ரதசப்தமி -19-2-2021



காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தைநோக்கிப் பயணிக்கிறார்.  சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் ‘ரத சப்தமி’. இன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. சூரிய நாராயணப் பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது  ஐதீகம். இதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.முன்பொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் எனும் முனிவர் வசித்து வந்தார். அவர் மூன்று காலத்தையும் உணர்ந்தவர்.

அவரிடம் பலரும் சென்று தங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும்படிக் கேட்பார்கள். அவரும் கணித்துச் சொல்வார். அவர் சொல்வது அப்படியே நடப்பதால், அவருடைய புகழ் பல இடங்களுக்கும் பரவியது.ஒருமுறை, சந்நியாசி ஒருவர் காலவமுனிவரைப் பார்க்க வந்தார். அவர் காலவ முனிவரிடம்,  ‘எல்லோருடைய எதிர்காலத்தைப் பற்றியும் சொல்லும் நீங்கள், உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்ததுண்டா?’ என்று கேட்டார். காலவ முனிவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

காலவ முனிவரும் கண்களை மூடியபடியே தியானிக்கிறார். அவருக்கு எதிர்காலத்தில் தொழுநோய் ஏற்படும் என்பது அப்போதுதான் அவருக்குப் புலப்பட்டது. கண் திறந்து பார்த்தபோது எதிரே இருந்த அந்த  சந்நியாசியைக் காணவில்லை. சந்நியாசியாக வந்தவர், யமதர்மராஜன்.  நாட்கள் செல்லச்செல்ல காலவ முனிவருக்கு என்னவோ போலிருந்தது. அவர் நவகிரகங்களை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். காட்சி தந்த நவகிரகங்களிடம் தமக்குத் தொழுநோய் வராமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

அவர்களும் அவருக்கு வரம் கொடுத்தனர். ஆனால், பிரச்னை வேறு விதமாக திசை மாறியது.நவகிரகங்கள் என்பவை இறைவனின் ஏவலுக்குக் கட்டுப்படும் கருவிகள் மட்டுமே. வரம் அளிக்கும் அளவு வல்லமை பெற்றவர்கள் அல்ல.  இவர்களது இந்தச் செயல், படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தெரியவந்தது. நவகிரகங்களின் செயலில் கோபம் கொண்ட பிரம்மதேவர், ‘காலச் சக்கரத்தை இப்படி ஆளாளுக்கு இயக்கினால் எப்படி? காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களுக்கு வரட்டும்’ என்று சாபம் கொடுத்து விட்டார்.

அழுது அரற்றிய நவகிரகங்களிடம் ‘இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது’ எனவும் கூறிச் சென்றார். ஆனால், ஓர் உபாயத்தை நவகிரகங்களுக்குக் கூறியருளினார்.‘நீங்கள் பூமிக்குச் சென்று, அங்கே அர்க்கவனம் என்னும் இடத்தில் தங்கி, கார்த்திகை மாதம் தொடங்கி 78 நாட்கள் விரதம் இருங்கள்’’ என்று கூறினார்.

நவகிரகங்களும் அவர் சொல்லியபடியே அர்க்கவனத்துக்கு வரும் வழியில், அகத்திய முனிவரைச் சந்தித்தனர். அவர் நவகிரகங்களுக்கு சில வழிபாட்டு முறைகளைக் கூறினார்.  ‘திங்கட்கிழமைதோறும் எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாட்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்’ என்றார் அவர்.

அவரே தொடர்ந்து, ‘ரத ஸப்தமி நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள் அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்’ என்றும் கூறினார். இன்றும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ரத சப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது’’ என்று  கூறினார்.

சூரிய பகவானை ஆராதிக்கும் ரதசப்தமித் திருநாளில், அவரது அதிதேவதையான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் ‘ஒரு நாள் பிரமோற்சவ விழா’ நடத்தப்படுகிறது. திருமலை திருப்பதியில் ரத சப்தமியையொட்டி ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.. அதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்..

புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் னிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். அதே போல் ரதசப்தமியன்றும் வெங்கடேசபெருமாள் 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் தரிசித்து மகிழலாம்.

- ப.பரத்குமார்

பீஷ்ம அஷ்டமி என்றால் என்ன?பீஷ்ம அஷ்டமி 19-02-2021

சந்தனு மகாராஜாவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்த மகன் தேவவிரதன். கங்கா தேவி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், சத்தியவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார் சந்தனு. ஆனால் சத்தியவதியின் தந்தை மன்னருக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டார். “ஏற்கனவே உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறானே! அவனுக்குத் தானே அடுத்தபடியாகப் பட்டாபிஷேகம் செய்வீர்கள்? என் மகளும் அவளது வாரிசுகளும் அரசராக முடியாதே! ஆதலால் உங்களுக்கு என் மகளை மணம் முடித்துத் தர மாட்டேன்!” என மறுத்தார், சத்தியவதியின் தந்தை.

இதைக் கேள்வியுற்ற தேவவிரதன், சத்தியவதியின் தந்தையைச் சந்தித்து, “எனக்கு ராஜ்ஜியத்தில் ஆசையில்லை. உங்கள் மகளுக்கும் என் தந்தைக்கும் பிறக்கும் மகனே தாராளமாக முடிசூடிக் கொள்ளட்டும்! என் தந்தைக்கு உங்கள் மகளை மணம் முடித்து வையுங்கள்!” என்று கோரினான். ஆனால், சத்தியவதியின் தந்தையோ, “தேவவிரதா! உனக்கு இருக்கும் இந்தப் பரந்த மனம் உன் பிள்ளைகளுக்கே வராது! நாளை உனது பிள்ளைகள் யாராவது வந்து என் பேரனைக் கொன்று ராஜ்ஜியத்தை அபகரித்தால் என்ன செய்வேன்?” என்று கேட்டார்.

அப்போது தேவவிரதன், “இன்று முதல் நான் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வேன்! எனக்குச் சந்ததியே வேண்டாம்!” என்று சபதம் செய்தார். கடுமையான விரதத்தை மேற்கொண்டு நிறைவேற்றுபவரை ‘பீஷ்ம’ என்று குறிப்பிடுவார்கள். இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என்ற கடினமான விரதம் மேற்கொண்டபடியால், தேவவிரதன் ‘பீஷ்மர்’ என்ற பெயரைப் பெற்றார். பீஷ்மரின் சபதத்தால் மனம் மாறிய சத்தியவதியின் தந்தை, தன் மகளைச் சந்தனு மகாராஜாவுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

தனது மகன் தனக்காகச் செய்த தியாகத்தை எண்ணிப் பெருமை கொண்ட பீஷ்மரின் தந்தை சந்தனு, பீஷ்மருக்கு ஒரு வரம் அளித்தார். “நீ எப்போது உன் உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போது தான் உன் உடலை விட்டு உயிர் பிரியும்!” என்பதே தந்தை பீஷ்மருக்குத் தந்த வரமாகும்.

அதன் அடிப்படையில், மகாபாரத யுத்தத்தின் பத்தாம் நாளில் அர்ஜுனனின் பாணங்களால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் விழுந்த பீஷ்மர், உத்தராயண காலம் வந்தபின் தனது உயிர் பிரிய வேண்டும் என்று கருதினார். பொதுவாக, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலுள்ள காலமான உத்தராயண காலத்தில் மரணம் அடைபவர்கள் நற்கதி அடைவார்கள் என்று ஒரு கருத்து உண்டு. (ஆனால் இறைவனிடம் முழுமையாக சரணாகதி செய்த அடியார்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் எக்காலத்தில் மரணம் அடைந்தாலும் முக்தி நிச்சயம்) உலகோரின் அக்கருத்தை அடியொற்றி உத்தராயணக் காலத்துக்காக அம்புப் படுக்கையிலேயே காத்திருந்தார் பீஷ்மர்.

மகாபாரத யுத்தம் நிறைவடைந்த பின் தர்மபுத்திரருக்கும் மற்றவர்களுக்கும் அறநெறிகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும்உபதேசித்தார் பீஷ்மர்.சுமார் ஐம்பத்தெட்டு நாட்கள் அம்புப் படுக்கையில் கிடந்த பின், மாக மாத (தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலம் மாக மாதம்) வளர்பிறை அஷ்டமி நாளில் பீஷ்மர் தனது பூத உடலை நீத்துச் சுவர்க்கத்தை அடைந்தார். அந்த மாக மாத வளர்பிறை அஷ்டமி தான் பீஷ்ம அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடி விரதம் இருந்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நாளில் புண்ணிய நதிகளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் விசேஷமாகும். கங்கையின் மகனான பீஷ்மர் பூத உடலை நீத்து நற்கதி அடைந்த இந்நாளில் கங்கையில் நீராடுவது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும்.