நியூஸ் பைட்ஸ்



திருமதி உலக அழகி

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் திருமதி உலக அழகிப்போட்டி நடந்தது. 1984-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டி நடந்து வருகிறது. இந்தியாவின் சார்பில் ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌஷல் கலந்துகொண்டார். இவரது கணவர் கப்பற்படையில் பணியாற்றி வருகிறார்.
63 நாடுகளைச் சேர்ந்த திருமதிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் திருமதி உலக அழகிப் பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் சர்கம் கௌஷல். 21 வருடங்களுக்குப் பிறகு திருமதி உலக அழகிப் பட்டத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருப்பதால் சர்கம் கௌஷலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன் 2001-ம் வருடம் இந்தியாவைச் சேர்ந்த அதிதி கோவித்ரிகர் திருமதி உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா

கடந்த வாரம் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கேக் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மக்கள் மகிழ்ந்தனர். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த நியால் ஹர்பிசன் என்பவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது. ஆம், கிறிஸ்துமஸ் தினத்தன்று தாய்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்குத் தானே சமைத்து, விருந்து வைத்திருக்கிறார் நியால்.

சமையல் செய்வதையும், நாய்களுக்கு உணவு வழங்குவதையும் வீடியோவாக்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் நாய்களைக் குறித்து நெகிழ்வான பதிவை எழுதியிருக்கிறார். இந்த வீடியோவை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து டிரெண்டாக்கிவிட்டனர். மட்டுமல்ல, ‘‘இவர்தான் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா...’’ என்று நியாலை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

அண்டார்டிகா மாரத்தான்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அண்டார்டிகாவில் மாரத்தான் போட்டி நடப்பது வழக்கம். மைனஸ் 4 டிகிரி குளிரில், கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் பனிக்கட்டிகளின் மீதும், பனி மலைகளின் மீதும் ஓட வேண்டும். இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக உலகமெங்கும் இருந்தும் போட்டியாளர்கள் வந்திருந்தனர்.

சுமார் 100 பேர் பங்கேற்ற இந்தப் பனிக்கட்டி மாரத்தானில் அயர்லாந்தைச் சேர்ந்த சீன் டோபின் என்ற வீரர் வெற்றி பெற்றிருக்கிறார். மற்ற இடங்களில் ஓடுவதைப்போல வேகமாக அண்டார்டிகாவில் ஓட முடியாது. இதற்காக தனிப்பயிற்சிகள் எடுக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு மேல் பயிற்சி எடுத்த பிறகே போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார் சீன். போட்டி தூரத்தை எட்டி, வெற்றியைக் கைப்பற்ற சீன் டோபினுக்குக் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகியிருக்கிறது.

உலக சாதனை

இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களில் ஒருவர் விஷ்ணு மனோகர். பிரமாண்ட அளவில் சமையல் செய்து பல சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர். சமீபத்தில் 5000 கிலோ மிக்ஸ் வெஜ் கறியைச் சமைத்து உலக சாதனை படைத்திருக்கிறார். நாக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மைதானத்தில் இந்த சமையல் நிகழ்வு அரங்கேறியது. மிக்ஸ் வெஜ் கறியைச் சமைப்பதற்கான காய்கறிகளை 1,200 மாணவ- மாணவிகள் சேர்ந்து வெட்டிக்கொடுத்திருக்கின்றனர்.

வெங்காயம் 330 கிலோ, பூண்டு 66 கிலோ, இஞ்சி 66 கிலோ, உருளைக்கிழங்கு 66 கிலோ, காலிஃபிளவர் 1,100 கிலோ, கேரட் 330 கிலோ, தக்காளி 661 கிலோ, பச்சைப் பட்டாணி 330 கிலோ... என காய்கறிகளின் பட்டியல் அசர வைக்கிறது. நள்ளிரவில் தொடங்கிய சமையல் அடுத்த நாள் காலையில் தான் முடிந்தது. சுடச்சுட தயாரான மிக்ஸ் வெஜ் கறியை மாணவ- மாணவிகளுக்குப் பகிர்ந்தளித்ததோடு, அனாதை இல்லங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் விஷ்ணு.

ஐந்தாவது இடம்

உலகின் தலைசிறந்த உணவுப் பட்டியலைக்கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ‘டேஸ்ட் அட்லஸ்’ எனும் உணவு விரும்பிகளுக்கான தளம். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. இத்தாலிய உணவுகள் முதலிடத்தைத் தட்ட, கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் உணவுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இணையம் வழியாக லட்சக்கணக்கானவர்களிடம் ஆய்வு செய்து இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கிறது ‘டேஸ்ட் அட்லஸ்’. இந்தியாவின் பட்டர் கார்லிக் நான், மலாய், நெய், கீமா, கரம் மசாலாவை எல்லோரும் ஒரு முறையாவது சுவைத்துவிட வேண்டும் என்று இந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

த.சக்திவேல்