பன்றிக் காய்ச்சலை கண்டறிய புதிய பரிசோதனை!



கடந்த சில வாரங்களாக இந்திய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இரண்டு வார்த்தைகள், ‘பன்றிக் காய்ச்சல்’. தமிழ்நாட்டிலும், ஆந்திரா, தெலங்கானா, குஜராத் போன்ற வட மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கானவர்களைப் பலிவாங்கிவிட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

சாதாரண ஃபுளூ காய்ச்சலின் ஒரு வகைதான் பன்றிக் காய்ச்சல். இன்ஃபுளூயன்சா - A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் இந்த நோய் வருகிறது. இதை ‘ஸ்வைன் ஃபுளூ’ (Swine Flu) என்கிறார்கள்.

‘ஸ்வைன்’ என்றால் ‘பன்றி’ என்று பொருள். இது முதன்முதலில் பன்றிகளைத் தாக்கிய காரணத்தால், இந்தப் பெயரைப் பெற்றது. நாளடைவில் இந்த வைரஸ் கிருமிகள் வீரியம் பெற்று, பன்றியிடமிருந்து மனிதரைத் தாக்கத் தொடங்கியது.

இப்போது பரவி வருவது பன்றிகளிடமிருந்து அல்ல; நோயுள்ள மனிதரிடமிருந்து மற்றொரு மனிதரைத் தாக்குகிறது. முதன்முதலில் 2009ல் மெக்ஸிகோ நாட்டில்தான் இந்த நோய் தோன்றியது. அங்கிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் பரவி, இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தக் காய்ச்சல் ஒரு அதி தீவிர தொற்றுநோய்.

நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி அடுத்தவர்களுக்குத் தொற்றி நோயை உண்டாக்கும்.

நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவற்றின் மூலம் அடுத்தவர்களுக்கும் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, தொடர் தும்மல், இருமல், தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல், மார்புச் சளி, மூச்சடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

சுகாதாரம் குறைந்த இடங்களிலும் நெருக்கமான இடங்களிலும் வசிப்பவர்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச் சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வர்கள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்து பவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது.

பன்றிக்  காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தை களும் முதியவர்களும்தான். இவர்களுக்குக் காய்ச்சல் கடுமை யாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சி நோய், ‘நிமோனியா’ என்று அறியப்படும் நுரையீரல் அழற்சி நோய், மூச்சுச் சிறு குழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக் காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரைக் கொண்டுவந்து விடும்.

நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளியை எடுத்து ‘ரியல் டைம் பிசிஆர்’ (Real Time PCR) எனும் பரிசோதனை செய்து இந்த நோய் உறுதி செய்யப்படுகிறது. ‘வைரஸ் கல்ச்சர்’ (Virus Culture) எனும் பரிசோதனையும் இந்த நோயை 100 சதவீதம் உறுதி செய்ய உதவுகிறது. ஆனால், இந்த இரண்டு பரிசோதனைகளும் பெரிய நகரங்களில் உள்ள நவீன மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது.

இதற்கான கருவி மற்றும் பரிசோதனை மருந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள 3000 ரூபாய் வரை செலவாகிறது. இதனால் கிராமப்புற நோயாளிகளுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் இது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

 இவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளது என்று கணிப் பதற்குள் நோய் தீவிரமடைந்து உடலில் பல சிக்கல்களை உருவாக்கி உயிரை மாய்த்து விடுகிறது. இந்தச் சூழலில் மலிவு விலையில் புதிய பரிசோதனைக் கருவியை பெங்களூரில் உள்ள ‘மோல்பயோ டயக்னாஸ்டிக்ஸ்’ (Molbio diagnostics) நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்தக் கருவியின் பெயர் ‘ட்ரூனேட்’ ஹெச்1என்1 (TrueNat H1N1).

இது எப்படி வேலை செய்கிறது?

நோயாளியின் சளியை எடுத்து ‘ட்ரூபிரிப்’ (TruePrep) எனும் கருவியில் செலுத்திப் பகுப்பாய்வு செய்து, அதிலிருந்து ஆர் என் ஏ (RNA) எனும் நியூக்ளிக் அமிலத்தைப் பிரிக்கிறார்கள். இதை பிசிஆர் (PCR) எனும் வேதி ஊக்கிகளும் ‘ரிவெர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்’ (Reverse Transcriptase) எனும் நொதியும் உள்ள ஒரு சோதனைக்குழாயில் கலக்கிறார்கள். சுமார் 20 நொடிகளுக்குப் பிறகு இதை எடுத்து ‘ட்ரூனேட்’ கருவியில் உள்ள ஒரு மைக்ரோ சிப்பில் வைத்து அந்தக் கருவியின் அனலைசரில் சொருகுகிறார்கள்.

இதில் ‘ரிவெர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ்’ நொதியானது ஆர்என்ஏ நியூக்ளிக் அமிலத்தை காம்பிளிமென்டரி டிஎன்ஏவாக மாற்றி, பல மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கிறது. இது பன்றிக் காய்ச்சலுக்குரிய வைரஸைச் சேர்ந்ததாக இருந்தால், கருவியில் உள்ள ஃபுளூரசன்ட் புரோப் எரிந்து, கிராஃப் கோடுகளாக காண்பிக்கிறது. அப்படி இல்லாவிட்டால் ஃபுளூரசன்ட் கோடுகள் தெரியாது. இதன் மூலம் அந்த நபருக்குப் பன்றிக் காய்ச்சல் உள்ளதா, இல்லையா என்று 100 சதவீதம் உறுதி செய்துகொள்ளலாம்.

பழைய முறையில் பரிசோ தனை முடிவைத் தெரிந்து கொள்வ தற்கு இரண்டு நாட்கள் வரை ஆகும். ஆனால், இதில் ஒரு மணி நேரமே போதும். இதை ஒருமுறை பயன்படுத்த 850 ரூபாய்தான் செலவாகிறது. இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதனால் பன்றிக் காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, அந்த நோயாளியை சிறப்பு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்து உயிரைக் காப்பாற்ற முடியும். இதைப் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

 (இன்னும் இருக்கு)