தத்தவம் மச்சி தத்தவம்

‘‘திருடு போன இடத்துக்கு கைரேகை ஜோசியரை ஏன் அழைச்சிட்டு வந்திருக்கீங்க ஏட்டய்யா..?’’ ‘‘திருடினவன் ஒழுங்கா மாமூல் கொடுப்பானான்னு தெரிஞ்சுக்கத்தான்..!’’
‘‘எங்கேயும் முன்னேற்பாட்டோட வர்றதுல தலைவர் ரொம்ப கில்லாடியா... எப்படிச் சொல்றே?’’ ‘‘டாக்டர் பட்டம் வாங்கறதுக்கு நூறு பேஷன்டுகளோட வந்திருக்காரே..!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘ஏன் டாக்டர்... கேட்ட ஃபீஸை தரலைன்னா கொன்னுடுவேன்னு இவரை மிரட்டினீங்களாமே?’’ ‘‘சேச்சே! ஆபரேஷன் பண்ணிடுவேன்னுதான் சொன்னேன்..!’’ - சரவணன், கொளக்குடி.
‘‘ஆனாலும் நம்ம தலைவருக்கு தன்னம்பிக்கை ரொம்ப அதிகம்...’’ ‘‘எப்படிச் சொல்றே?’’ ‘‘மீட்டிங்குக்கு போனா கண்டிப்பா செருப்பு கிடைக்கும்னு வெறுங் காலோட போறாரே...’’ - மு.மதிவாணன், அரூர்.
‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’ ‘‘எவனோ ‘எல்.கே.ஜி வரை படித்த தழலே... நைன்ட்டி கே.ஜி புழலே வருக’ன்னு வரவேற்பு பேனர் போட்டிருக்கானாம்..!’’ - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘இலவசத் திருமண விழாவுக்கு தலைவரை தலைமை தாங்கச் சொன்னது தப்பாப் போச்சு...’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’ ‘‘அவரும் ஒரு பொண்ணுக்கு தாலி கட்டி ஆரம்பிச்சு வைக்கணுமாம்..!’’ - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
‘‘தலைவர் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தாலும், இன்னமும் அவரை சினிமாக்காரராதான் ஜனங்க பார்க்கறாங்க...’’ ‘‘எப்படிச் சொல்றே..?’’ ‘‘அவர்கிட்ட நிறைய பேரு அரசியல்ல நடிக்க சான்ஸ் கேட்டு வர்றாங்களே!’’ - உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
|