9 வயதில் 11 புத்தகங்கள்!



“யாரிடமாவது பேசினால் அவர்கள் சொல்லும் விஷயத்தைக் கொண்டு ஒரு கதை உருவாக்குவேன். அதே போல் என் கண்களில் தென்படும் சின்ன சின்னவிஷயங்களை கொண்டு ஒரு கதை எழுதிடுவேன்.
அதனாலேயே அதிகம் வெளியே போவேன். சீக்கிரமா ஒரு புத்தக ஆசிரியராக வர வேண்டும். சிறுவர்களை கதைப் புத்தகம் படிக்க வைக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு பிடித்த தலைப்புகள் வைத்து கதைகள் உருவாக்கி எழுதி வருகிறேன்” என மழைலை மொழியில் தான் ஒரு “கதை சொல்லி, கதை ஆசிரியர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் கோவையை சேர்ந்த ஒன்பது வயது ஹர்ஷவர்தினி ராஜேஷ்.

“அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். நான் 11 புத்தகங்கள் எழுத காரணம் என் பெற்றோர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், என்னை மேலும் உற்சாகப்படுத்தியது என் அக்கா வர்தினி ராஜேஷ்” என்று தன் குடும்பத்தாரை அறிமுகம் செய்யும் ஹர்ஷவர்தினி, எழுத்தாளரான கதையை தோழியரோடு பகிற்கிறார். ‘‘சிறு வயதிலிருந்தே எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. பள்ளிக்கூடத்தில் நடக்கும் பேச்சு போட்டி, நாடக போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, கதை எழுதும் போட்டி என அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன்.
அப்படி இருக்கும் போது, சிறார் எழுத்தாளர் கன்னி கோவில் ராஜா மாமா, குழந்தைகளுக்காக நிறைய ஆக்டிவிட்டிஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவர் ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி பட்டறையில் ஒரு படம் கொடுத்து அந்த படத்துக்கு கதை எழுத சொன்னாங்க. அதை அம்மாவிடம் சொல்ல சொல்ல அவங்க டைப் பண்ணி அனுப்பினாங்க. நான் எழுதின அந்த கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

அதன் பின் தொடர்ந்து ராஜா மாமாவோட ‘லாலிபப் சிறுவர்கள் உலகம்’ என்ற சிறுவர்களுக்கான குழுவில் இணைந்தேன். அங்கு கதைகள் எப்படி எழுதனும், சொல்லனும்னு நிறைய பயிற்சிகள் கொடுத்தார். அவர் சொல்லி கொடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பத்து கதைகள் எழுதினேன். எழுதிய கதைகளை ‘புத்தகமாக போடலாமா’னு, ராஜா மாமாகிட்டையே கேட்டோம். அவர் ஒரு லே அவுட் டிசைனராக இருந்ததால், புத்தக வடிவில் கதைகளை டிசைன் பண்ணி கொடுத்தார்.

அதற்கான வாழ்த்துரை முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களிடம் வாங்கினோம். அம்மா-அப்பாவின் 18வது திருமண நாளன்று என் 18 கதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். அதை பதிப்பிக்க விஜயா பதிப்பகத்தை அணுகிய போது, ‘ரொம்ப அருமையா இருக்கு, தாராளமா நாங்க பண்ணி கொடுக்கிறோம்’னு சொன்னாங்க. அந்த ஆசி எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது. 

நான் கதை சொல்ல சொல்ல, அம்மா டைப் பண்ணுவாங்க, அக்கா அதுக்கு ஏற்ற மாதிரி ஓவியம் வரைவாங்க. சின்ன வயதில் எழுதி இருப்பதால், ‘விருதுக்கு ஏதாவது முயற்சி பண்ணுங்க’னு திரைப்பட இயக்குநர் அமுதவாணன் மாமா அதற்கும் ஒரு வழிகாட்டினார்.

கோவையில் டி.ஆர்.ஓ தலைமையில் புத்தகம் வெளியிட்டோம். அங்கு வந்திருந்த தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு சார்ந்திருந்தவர்கள், நான்தான் இந்த கதை எல்லாம் எழுதினேனா என்று தெரிந்து கொள்வதற்காக, ‘ஒரு பையன், மழை, குடை, நீர்’ இந்த நான்கு வார்த்தைகள் சொல்லி கதை சொல்ல சொன்னாங்க.

அதை வைத்து ஒரு கதை சொன்னேன். அடுத்து இந்தியன் ரெக்கார்டு. அவங்க இன்னும் கொஞ்ம் கூடுதலான வார்த்தைகள் கொடுத்து என்னை கதை எழுதவும், அக்காவை அதற்கு ஏற்றர் போல் ஓவியமும் வரைய சொல்லி 45 நிமிடம் கொடுத்தார்கள். நாங்கள் 38 நிமிடத்திலேயே முடிச்சு, அதே மேடையில் ‘இளம் சாதனையாளர்கள் விருது’ பெற்றோம்” என்கிற ஹர்ஷவர்தினி தான் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறு அறிமுகம் கொடுத்தார்.

‘‘மேடையில் கிடைத்த அனுபவம் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. ஒரு புத்தகம் எழுதியாச்சு, விருதும் வாங்கியாச்சுன்னு அப்படியே உட்கார்ந்திடக் கூடாது. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். இந்த கதைகளை விட மேலும் பிரமாண்டமாக கதைகளை எப்படி எழுதணும்ன்னு சிந்திக்கணும். அந்த சிந்தனை தான் என்னை அடுத்த புத்தகம் எழுத தூண்டியது. அம்மாவின் கல்யாண நாளுக்கு 18 கதைகள் கொண்ட புத்தகம் வௌியிட்டது போல், என்னுடைய ஒன்பதாவது பிறந்த நாளுக்கு 9 கதைகள் அடங்கிய 9 புத்தகங்கள் போடலாம்னு அம்மாகிட்ட சொன்னேன். அவங்களும் சரின்னு சொல்லி இருக்காங்க.

சில சமயம் அவங்களும் என்ன மாதிரி கதைகள் எழுதலாம்ன்னு ஐடியா கொடுத்தாலும், முடிவு என்னுடையதாக இருக்கணும்ன்னு அம்மா சொல்வாங்க. அதன் படி மூன்றாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள விஷயத்தை கதையா சொல்லலாம்னு முடிவு செய்து, அதை அம்மாவிடம் சொன்னேன். ‘இதை எப்படி பாப்பா கதையா சொல்ல முடியும்’னு அம்மா கேட்டாங்க. நான் புரிந்து கொண்டதை கதையாக அம்மாவிடம் சொன்னேன். அப்படி சொன்னது இன்னும் எளிமையா இருந்தது.

அதை, ‘மிஷாசினியின் மீன் பொம்மை’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக கொண்டு வந்திருக்கேன். அடுத்து அதிவீர ராம பாண்டியன் அவர்கள் எழுதிய செய்யுள்களை அம்மா ஒவ்வொன்றாக விவரித்து எனக்கு புரிய வைத்தாங்க. அதிலிருந்து சில சாரம்சங்கள் கொண்டு ‘குகைக்குள் பூதம்’ என்ற புத்தகம் எழுதினேன். ராஜா மாமா கொடுத்த ஒர்க் ஷீட் வைத்து ‘மூன்று கண்ணன் வந்துட்டான்’ என்கிற மூன்றாவது புத்தகம்.

நான்காவது புத்தகம் ‘அரை பல்லை காணோம்’. இது அப்பாக்கு சொத்தை பல் வந்து, அதுக்காக டாக்டரை பார்க்க போகும் போது, இனி நமக்கும் சொத்தை பல் வரக் கூடாதுனா என்னென்ன செய்யணும்னு கற்பனை கலந்த ஒரு கதை. ‘ஐந்து பூதங்கள்’ என்கிற கதையை நாவல் மாதிரி முயற்சி செய்தேன்.  அடுத்து ஆறாவது கதையிலிருந்து, ஒன்பதாவது கதை வரை தொடர் கதை போல் எழுதினேன். ஒவ்வொரு கதை முடியும் போது, அதற்கான தொடர்ச்சி, அங்கு எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில் அடுத்த கதையில் வருவது போல் எழுதினேன்.

சமீபத்தில் ட்ரெண்டான ‘குக்கு குக்கு…’ பாட்டு வச்சு, ராஜா மாமா, ‘இந்த பாட்டுக்குள் நிறைய விலங்குகள், மரங்கள் எல்லாம் இருக்கு. யார் முதலில் கண்டுபிடித்து சொல்றாங்க’னு பார்க்கலாம் என்று ஒரு ஆக்டிவிட்டி கொடுத்தார். உடனே அந்த பாட்டு கேட்டு கேட்டு எழுதி வச்சு அவருக்கு அனுப்பியதும், அன்று மாலையே இதை எல்லாம் வைத்து ‘குக்கு குக்கு தவளைகள்’ என்கிற கதை உருவாக்கினேன்.

இதற்கடுத்து ‘மேக்கப் போட்ட விலங்குகள்’ என்ற புத்தகம் கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு முயற்சி செய்திருக்கிறேன். அழிந்து வரக் கூடிய விலங்கினங்கள் பற்றி அப்பா, அம்மா கொடுத்த விவரங்களை வைத்து, ‘காட்டுக்குள் திருவிழா’ என்ற புத்தகம் எழுதி இருக்கேன்.

இதில் கார்ட்டூன் சேனல்களில் வரும் கதாபாத்திரங்களை, ரீமேக் செய்து எழுதினேன். பொதுவாக என் கற்பனையில் வருவதை அப்படியே கதையாக சொல்லிவிடுவேன். அது புத்தகமாகிறது. இப்படி என் வாழ்க்கையில் நான் சந்தித்த  மற்றும் பார்க்கும் விஷயங்களை தான் கதையாக எழுதுகிறேன். நான் என்ன கதை  எழுதினாலும் அதில் ஒரு நீதி செய்தி இருப்பது போல் பார்த்துக் கொள்வேன்’’ என்கிற ஹர்ஷவர்தினியை தொடர்ந்த வர்தினி, தான் வரையும் ஓவியங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

“ஹர்ஷவர்தினி சொல்லும் கதைகளுக்கு ஏற்றார் போல் நான் ஓவியம் வரைவேன். இதோடு எட்டு தொகை பத்து பாடல்களில் இருந்து, ஐம்பது பாடல்களை ஓவியமாக வரையலாமானு அம்மா கேட்டாங்க. முயற்சி செய்து பார்க்கலாம்னு, இரண்டு நாட்களில் 39 பாடல்கள் எடுத்து அம்மா விரிவா சொன்னாங்க.

அதை மனதில் வாங்கி உடனே வரைய ஆரம்பித்தேன். அப்படி வரைந்த அந்த புத்தகத்திற்கு ‘குறுந்தொகை நில காட்சிகள்’ என பெயர் வைத்தோம். இந்த புத்தகங்களை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டாங்க. ‘நான்காம் வகுப்பு படிக்கிற குழந்தை கதைகள் எழுதுவதை இதற்கு முன் பார்க்கவில்லை. கதைகளும் அருமையாக இருக்கிறது’ என்று அவர் கூறிய உற்சாக வார்த்தைகளை கொண்டு தொடர்ந்து செயல்படுகிறோம்” என்கிறார் வர்தினி.

‘‘ஒன்பது மணி நேரத்தில் ஒன்பது கதைகள் அடங்கிய ஒன்பது புத்தகங்கள் வெளியிட்ட ஒன்பது வயது சிறுமி என்கிற கான்செப்ட்டில் ஹர்ஷவர்தினி எழுதி, வர்தினி ஓவியம் வரைந்த புத்தகங்களை ஒன்பது இடங்களில் வெளியிட்டோம்’’ என்று பெருமையோடு சொல்கிறார் இவர்களது தாயார் ராஜலட்சுமி. ‘‘புத்தகங்களை வெளியிட்ட ஒன்பது இடங்களும் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டது.

குழந்தை இல்லை என்று கோனியம்மன் கோயிலில் வேண்டி இருந்தோம். தாயார் மடத்தில் ஒரே அறையில்தான் இருவரும் பிறந்தார்கள். இந்த இரு இடங்களிலும் முதல் இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டோம். எங்கள் குழந்தைகளின் வாழ்வில் திருப்புமுனையாக இருந்த விஜயா பதிப்பகத்தில் மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டோம். கோவையின் மூன்று முக்கிய இடமான ரயில் நிலையம், மணி கூண்டு, பாவம் நீக்கக் கூடிய பேரூர் பட்டீஸ்வரர் படித்துறை, எங்கள் வீடு, குல தெய்வம் கோயில் என அடுத்தடுத்து
புத்தகங்களை வெளியிட்டோம்.

இந்த புத்தகங்களுக்கு அடுத்து இப்போது ஒரு புத்தகம்  ஹர்ஷவர்தினி எழுத அதற்கான படங்களை வர்தினி வரைந்து கொண்டு இருக்கிறாள். ‘இது வரை யாரும் இந்த கருவைக் கொண்டு புத்தகமாக எழுதியதில்லை. பெரியவங்களே கொஞ்சம் யோசிப்பார்கள். குழந்தை செய்திருக்கா...அதை நாங்கள் வெளியிடுகிறோம்’ என்று விஜயா பதிப்பகத்தார் கூறியுள்ளார்கள்.

மேலும் அந்த புத்தகத்தை தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கையால் வெளியிடலாம் என்று சொல்லி இருக்காங்க. குழந்தைகளுக்கு பிடித்திருப்பதை செய்வதற்கு நாங்கள் தடையாக இல்லை. அதே போல் நாங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் விரும்பியது செய்வதற்கு ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருக்கிறோம்” என்கிறார் ராஜலட்சுமி.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: சதீஷ்