அடுத்தவர் இசையை ஏ.ஆர்.ரகுமான் சொந்தம் கொண்டாடுகிறாரா..?



சமூகவலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மீது எல்லோரும் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவரைத் திட்டி பல பதிவுகளைக் காண முடிகிறது. ரகுமான் ரசிகர்கள் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். சமாளிக்க முயல்கிறார்கள். ஆனாலும் வசவு வீச்சு அதிகமாக இருக்கிறது.காரணம், ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய வீடியோ பேட்டி. அப்படியென்ன அதில் சொல்லியிருக்கிறார்?
ஒரு ஃப்ளாஷ்பேக். இந்தியில் பிரசித்தி பெற்ற இயக்குநர் சுபாஷ் கய், ‘யுவராஜ்’ என்ற பெயரில் சல்மான் கானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். படத்துக்கு இசை ரகுமான். வழக்கம்போல் பாடல்கள் தாமதமானது.

உடனே ரகுமானுக்கு சுபாஷ் கய் போன் செய்தார். லண்டனிலிருந்து மும்பை வந்திறங்கியதாகவும் இன்னும் சற்று நேரத்தில் மும்பை ஸ்டூடியோவில் சந்திப்பதாகவும் ரகுமான் சொல்கிறார்.
ஸ்டுடியோவில் காத்திருக்கும் சுபாஷ் கய் அங்கே பாடகர் சுக்விந்தர் சிங்கை (‘உயிரே’ படத்தில் ‘தைய்யா தையா தையா தையா...’ பாடினாரே அவரேதான்) பார்க்கிறார். அவர் ஏதோ ஓர் இசை முயற்சியில் இருக்கிறார். என்னவென்று அவரிடம் சுபாஷ் கய் கேட்க ‘உங்கள் படத்துக்குதான் ரகுமான் பாட்டு பண்ண சொல்லியிருக்கிறார்’ என்கிறார் சுக்விந்தர்.
சுபாஷ் கய்க்கு கடும் கோபம்.

அந்த நேரம் ரகுமான் ஸ்டுடியோவுக்குள் வருகிறார். ‘ஹாய், ஹாய்’ என்று தனது வழக்கமான பாணியில் சொல்லிவிட்டு சுக்விந்தரிடம் ‘பாட்டு ரெடியா?’ என்று கேட்கிறார். சுக்விந்தரும், தான் மெட்டு போட்ட பாட்டை பாடிக் காட்டுகிறார். ‘மெட்டு பிடித்திருக்கிறதா?’ என்று சுபாஷ் கய்யிடம் ரகுமான் கேட்க கய்க்கு கோபம் தலைக்கேறுகிறது.‘உங்கள் இசைக்காக கோடி கோடியாக நான் பணம் தருகிறேன். ஆனால், நீங்கள் சுக்விந்தரை மெட்டு போட சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் சுக்விந்தரையே இசையமைக்க சொல்லியிருப்பேனே’ என்று கத்துகிறார்.

‘நீங்கள் பணம் கொடுப்பது என் பெயருக்குதான். என் இசைக்கல்ல’ என்று கூலாக ரகுமான் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல், ‘நான் எப்படி பாட்டு போடுகிறேன் என்பது முக்கியமல்ல. நான் யாரை வைத்து பாட்டு போடுகிறேன் என்பதும் முக்கியமல்ல. பாட்டு நல்லா இருக்கிறதா, உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். நான் அந்தப் பாட்டை வாங்கி உங்களிடம் தரும்போது அது என் பாட்டாகிவிடுகிறது. 

இப்போது நீங்கள் இதை பார்த்ததால் தெரிகிறது. இல்லாவிட்டால் தெரியுமா? உங்களுடைய ‘தால்’ (Taal) படத்தில் நான் போட்ட பாட்டுக்கள் எல்லாம் ஹிட். அவற்றை என் ட்ரைவர் கூட போட்டிருக்கலாம். உங்களுக்கு அது தெரியுமா? உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். நான் சென்னைக்கு சென்று வேறு பாட்டு அனுப்புகிறேன்’ என்று பதிலளிக்கிறார்.

சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு ‘யுவராஜ்’ படத்தில் இல்லை. பின்னர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் அதே பாடல் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது!- இதுதான் ராம் கோபால் வர்மா வீடியோ பேட்டியில் சொன்ன சம்பவம்.

அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டது உலகம். அப்படியென்றால் ரகுமான் சொந்தமாக பாட்டு போடுகிறவர் இல்லையா என்று ஆத்திரத்துடன் கத்தி கபடாக்களை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டது. இவர்களில் இளையராஜா ரசிகர்களும் பாஜக விரும்பிகளும் அதிகம். அவர்களுக்கு ரகுமானைப் பழிதீர்த்துக் கொள்ள இது ஒரு காரணம்.

சினிமாவுக்கு இசையமைத்தல் என்பது குறித்து நம்மிடம் ஒரு புரிதல் இருக்கிறது. இயக்குநர் வருவார். இசையமைப்பாளருடன் அமர்வார். சூழலை சொல்வார். உடனே இசையமைப்பாளர் ஹார்மோனியத்தை எடுத்து தனக்கு தோன்றும் மெட்டுக்களை வாசிப்பார். அதில் பிடித்த மெட்டை இயக்குநர் தேர்ந்தெடுப்பார். ஹீரோ பெரிய நட்சத்திரம் என்றால் அவர் தேர்ந்தெடுத்து அதில் மாற்றங்களையும் சொல்வார்...

இப்படி நிறைய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். முப்பது நிமிடத்தில் ‘சின்னத் தம்பி’ பாடல்கள், எம்ஜிஆர் மெட்டுக்களை மாற்றிய பாடல்கள் என பல கதைகள் உலவுகின்றன.
மெட்டு தேர்ந்தெடுக்கப்பட்டபின் இசைக் கோர்வைகளை இசையமைப்பாளர் வாத்தியக்காரர்களுக்கு சொல்லித் தருவார். 

இதில் இரண்டு விதம். அனைத்து இசைக் கருவிகளுக்கும், தானே இசைக் குறிப்புகளைத் தரும் இளையராஜா பாணி. இது மிக அபூர்வம். அல்லது வாத்தியக்காரர்களுடன் அமர்ந்து இசைக்கருவிகளை வாசிக்கச் சொல்லி இசை கோர்ப்பது மற்றொரு பாணி.

மேற்கத்திய பாணி வேறு வகை. அங்கிருக்கும் பல இசைக் குழுக்கள் - அது பாப், ராக், மெட்டல் என எந்த வகையானாலும் - ஜாமிங் (Jamming) என்று ஒன்றை செய்வார்கள். ஒன்றாக அமர்ந்து இசையை உருவாக்குவார்கள்.

உதாரணமாக ‘பீட்டில்ஸ்’ (The Beatles) இசைக் குழுவை எடுத்துக் கொள்வோம். ஜான் லெனன், பால் மெக்கர்ட்னி, ஜார்ஜ் ஹாரிசன், ரிங்கோ ஸ்டார் என நால்வர் அடங்கிய குழு. 1962 முதல் 1970 வரை கோலோச்சியவர்கள். இன்று வரை இந்தக் குழுவின் பாடல்கள் மில்லியன்களில் விற்றுக் கொண்டிருக்கிறது.இவர்கள் நால்வரும் ஓர் இடத்தில் கூடுவார்கள். ஒருவர், தான் உருவாக்கிய மெட்டை வாசிப்பார். அதை இன்னொருவர் வேறு வகையில் பாடிக் காட்டுவார். இன்னொருவர் அதில் வேறு இசையைச் சேர்ப்பார்... இப்படி மணிக்கணக்கில் ஒரு பாட்டை மெருகேற்றிக் கொண்டிருப்பார்கள்.

சில பாடல்கள் சில மணி நேரங்களில் முடிந்துவிடும். சில பாடல்கள் மாதக்கணக்கில் நீளும்.இது ‘பீட்டில்ஸ்’க்கு மட்டுமல்ல; மைக்கேல் ஜாக்சன் முதல் இன்றைய எட் ஷீரன், சார்லி புத் வரை பொருந்தும். தங்கள் இசைக் குழுவினர் மட்டுமில்லாமல் வெளியிலிருக்கும் சிறந்த இசைக் கலைஞர்களையும் தங்கள் பாடல்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கான பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். இசைக் குறிப்புகளில் அவர்கள் பெயரையும் இணைத்துவிடுவார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்து வந்த பின்னணி முக்கியமானது. இளையராஜா போல் இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து திரைத் துறைக்கு வரவில்லை. இளையராஜா, ராஜ் கோட்டி, டி.ஆர் போன்றவர்களுக்கு ரகுமான் கீ போர்ட் வாசிக்கும் கலைஞராக இருந்தாரே தவிர அவர்களுக்கு உதவியாளராக இருந்ததில்லை. 

படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் ‘நெமிசிஸ் அவென்யூ’ (Nemesis Avenue) என்ற மேற்கத்திய இசைக் குழுவை நடத்தியவர். விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தவர். இசைக் குழுவில் இருந்ததால் அவருக்கு மேற்கத்திய பாணி ஜாமிங்கும் தெரியும், விளம்பர உலகில் இருந்ததால் தன் பாடல்களை எப்படி விளம்பரப்படுத்தி விற்பது என்ற மார்க்கெட்டிங்கும் தெரியும்.

அந்த ஜாமிங் முறையைத் தான் அவர் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அவர் மெட்டை உருவாக்கியதும் அதை அடுத்த அரை நாளில் ரிக்கார்ட் செய்து கொடுத்து
விடுவதில்லை. அந்த மெட்டில் வேறு என்ன நகாசுகள் செய்யலாம் என்று பார்க்கிறார். உதாரணமாக ‘டூயட்’ படத்தில் கதாநாயகன் சாக்சஃபோன் கலைஞன். 

அதற்காக சாக்ஸ் இசையில் உச்சத்தில் இருந்த கத்ரி கோபால்நாத்தை அழைத்து அவரை வாசிக்கச் சொல்கிறார். அதில் அவருக்குப் பிடித்ததை தனது பாடலில் சேர்த்துக் கொள்கிறார். இதனால் ரகுமானுக்கு இசை தெரியாது என்று அர்த்தமில்லை. அந்தக் கருவியில் தன்னைவிட மேம்பட்ட கலைஞனின் திறமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

‘கண்ணோடு காண்பதெல்லாம்...’ பாட்டுக்காக நித்யஸ்ரீயுடன் அமர்ந்து அவரை விதவிதமாகப் பாடச் சொல்லிக் கேட்கிறார். அதில் அவருக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்கான பணத்தைக் கொடுக்கிறார். இசை உரிமையை எடுத்துக் கொள்கிறார். மேற்கத்திய பாணியில் இசைத் தட்டு குறிப்புகளில் அவர்களது பெயரையும் இணைக்கிறார்.
இளையராஜா இசையில் இது கிடையாது.

ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு ஸ்வரமும் அவரது சிந்தனை மட்டுமே. அவரது படைப்பு மட்டுமே. அவரும் திறமையான கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறார். டிவி கோபாலகிருஷ்ணன், ஹரிபிரசாத் சவுராசியா என பல மேதைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால், எல்லாம் அவர் படைப்புக்கு.ராம் கோபால் வர்மா அந்தப் பேட்டியில் இன்னொன்றைக் குறிப்பிடுகிறார். ரகுமானைப் போல் பாடலை அலங்கரிப்பது வேறு யாருமே கிடையாது என்று சொல்கிறார். ஒரு மெட்டின் மீது பலவித நேர்த்தியான அலங்காரங்கள் செய்து பாடல் வெளி வரும்போது அது பளிச்சென்று இருக்கிறது என்கிறார்.

இளையராஜாவின் மெட்டுக்கள் சுகமானவையாக இருக்கலாம்; ஆனால், ரஹ்மான் சுமாரான மெட்டுக்களையும் பொறுமையாக செதுக்கி செவிக்கு இனியதாக மாற்றிவிடுகிறார் என்று பாராட்டுகிறார் வர்மா.சரி, இப்படி எல்லோரின் திறமையையும் பயன்படுத்திக்கொண்டு ‘இசை: ஏ.ஆர்.ரகுமான்’ என்று போட்டுக் கொள்ளலாமா என்ற கேள்வி வரும்.

நல்ல நடிகரைப் பயன்படுத்தி, நல்ல கேமராமேனைப் பயன்படுத்தி, நல்ல ஆர்ட் டைரக்டரைப் பயன்படுத்தி, நல்ல வசனகர்த்தாவைப் பயன்படுத்தி, நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்தி ஓர் இயக்குநர் ‘படத்தின் டைரக்டர் நான்தான்’ என்று கூறிக்கொள்கிறார் அல்லவா... அதுபோன்றுதான் இது.

பலப் பல வருடங்களுக்கு முன் இளையராஜாவின் புகழ் உச்சத்துக்கு வரத் தொடங்கியிருந்த காலத்தில் அவரை ‘பிலிமாலயா’வில் எம்.ஜி.வல்லபன் பேட்டி எடுத்திருந்தார். அதில் ஒரு கேள்விக்கு ‘ஒரு மெட்டு பிறக்கும்போதே அதன் தலையெழுத்து எழுதப்பட்டுவிடுகிறது. 

அதை மாற்ற முடியாது’ என்று இளையராஜா பதிலளித்திருப்பார். இது இளையராஜாவுக்கு உண்மை. ஆனால், ரகுமானுக்கு அல்ல.இளையராஜா ஒரு பாடலை நொடியில் படைத்து அடுத்த சில மணி நேரங்களில் பதிவு செய்து விடுகிறார். அந்த இடைப்பட்ட மணிகளில் அவருக்கு தோன்றும் இசைதான் அந்தப் பாடலின் தலையெழுத்து.

ஆனால், ரகுமானுக்கு இது பொருந்தாது. தனக்குள் தோன்றும் மெட்டை வாரக் கணக்கில் மாதக் கணக்கில் செதுக்கி அதன் தலையெழுத்தை மாற்றுகிறார். இளையராஜாவின் பாடல்களின் தலையெழுத்து அந்த நொடியில் முடிவாகிவிடுகிறது. ரகுமான் பாடல்களின் தலையெழுத்து ஆற அமர எழுதப்படுகிறது.

அப்படி அவர் ஆற அமர எழுத பலர் உதவுகிறார்கள். அது ரகுமான் பெயரில் வெளிவருகிறது.திரையிசையில் பணியாற்றுபவர்களுக்கு இது தெரியும். ரகுமான் மட்டுமல்ல. அவருக்குப் பின் வந்த பல இசையமைப்பாளர்கள் ரகுமான் முறையைத் தான் பின்பற்றுகிறார்கள்.

அதனால்தான் ‘இவர்கள் இசை உருவாக்குபவர்கள் (Music Composers) அல்ல, இசை நடத்துனர்கள்’ (There are no composers today, only programmers) என்று இளையராஜா அடிக்கடி
சொல்கிறார்.இசை கூட்டு முயற்சியால் உருவாகிறதா தனி மனிதனின் மேதமையால் உருவாகிறதா என்பது அத்தனை முக்கியமல்ல. மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதா இதயத்தை இதமாக்குகிறதா என்பதுதான் இசைக்கு முக்கியம்.

என்.ஆனந்தி