவுக்குச் செல்கிறவர்கள் உடலுக்கு மசாஜ் அல்லது மூலிகைக் குளியல், பாத சிகிச்சை என ரிலாக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். ஜப்பானில் இருக்கும் ஒரு ஸ்பாவில் காபி, டீ மற்றும் ஒயின் போன்றவற்றால் குளிக்க வைத்து குளிர வைக்கிறார்கள். ஹாகோன் கவுகெய்ன் யுனெசுன் என்ற ஸ்பாவில் மட்டும் 26 வகையான குளியல் வசதிகள் உள்ளன.

இதற்காக புத்தம் புதிய மூலப்பொருட்களை நாள் முழுவதும் உபயோகப்படுத்துகிறார்கள். இங்கு குளியலுக்காக பயன்படுத்தப்படும் தேயிலை அருகிலுள்ள மலையிலிருந்து அவ்வப்போது புதியதாக கொண்டு வரப்படுகிறது. அதே போல வறுத்த காபிக் கொட்டைகளை சூடான நீருற்றுகளில் கலந்து உபயோகிக்கிறார்கள். தோல் அழகுச்சிகிச்சைக்காக ரெட் ஒயினை மேலிருந்து அருவி போல ஊற்றுகிறார்களாம்.

காஃபி எப்போ குடிக்கலாம்?

‘எனக்கு காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கும்’ என பெரும்பாலானவர்கள் சொல்வதை பார்க்க முடியும். ஆனால், அமெரிக்க உணவியலாளரும், Women’s Health Body Clock Diet என்ற நூலின் ஆசிரியருமான லாராசிபுல்லோ, ‘காலை எழுந்தவுடன் உடலில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணமான கார்ட்டிசோல் நிறைந்திருக்கும்.

அப்போதுல் காஃபி குடித்தால் முதலில் சுறுசுறுப்பைத் தந்தாலும், போகப்போக சோர்வை அதிகரித்து, ஒருவித மந்தத்தன்மையோடு நாளை தொடர்வீர்கள். அதனால் காலையில் எழுந்து 2 அல்லது 3 மணி நேரம் கழித்து காபி அருந்துவதே சிறந்தது. அதாவது காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை காபி அருந்த சிறந்த நேரம்’ என்கிறார்.

நடிகர்களின் சைக்கிள் காதல்!

கால ஓட்டத்தின் மாற்றத்தால் பைக், கார் என்று வேகமாக ஓடிய உலகம் இன்று மீண்டும் சைக்கிளின் பக்கமே தன் கவனத்தை செலுத்தி வருகிறது. பொதுமக்களிடம் புதிய ஃபேஷனை தொடங்கி வைக்கும் நடிகர்கள் இதிலும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவதற்கான சிறந்த பயிற்சியாகவும், சுற்றுச்சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சைக்கிள் பயன்பாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்தி திரையுலகில் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றவர்கள் சைக்கிள் காதலர்கள். நம் ஊரில் ஆர்யா, விஷால், உதயநிதி போன்றவர்களும் இந்த பட்டியலில் முக்கிய இடம்பெறுகிறார்கள்.

கேன்சர் செல்களைக் கொல்லும் ஆன்டிபயாடிக்மெலனோமா என்கிற தோல் புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை அளிப்பதற்கு Nifuroxazide என்கிற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Cell Chemical Biology என்கிற அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய மருந்தை எலிகளிலுள்ள மெலனோமா செல்களின் மீது செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக மனிதர்களின் புற்றுநோய் செல்களின் மீது பரிசோதிக்கும் முயற்சியில் இருக்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆண்டிபயாட்டிக்கை வெற்றிகரமாகத் தயாரித்துவிட முடியும்.

தலைவலிக்கும் இன்ஹேலர் பயன்படுத்தலாம்!

ஆஸ்துமா பிரச்னைக்குப் பயன்படுத்தும் இன்ஹேலரை இப்போது ஒற்றைத் தலைவலிக்கும் பயன்படுத்தலாம் என்று ஜெர்மனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் அளவைக் குறைக்கவும், அந்த மருந்துகளை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், நாம் சுவாசிக்கிற காற்றின் கலவைகளை மாற்றுவதற்கும் உதவுவகிறது என்கின்றனர். அதிகமான தலைவலி தொடங்கும் முன்பு உணர்ச்சியோ அல்லது கண் பார்வையில் தொல்லையோ ஏற்படுகிற ஒற்றைத்  தலைவலியுடைய நோயாளிகளுக்கு இந்த புதிய இன்ஹேலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக Cephalalgia என்கிற இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

இதயம் மற்றும் நுரையீரல் அரங்கம்

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த விளிம்பு நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், நோய்த் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப்  பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.1 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

328 கூட்டு மருந்துக்கு தடை ஏன்?

ஒரு நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியாதபோது, இதுபோன்ற கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கும்போது ஏதோ ஒரு மருந்து நோயாளிக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கூட்டு மருந்துகள்  வழங்கப்படுகின்றன. இது நோயாளிகளுக்கு ஆபத்து என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

‘தனிப்பட்ட மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால், சில நிறுவனங்கள் இரண்டு மருந்துகளை ஒன்றாக சேர்த்து அதற்கு  மாநிலங்களில் லைசென்ஸ் பெற்று விடுகின்றனர். இரண்டு மருந்துகளை ஒன்றாக சேர்த்தால் புதிய மருந்து உருவாகிறது. இதற்கு உரிமம் பெற அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் விண்ணப்பித்து, சோதனை நடத்தி, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் இந்த  விதிமுறைகளை பின்பற்றுவதில்லை’ என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால்.

சர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மகத்துவங்கள் நமக்கு புதிதல்ல என்றாலும் நமக்குத் தெரியாதவற்றையும் International Journal of Pharmaceutical Sciences என்னும் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. 200 மிலிகிராம் கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் சாறை 30 நாட்கள் வரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் ரத்த குளூக்கோஸ், கிளைகோசைலேடட் ஹீமோகுளோபின், யூரியா, யூரிக் அமிலம் மற்றும் கிரியாட்டினின் அளவு கணிசமாக குறைவதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம். காலையில் வெறும் வயிற்றில் சுத்தமான 10 கறிவேப்பிலை இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எல்லாம் குறைவதுடன் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், அயர்ன், காப்பர் என அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ்

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதார துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.  இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற ரீதியும் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உடல்பருமனை உடனே கவனியுங்கள்

உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினருக்கு உடல்பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. குழந்தையின் தற்போதைய மற்றும் நீண்டகால உடல்நலம், கல்வி சாதனைகள் மற்றும் நல வாழ்க்கையைப் பாதிக்கும் இளம் வயது உடல்பருமனுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் மெதுவாகவும் நிலையற்றும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மக்கள் தொகையில் 11.2 சதவிகிதம் பேர் உடல்பருமன் அல்லது அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர். தற்போது உடல்பருமன் பிரச்னை அபாயகரமாக அதிகரித்து வருவதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு, அந்த பிரச்னையைக் கட்டுப்படுத்தி நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

Zero Hunger

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இப்போதும் உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் உணவு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதால் எல்லோருக்கும் உணவு கிடைக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். இதனை வலியுறுத்தும் பொருட்டு அக்டோபர் 16-ம் நாளை உலக உணவு தினமாக ஐ.நா கொண்டாடி வருகிறது. பசியற்ற நிலையை உருவாக்குவோம் என்ற அர்த்தத்தில் இந்த ஆண்டின் கருப்பொருளாக Zero Hunger என்ற கருப்பொருளைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

புற்றுநோய் மருந்துகள் பலனளிப்பதில்லையா?

புற்றுநோயாளிகளுக்கு மிக அதிக விலையுள்ள மருந்துகள் பல தரப்படுவது வழக்கம். அவை உண்மையிலேயே  நோயாளிக்கு பலன் தருகின்றனவா என்பதை அறியும் நோக்கத்தோடு பரவலாக வழங்கப்படும் 48 மருந்துகளை  ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். அந்த ஆய்வின் முடிவில், இதில் 57 சதவீத மருந்துகளால் நோயாளிகளுக்கு   குறிப்பிடத்தக்க பலன் ஏதும் கிடைப்பதில்லை என்று British Medical Journal இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டென்று மாறுது வானிலை!

உலகமெங்கும் பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக உணவு உற்பத்தி பாதிப்பு, புதிய நோய்களின் உருவாக்கம் என்று பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே, இதனை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இயற்கை வளங்களை மாசுபடுத்தாமல் பயன்படுத்த வேண்டும், மரங்களை அதிகமாக நட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம் என்பது நாம் எல்லோரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய அறிவுரை.

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்